Tamil Nadu Budget 2021 : தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள திமுக, தன்னுடைய முதல் நிதி நிலை அறிக்கையை, காகிதமற்ற இ - பட்ஜெட்டாக தாக்கல் செய்து வருகிறது. கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் இந்த நிதி நிலை அறிக்கை தாக்கல் நிகழ்வில் பல்வேறு முக்கிய திட்டங்களை அறிவித்து வருகிறார் தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.
தமிழக பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் என்ன?
உலக வெப்பமயமாதல் மற்றும் பசுமையக வாயுக்கள் வெளியிட்டால் பல்வேறு காலநிலை மாற்றங்களையும், இயற்கை சீற்றங்களையும் உலக மக்கள் எதிர் கொண்டு வருகின்றனர். ஜீரோ- எமிஷன் டார்கெட்டினை அடைந்து அனைத்து நாடுகளும் பசுமையக வாயுக்கள் வெளியீடு மற்றும் உட்கிரத்துக் கொள்ளுதலை 2050ம் ஆண்டுக்குள் சமநிலை செய்ய வேண்டும் என்றும் ஐ.பி.சி.சி. சமீபத்தில் அறிவிக்கை வெளியிட்டிருந்தது.
தொடர்ந்து காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டு வரும் சீரழிவுகளை கருத்தில் கொண்டு பசுமையான தமிழகத்தை உருவாக்கும் திட்டங்களை அறிவித்தார் பி.டி.ஆர். முதல்வர் தலைமையில் ரூ. 500 கோடி மதிப்பில் இந்த இயக்கம் அமைக்கப்படும் என்றார். 33% தமிழக பரப்பு காடுகளாக மாற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.
இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் உருவாக்கப்படும் என்றும் பருவநிலை மாற்ற மேலாண்மை மற்றும் தணிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த ₹500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும் என்றும் பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
நாட்டு மரங்களை அதிக அளவு நடுவதற்காக பெரும் மரம் நடவுத் திட்டம் அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்றும் ஈர நிலங்களை மேம்படுத்த தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம் உருவாக்கப்பட்டு, அடுத்த 5 ஆண்டுகளில் 100 ஈர நிலங்கள் கண்டறியப்பட்டு புத்துயிர் அளிக்கப்படும் என்றும் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது அமைச்சர் அறிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil