சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும் மூத்த பத்திரிகையாளருமான திரு. வி.அன்பழகன் கடந்த சில தினங்களுக்கு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் வடபழனியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைநதார்.
அவருக்கு பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல் பிரபமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும் மூத்த பத்திரிகையாளருமான திரு.வி.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக மறைவுற்றார் என்ற அதிர்ச்சி தரும் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையின் பக்கம் நின்று செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க துணிவுடன் செயல்பட்ட அவரது பணி ஊடக உலகில் நிலைத்து நின்று அவரது புகழைப் பேசும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஊடகத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இணைச்செயலாளர் பாரதி தமிழன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும் மூத்த பத்திரிகையாளருமான திரு.வி.அன்பழகன் (61) உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அன்னரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் நோயிலிருந்து மீண்டு வருவார் என்று பெரிதும் நம்பிக்கை கொண்டு இருந்த நேரத்தில் அவரது மறைவு பெரும் துயரத்தை தருகிறது.அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், பத்திரிகை ஊடக நண்பர்கள் அனைவருடனும் துயரத்தை பகிர்ந்து கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil