இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்றார் மகாத்மா காந்தி. நகரமயமாதல், உலகமயமாதல் என்று எத்தனை அலைகள் வந்தபோதும் இந்தியா இன்னும் கிராமங்களைச் சார்ந்துதான் இருக்கிறது. இந்தியாவின் சமூக அமைப்பே கிராமம் சார்ந்ததுதான். ஆனால், நவீன தேர்தல் அரசியல் என்பது பெரும்பாலும் அது நகரத் தன்மைகொண்டது. சட்டமன்ற தேர்தலானாலும், மக்களவைத் தேர்தலானாலும் அதன் பிரசாரத்தன்மை, வேட்பாளர்களின் தோரனை, எல்லாமே ஒரு நகரத்தன்மையில் இருக்கும். அது மட்டுமில்லாமல் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ. மாநிலத் தலைநகருக்கும் எம்.பி. தேசியத் தலைநகருக்கும் செல்கின்றனர். ஆனால், உள்ளாட்சி தேர்தல் என்பது உள்ளூர் தன்மை கொண்டது. அதில் எப்போதும் ஒரு கிராமத் தன்மை இருக்கும். மேலும், இந்த பிரதிநிதிகள் மக்களுடன் நேரடியாக தொடர்பில் உள்ளவர்களாக இருப்பார்கள்.
ஊரக உள்ளாட்சியில் கிராம பஞ்சாயத்து அல்லது கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி என்ற மூன்று அமைப்புகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் உறுப்பினர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவை எப்படி செயல்படுகின்றன என்பது குறித்து பார்ப்போம்.
கிராம ஊராட்சி
கிராம ஊராட்சி அமைப்பில், பஞ்சாயத்து தலைவர் அல்லது ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கட்சி சார்ந்து இல்லாமல் சுயேச்சையான சின்னத்தில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கிராம ஊராட்சி தலைவர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். தேர்தலில் வெற்றிபெற்ற ஊராட்சி மன்ற தலைவரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் கிராம ஊராட்சி துணை தலைவரை தேர்ந்தெடுக்கின்றனர்.
கிராம ஊராட்சிக்கு நிதி ஆதாரம் என்பது கிராமத்தின் நிதி வருவாய் மட்டுமல்லாமல், வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாக நிதி கிடைக்கிறது. பஞ்சாயத்து ராஜ் சட்டம் மூலம் மத்திய அரசின் நிதி மாவட்ட நிர்வாகம் மூலம் நேரடியாக கிராம ஊராட்சிகளுக்கு கிடைக்கிறது. அதே போல, மாநில அரசு திட்டங்களில் மாநில அரசின் நிதியும் கிடைக்கிறது.
கிராம ஊராட்சி தலைவர் கிராமத்தின் பொதுத் தேவைகளை நேரடியாக மக்களை சந்தித்து தீர்த்துவைக்கிறார். மேலும், ஊராட்சிக்கு, எம்.எல்.ஏ., எம்.பி. தொகுதி நிதியும் கிடைக்கிறது.
ஊராட்சி ஒன்றியம்
ஊராட்சி ஒன்றியம் என்பது பல கிராம பஞ்சாயத்துகள் அல்லது பல கிராம ஊராட்சிகள் சேர்ந்தது. ஒரு ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் இருந்து வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் எண்ணிக்கை வரையறை செய்யப்படுகிறது. 5,000 வாக்குகளுக்கு ஒரு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. ஒரு ஒன்றியத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மூலம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் (Chairman) தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர்கள் ஒன்றிய அளவில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்கின்றனர். ஊராட்சி ஒன்றிய அமைப்புக்கு வட்டார வளர்சி அலுவலகம் மூலமாகவும் மக்கள் பணிகளை மேற்கொள்ள நிதி கிடைக்கிறது. மாவட்ட நிர்வாகத்திடம் இருந்தும் மாநில அரசிடமிருந்தும் நிதி கிடைக்கிறது. மேலும், அந்த ஒன்றியத்தில் கிடைக்கிற நிதி வருவாய் மூலம் நிதி ஆதாரம் கிடைக்கிறது. பஞ்சாயத்து அமைப்பைப் போல இவர்களுக்கும், எம்.எல்.ஏ., எம்.பி. தொகுதி நிதியும் கிடைக்கிறது. மாநில அரசின் நிதி கிடைக்
மாவட்ட ஊராட்சி
மாவட்ட ஊராட்சி என்பது ஒரு மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களில் இருந்து மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 50,000 வாக்குகளுக்கு ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் என்று வரையறை செய்யப்பட்டு போட்டியிடுகின்றனர். ஒரு மாவட்டத்தில் வெற்றி பெறுகிற மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மூலம் மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மாவட்ட ஊராட்சி அமைப்புக்கு அந்த மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்குகிறது.
இந்த மூன்று அமைப்பின் பிரதிநிதிகளும் மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருப்பார்கள். இவர்கள் ஊராட்சி முதல் பேரூராட்சி வரை அந்தந்த அமைப்பில், பொது தேவைகளை, மக்களின் கோரிக்கைகளை நேரடியாக சென்று அறிந்து நிறைவேற்றுவார்கள். இப்படி உள்ளாட்சி அமைப்பில் உள்ள பிரதிநிதிகளே ஒவ்வொரு கட்சியிலும் களத்தில் இருப்பவர்களாக உள்ளார்கள்.அதனால், வெற்றி பெறும் கட்சியினர் சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சி வெற்றி பெற பணியாற்றுகின்றனர். இதனால், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக வேலை செய்பவர்கள் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்று பதவியில் இருக்கும் அரசியல் கட்சியினர் என்பது நிலவரம்.
ஆகையால், உள்ளாட்சி தேர்தல் என்பது ஏதோ கிராம, ஒன்றிய நிர்வாகத்துகான தேர்தல் மட்டுமல்ல. இது சட்டமன்ற தேர்தலுக்கான ஒரு வெள்ளோட்டமும்தான். அதனாலேயே தமிழக அரசியல் கட்சிகள் உள்ளாட்சியை தங்கள் வசமாக்கிக்கொள்ள தீவிரமாக செயல்படுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.