அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு ஒபிஎஸ் இபிஎஸ் இடையே இருந்து வந்த பனிப்போர் மீண்டும் ஒருமுறை வெடித்துள்ளது.
அதிமுக ஆட்சியில் முதல்வராக இபிஎஸ், துணைமுதல்வராகஓபிஎஸ் இருந்து வந்ததும், கட்சியில் ஒபிஎஸ் ஒருங்கிணைப்பாளராகவும், இபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வந்தது அனைவரும் அறிந்த ஒன்று. இதில் இவர்கள் இருவருக்குள்ளும் மறைமுக போட்டி நிலவி வந்தாலும், கட்சி தொடர்பான அறிக்கைகள் இருவரது பெயரும் சேர்ந்தே அதிமுகவின் லெட்டர் பேட்டில் அறிக்கை வெளியிடப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஹாட்ரிக் வெற்றியை நோக்கி களமிறங்கிய அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இதனைத்தொடர்ந்து இருவருக்குள்ளும் இருந்த போட்டி வெளிப்படையாக தெரிந்தது. அப்போது செங்கல்பட்டு மருத்துவமனையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மரணமடைந்த நோயாகள் குறித்து அறிக்கை வெளியிட்ட ஒபிஎஸ் அதிமுக கட்சி லெட்டர் பேடை தவிர்த்து தனது சொந்த லெட்டர் பேடில் அறிக்கை வெளியிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து 66 எம்எல்ஏக்களுடன் அதிமுக சட்டசபையில் எதிர்கட்சியாக அமைநத நிலையில், எதிர்கட்சி தலைவர் யார் என்ற போட்டியில் இருவரின் ஆதரவாளர்களும் தங்களது தலைவருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியது பெரும் சர்ச்யை ஏற்படுத்தியது. இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், ஆதங்கத்தில் உள்ள ஓபிஎஸ்-க்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி கொடுத்து சமாதானப்படுத்தலாம் என்ன இபிஎஸ் தரப்பு எண்ணிக்கொண்டிருந்த நிலையில், சசிகலாவுடன் இணைந்து ஒபிஎஸ் அதிமுகவை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியானது.
இதனால் எச்சரிக்கையான இபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றியது. இதனால் ஒபிஎஸ் இபிஎஸ் இடையே மறைமுகமான மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், கட்சியின் லெட்டர் பேடை பயன்படுத்தாமல் இருவரும் தனித்தனியான தங்களது பெயரில் உள்ள லெட்டர் பேடில் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். மேலும் தனி லெட்டர் பேடை பயன்படுத்தும் ஒபிஎஸ்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக இபிஎஸ் தனது பெயரில் உள்ள லெட்டர் பேடை பயன்படுத்தி நேற்று தனி அறிக்கை வெளியிட்டார்.
இபிஎஸின் இந்த செயலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மீண்டும் ஒபிஸ் தனது தனி அறிக்கையில், கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் ஆம்புலன்ஸ்களில் பல மடங்கு அதிக கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு இதனை விசாரித்து முறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த லெட்டர் பேட் சர்ச்சை காரணமாக பெரும் கவலையில் இருக்கும் அதிமுக தொண்டர்கள் இந்த சர்ச்சை முடிவுக்கு வரும் எனறு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.