மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன், தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரச்சாரத்தில் அக்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். கமல் ஹாசன் ஞாயிற்றுக்கிழமை அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு ஹோட்டலில் தங்குவதற்கு வந்த போது அவருடைய காரை இளைஞர் ஒருவர் தாக்க முயன்றுள்ளார். கமல் ஹாசனுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை இருப்பினும் அவருடைய காரின் முன் பக்க கண்ணாடி உடைந்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியுமான ஏ.ஜி. மௌரியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கமல் ஹாசனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், இந்த அசம்பாவிதத்தில் ஈடுபட்ட இளைஞரை காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாகவும் கூறியுள்ளார். இது போன்ற சலசலப்புகளுக்கு அஞ்சமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க : சக்கர நாற்காலியில் அமர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் - மமதா பானர்ஜீ
கார் கண்ணாடியை உடைக்க முற்பட்ட இளைஞர் குடித்துவிட்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். அவரை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் மடக்கி பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil