தமிழ்நாடு காங்கிரஸ் பட்டியலின நிர்வாகிகள் 55 பேர் தங்களின் பொறுப்பை துறந்துள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பட்டியலின அணி தலைவராக எம்பி ரஞ்சன் குமார் நியமிக்கப்பட்டற்கு எதிர்ப்பு தெரிவித்து நிர்வாகிகள் இந்த முடிவை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக பட்டியலின அதிருப்தி நிர்வாகிகள் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், “கட்சியில் பட்டியலின அணி வளர இங்குள்ள சனாதனவாதிகள் விரும்பவில்லை. இவர்கள் பட்டியலின அணியை பொம்மை போல் பயன்படுத்துகின்றனர்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எம்.பி. ரஞ்சன் குமார் கடந்த 5ஆம் தேதி சோனியா காந்தியால் தமிழ்நாடு பட்டியலின அணி தலைவராக நியமிக்கப்பட்டார்.
மேலும் அந்தக் கடிதத்தில், “2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் பட்டியலின பிரிவு மறுசீரமைப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து பட்டியலின பிரிவு அணியில் கூடுதல் பொறுப்புகள் ஏற்படுத்தப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
மேலும் பொறுப்புகளில் உள்ளுர் தலைவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆகவே இதனை வளர்க்க பூத் கமிட்டி நிர்வாகிகள் முதல் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தோம்” எனவும் தெரிவித்திருந்தனர்.
இந்த ராஜினாமா கடிதத்தில் மாநில துணைத் தலைவர், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் என முக்கிய நிர்வாகிகள் கையெழுதிட்டுள்ளனர்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பட்டியலினத் தலைவர் ராஜேஷ் லிலோதியா சென்னை வந்தபோது. எம்.பி. ரஞ்சன் குமாரின் நியமனம் குறித்து பேசியிருந்தார்.
அப்போது இது ஒரு தவறு என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் பட்டியலின நிர்வாகிகளின் நம்பிக்கையை இது சிதைத்துள்ளது. பட்டியலின அணிக்கு புதிய தலைவர் பட்டியலின பிரிவில் இருந்து வர வேண்டும்” என்றும் அவர் கூறியிருந்தார்.
இதற்கிடையே ராஜினாமா செய்த நிர்வாகிகள் தங்களின் கடிதத்தில், “இதுபோன்ற கவனக் குறைவான நடவடிக்கைகள் இளம் தொண்டர்கள் கட்சியில் இருந்து விலகி மற்ற கட்சியில் சேர வழிவகுக்கும். ஆகவே ரஞ்சன் குமார் நியமனத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
கட்சியில் பட்டியலின தலைவர் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அணி நிர்வாகிகள் 55 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.