நடிகர் எஸ்.வி சேகரை கைது செய்யும் காவல்துறை நடவடிக்கைக்குத் தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
நிர்மலா தேவி விவகாரம் குறித்து விளக்கமளிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூட்டியிருந்த செய்தியாளர்கள் சந்திப்பின் முடிவில், பெண் செய்தியாளர் ஒருவரின் கன்னத்தில் ஆளுநர் தட்டிக்கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு ஆளுநர் வருத்தம் தெரிவித்தார். ஆனால், நடிகரும் பா.ஜ.க-வைச் சேர்ந்த உறுப்பினருமான எஸ்.வி.சேகர், தனது முகநூல் பக்கத்தில், ஆளுநருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த அவதூறான வகையில் கருத்து பகிர்ந்திருந்தார். இவரது கருத்துக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜனும் இதனைக் கண்டித்தார். அவருக்கு எதிராக ஆங்காங்கே புகார்களும் கொடுக்கப்பட்டன.
இதையடுத்து, பெண்கள் வன்கொடுமைச் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் எஸ்.வி சேகர் மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவுசெய்தனர். இந்த வழக்கு விசாரணை வரும் வரை தன்னைக் கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி சேகர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதை இன்று விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா,''வழக்கமாக நான் யாரையும் கைதுசெய்யத் தடை விதிப்பதில்லை. எனவே, இந்த வழக்கில் கைதுசெய்ய காவல்துறையினருக்குத் தடை விதிக்க முடியாது. முன்ஜாமீன் மனு, கோடைக்கால நீதிமன்றத்தின் முதல் அமர்வில் விசாரிக்கப்படும். வழக்கில் இணைப்பு மனுதாரர்கள் அனைவரையும் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை" என்றார்.