தமிழக அரசு உயர் அதிகாரிகள் சிலர் இன்று காலையில் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர். காவல்துறை டி.ஜி.பி. திரிபாதி, உள்துறை இணைச்செயலாளர் முருகன் ஆகியோர் இன்று காலை 06:30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு சென்றுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், உள்துறை செயலாளர் பிரபாகர் என இருவரும் இன்று காலை 07:15 மணி அளவில் சென்னையில் இருந்து டெல்லிக்கு பயணம் மேற்கொண்டனர்.
டெல்லியில் உள்ள உள்துறை செயலாளரை சந்தித்து பேச உள்ளதாக தெரிய வந்துள்ளது. க்ரூப் 1 அதிகாரிகள் சிலருக்கு ஐ.பி.எஸ். பதவி உயர்வு வழங்குவதில் சிலர் பெயர்கள் விடுபட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில் அது குறித்து ஆலோசனை மேற்கொள்ள சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான உயர்ப்பதவி வழங்குவது குறித்து ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இதில் காவல்துறையில் காலியாகும் டிஜிபிக்களின் பதவியை நிரப்புவது, பதவி உயர்வு வழங்குவது குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. ஜூன் மாதத்துடன் டிஜிபி திரிபாதி ஓய்வு பெறுகிறார். எனவே புதிதாக சட்ட ஒழுங்கு டி.ஜி.பி.யாக யார் பொறுப்பேற்க உள்ளார் என்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil