Advertisment

வெளிநாடு சென்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி... மூன்று நாடுகளில் முதலீட்டார்களை சந்தித்து பேச திட்டம்

2 வாரம் அரசு முறை பயணத்தை முடித்துவிட்டு செப்டம்பர் 10ம் தேதி சென்னை திரும்புகிறார் எடப்பாடி பழனிசாமி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu chief minister Edappadi Palanisamy foreign visits full schedule

Tamil Nadu chief minister Edappadi Palanisamy foreign visits full schedule

Tamil Nadu chief minister Edappadi Palanisamy foreign visits full schedule : அமெரிக்கா, லண்டன், மற்றும் துபாய் சென்று வெளிநாடு வாழ் தமிழர்களை சந்தித்து பேச உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. முதலீட்டார்களை ஈர்க்கவும், புதிய தொழில்நுட்பங்களை கண்டறிந்து தமிழகத்தில் நடைமுறைப்படுத்தவும் இந்த பயணம் மேற்கொள்ள இருப்பதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

காலை 09:50 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலமாக துபாய் செல்லும் முதல்வர் அங்கிருந்து பின்னர் லண்டன் செல்கிறார். அவருடன் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தொழிற்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், முதல்வரின் செயலாளர்களான விஜயகுமார், சாய்குமார் உள்ளிட்டோரும் வெளிநாடு செல்கின்றனர்.

கிரீன்வேஸ் சாலையில் இருந்து சென்னை விமான நிலையம் வரை தொண்டர்கள் மேள தாளங்கள் முழங்க வாழ்த்தி வழி அனுப்பினார்கள். விமான நிலையத்தில் அவரை வழியனுப்ப அமைச்சர்கள் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் வந்திருந்தனர். ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் எம்.பி, தி.நகர் எம்.எல்.ஏ சத்யா, முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், அப்துல் ரஹீம், மற்றும் மூத்த நிர்வாகி கமலக்கண்ணன் உள்ளிட்டோர் நேரில் வந்து அவரை வாழ்த்தி வழியனுப்பினார்கள்.

லண்டன் பயணம்

இன்று காலை சென்னையில் இருந்து துபாய் வழியாக லண்டன் பயணிக்கும் முதல்வர் லண்டனில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணித் தரத்தினை கண்டறிந்து அம்மேம்பாட்டினை தமிழகத்தில் செயல்படுத்த உள்ளார். அதற்காக சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் அவர் கையெழுத்திடுகிறார்.

அவசர ஆம்புலன்ஸ் சேவை, மலேரியா தொற்றுகளை ஏற்படுத்தும் கொசுக்களை ஒழித்தல், நோய்களை கையாளும் முறை ஆகியவை குறித்தும் அறிந்துவர அவர் திட்டம் மேற்கொண்டுள்ளார். பின்னர் அங்கு செயல்பட்டு வரும் கிங்க்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் நிறுவ ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட உள்ளார் முதல்வர்.

முதலீட்டார்களை சந்துத்து பேசுவதை ஒரு அங்கமாக நிகழ்ச்சி நிரலில் சேர்த்திருக்கும் முதல்வர் சஃபோல்க் நகரில் அமைந்திருக்கும் ஐ.பி.ஸ்விட்ச் மற்றும் ஸ்மார்ட் க்ரிட் நிறுவனத்தில் சோலார் மற்றும் காற்றாலை மின்சார சேமிப்பு முறை குறித்து ஆராய்கிறார். இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து பேசுகிறார் முதல்வர்.

மேலும் படிக்க : வெளிநாடு சென்று முதலீட்டாளர்களை சந்திக்க உள்ள தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

அமெரிக்கா பயணம்

செப்டம்பர் 1ம் தேதி வரை லண்டனில் இருக்கும் அவர், அங்கிருந்து கிளம்பி செப்டம்பர் 2ம் தேதி அமெரிக்கா செல்கிறார். சேலம் தலைவாசல் கால்நடைப் பூங்காவிற்கு தேவையான சிறப்பம்சங்களையும், தொழில்நுட்பங்களையும் அறிந்து கொள்ள அவர் கலிஃபோர்னியாவில் இருக்கும் கால்நடை பண்ணையை பார்வையிடுகிறார்.

அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும், அமெரிக்க தொழில் முனைவோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்து பேசுகிறார் முதல்வர். தமிழகத்தில் இயங்கி வரும் அமெரிக்க நிறுவனங்களான கேட்டர்பில்லர் மற்றும் ஃபோர்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார் அவர்.

சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ல ஃபாக்ஸ்கான் மற்றும் லிங்கன் எலெக்ட்ரிக் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார். எரிபொருள் சிக்கனம் மற்றும் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள ப்ளூம் எனெர்ஜி நிறுவன அதிகாரிகளுடனும் பேசுகிறார் முதல்வர்.

துபாய் பயணம்

7ம் தேதி வரை அமெரிக்காவில் இருக்கும் முதல்வர் அங்கிருந்து 8ம் தேதி துபாய் வருகிறார். 8 மற்றும் 9 தேதிகளில் துபாயில் இருக்கும் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் மற்றும் கூட்டமைப்பு அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.

அங்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக துறை இயக்கும் பிசினஸ் லீடர்ஸ் போரம் என்ற அமைப்பும், இந்திய துணைத் தூதரகமும் இணைந்து நடத்தும் துபாய் தொழில் முனைவோர் ஆலோசனை மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றுகிறார் அவர்.

பின்பு துபாய் தொழில் முனைவோர்களிடம் தமிழகத்தில் தொழில் துவங்க அழைப்பு விடுக்கும் ஒரு கூட்டம் நடைபெறுகிறது. அதில் பங்கேற்று பேசிய பின்பு தாயகம் திரும்புகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.  2 வாரம் அரசு முறை பயணத்தை முடித்துவிட்டு செப்டம்பர் 10ம் தேதி சென்னை திரும்புகிறார் எடப்பாடி பழனிசாமி.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment