சினிமா துறையில் சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த தற்கொலை சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்ததது. அப்போதுதான் தெரிந்தது தற்கொலைக்கு காரணமாக அன்பானவரிடம் கடன் வாங்காத சினிமா பிரமுகர்களே இல்லை என்று. ஆனாலும் துணிச்சலாக நண்பனின் சாவுக்கு நியாயம் கேட்டு, அந்த பிரமுகரின் மீது புகார் செய்தார், தயாரிப்பாளர் கம் நடிகர்.
ஆரம்பத்தில் பரபரப்பாகத்தான் போலீசாரும் நடவடிக்கை எடுத்தார்கள். தி.நகர் துணை கமிஷனர், அன்பானவரின் ரூ. 100 கோடி சொத்துக்களை முடக்கினார். அடுத்த சில நாட்களிலேயே, வழக்கு அங்கிருந்து மாற்றப்பட்டது. மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட பின்னர், வழக்கு கிணற்றில் விழுந்த கல்லாக கிடக்கிறது.
இந்நிலையில் தற்கொலைக்கு காரணமாக இருந்த, அந்த பிரமுகரோ முதல்வர் துணை முதல்வர் கலந்து கொண்ட காதணி விழாவில் கலந்து கொண்டு முன் வரிசையில் அமர்ந்திருந்தார். சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சருடன் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்.
இது சமூக வலை தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டாலும், போலீசார் அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை. இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கும் நண்பனை இழந்த தயாரிப்பாளரும் நடிகருமானவர் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, ‘தமிழகத்தில் இந்த வழக்கை விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே வழக்கை சிபிஐ அல்லது வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்’ என கேட்டு நீதி மன்றத்தில் வழக்குத் தொடரலாம். அதற்கு ஆதாரமாக, முதல் அமைச்சர், அமைச்சர்களுடன் அன்பானவர் கலந்து கொண்ட புகைப்பட்டங்களை சமர்பிக்கலாம்’ என்று வக்கீல்கள் ஆலோசனை சொல்லியுள்ளனர்.
தமிழகத்தில் ஏற்கனவே ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டது போல், இந்த வழக்கு விசாரணையில் இருப்பதால் சிபிஐ போன்று வேறு ஒரு ஏஜென்சியிடம் ஒப்படைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.