தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என் ரவி 2 நாள் பயணமாக இன்று (ஜனவரி 18) டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
டெல்லி செல்லும் ஆளுனர் ரவி செல்லும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து அண்மையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகள் குறித்து விவாதிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆளுனர் ரவி தமிழ்நாடு மக்களுக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிராக செயல்படுவதாக மாநில அரசு குற்றம்சாட்டி வருகிறது. இந்தாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஜன.9 ஆளுனர் உரையுடன் நடைபெற்றது. அப்போது ஆளுனர்,
அரசு சார்பில் அச்சிடப்பட்ட உரையில் குறிப்பிடப்பட்டிருந்த பெண்ணுரிமை, சமூகநீதி, அண்ணல் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, திராவிடம் உள்ளிட்ட வார்த்தைகளை தவிர்த்து விட்டு படித்தாக குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும் அவர் அவையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இது இந்தியா முழுவதும் விவாதப் பொருளானது.
தொடர்ந்து தி.மு.க எம்.பி.க்கள் குழு ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து ஆளுநருக்கு எதிராக மனு அளித்தனர். முதல்வர் ஸ்டாலின் சார்பில் எழுதப்பட்ட கடிதத்தை முர்முவிடம் எம்.பிக்கள் குழு வழங்கியது. அதேபோல், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது. தி.மு.க எம்.பி.க்கள் குழு மனு வழங்கிய அடுத்த நாள் ( ஜனவரி 13) ஆளுனர் ரவி டெல்லி சென்று வந்தார்.
இந்நிலையில், ஆளுனர் ஆர்.என் ரவி இன்று மீண்டும் 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/