தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரானா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கண்பிடிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளும் நாடு முழுவதும் உள்ள முன்கள பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மத்திய அரசின் வழிகாட்டுதல் படி ஏப்ரல் 1 முதல் மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட பாதிப்புக்கு உள்ளாக கூடியவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இந்நிலையில் வாட்ஸ் அப்பில் ஒரு தவறான தகவல் உலவுகிறது. அதில் தமிழகம் தடுப்பூசிக்கான விதிகளை மாற்றி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் வழங்கப்படும் எனவும், மேலும் சென்னையில் குடியிருப்புவாசிகள், நிறுவனங்கள் தாங்களாகவே தடுப்பூசி முகாம்களை ஏற்பாடு செய்யலாம் என்றும், தடுப்பூசி செலுத்த குடியிருப்போர்கள் அல்லது பணியாளர்கள் குறைந்தபட்சம் 40 நபர்களுக்கு மேல் இருக்க வேண்டும் எனவும், மேலும் இத்தகவலை சென்னை மாநகராட்சிக்கு ஒரு நாள் முன்பாக தெரிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பாடு செய்யும்பட்சத்தில் குழந்தைகள் தவிர அனைவருக்கும் சென்னை மாநகராட்சி தடுப்பூசி வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை சென்னை மாநகராட்சி முற்றிலும் மறுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. இது சம்பந்தமாக தமிழக பொது சுகாதார இயக்குனர் Dr. செல்வநாயகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் -டம் தெரிவித்ததாவது, தற்போது அதிகாரப்பூர்வமாக மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளும் 1-1.5 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுப்படுகிறது. சிலர் தவறான தகவல்களை பரப்பி தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.
தமிழக தேர்தல் ஏப்ரல் 6 அன்று நடைபெற உள்ளது. அதனால் தேர்தல் பணிகளில் ஈடுபடுவோருக்கு வயது வித்தியாசமின்றி தடுப்பூசி வழங்கப்படுகிறது. கோவாக்சின் மற்றும் கோவீஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளூம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கிறது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் தனியார் மருத்துவமனைகளில் அதிகபட்சம் ரூபாய் 250 க்கும் கிடைக்கிறது.
மேலும், சென்னையில் வீடுதோறும் தடுப்பூசி செலுத்தும் அரசின் அனுமதிக்காக உள்ளது. தனியார் மருத்துவமனைகளும் இத்திட்டத்தில் முனைப்புடன் உள்ளன. தற்பொழுது அனுமதியின்றி தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு எந்த வித அபதார தொகையும் இல்லை. ஆனால் அவர்களுக்கு பின்னாளில் ஏற்படும் மருத்துவ ரீதியிலான பிரச்சனைகளுக்கு உரிய காப்பீடு கிடைக்காது. தமிழகம் முழுவதும் மார்ச் 25 வரையில் மொத்தம் 25,39,397 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 5,99,044 நபர்களுக்கும், புதன்கிழமை மட்டும் 31,633 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் நேற்று (மார்ச் 25) புதிதாக 1779 பேருக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 664 பேருக்கு பாதிப்பு. மேலும் 11 பேர் உட்பட மொத்த இறப்பு 12,641. குணமடைந்தோர் எண்ணிக்கை 1027 உட்பட 8,50,091. தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையின் அறிக்கையின்படி, தற்போது சிகிச்சையில் இருப்போர் 10,487, மொத்த பாதிப்பு 8,73,219. அதில் ஆண்கள் 5,27,343, பெண்கள் 3,45,841, மூன்றாம் பாலினத்தவர்கள் 35.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.