சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும், தமிழக அரசு ஆண்டு தோறும் பொங்கல் போனஸை வழங்கி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதேபோன்று, சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பல்வேறு துறைகளில் தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சி மற்றும் டி பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், சத்துணவு, அங்கன்வாடி போன்றவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ”சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு, 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் போனஸ் வழங்கப்படும். அதன்படி, நிரந்தர மற்றும் தற்காலிக அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்படும் என்றும், தற்காலிக பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, பொங்கல் போனஸாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.