2,300 செவிலியர்களை பணியில் அமர்த்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. செவிலியர்களுக்கு தங்களது சொந்த ஊரிலேயே பணி வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபடும் தற்காலிக செவிலியர் பிரதிநிதிகள் உடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதிசெய்துள்ளார்.
மேலும், சென்னை மருத்துவக் கல்வி இயக்ககத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியதாவது,
"மீண்டும் பணியமர்த்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. அந்தந்த மாவட்டங்களில் இருக்கின்ற மாவட்ட ஆட்சி தலைவர்கள் தலைமையிலான, District Health Society என்கின்ற அமைப்பின் மூலம் செவிலியர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட இருக்கிறார்கள்.
2,300 செவிலியர்களுக்கும் பணியில் அமர்த்தப்படுவதற்கான எல்லா அரசு ஆணைகளும் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே இவர்கள் பெற்றுக்கொண்டிருந்த ஊதியம் என்பது ரூ.16,000 ஆகும்.
இனிமேல் இந்த பணியின் மூலம் இவர்கள் பெறவிருக்கும் சம்பளம் ரூ.18,000 ஆகும். அதையும் கடந்து, இவர்கள் ஏற்கனவே கொரோனா பணியில் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால், ஏதாவது தலைநகரங்களில் மட்டுமே (சென்னை, சேலம், கோவை) பிரதானமாக பணியில் அமர்த்தப்பட்டார்கள்.
ஒரு குக்கிராமத்தில் இருந்து வந்த செவிலியர் சென்னையிலேயே தங்கியிருந்து ரூ.16,000 சம்பளத்திற்காக வேலை செய்யவேண்டிய நிலை இருந்தது. ஆனால் இன்று District Health Society மூலம் அவர்கள் பணியில் அமர்த்தப்படும்போது, தங்களது சொந்த ஊரிலேயே அவர்களுக்கு பாதுகாப்பான பணி கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது", என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil