Tamil Nadu Local Body Election Notification: உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான கால அட்டவணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் ஆகுமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தல், கடந்த 2016 முதல் தமிழகத்தில் நடைபெறாமல் இருக்கிறது. ஊராட்சிகள் எல்லை மறு சீரமைப்பு, நீதிமன்ற வழக்குகள் ஆகியவற்றை இதற்கு காரணமாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும், அரசும் கூறி வருகின்றன.
உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை உடனே தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு! To Read, Click Here
உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை வெளியிடும்படி ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நிறைவேற்றவில்லை. இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், ‘உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை ஆகஸ்ட் 6-ம் தேதி (இன்று) தாக்கல் செய்ய வேண்டும்’ என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்யுமா? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது தொடர்பான LIVE UPDATES
3:30 PM: தேர்தல் ஆணையம் அறிக்கை அடிப்படையில் இப்போதைக்கு தேர்தல் நடக்கும் வாய்ப்பு இல்லை. நீதிமன்றம் உத்தரவு மட்டுமே உள்ளாட்சித் தேர்தலை கொண்டு வர முடியும் என திமுக தரப்பு வழக்கறிஞர்கள் கருத்து கூறினர்.
3:00 PM : உள்ளாட்சித் தேர்தல் தொகுதி மறுவரையறை அறிக்கை தாக்கல் செய்யவே ஆகஸ்ட் இறுதி வரை மாநில தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்டிருக்கிறது. அதன்பிறகு அந்த அறிக்கையை மாநில அரசு ஏற்றுக்கொண்டால், அடுத்த 3 மாதங்களில் தேர்தல் நடத்த தயார் என ஆணையம் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. ஒருவேளை மாநில அரசு அதில் திருத்தங்கள், சந்தேகங்கள் எழுப்பினால், அதை சரி செய்ய அவகாசம் தேவைப்படலாம்.
2:00 PM: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதால், இனி இந்த வழக்கை நீதிபதி சத்தியநாராயணா, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
12:45 PM : உள்ளாட்சித் தேர்தல் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோதும், தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் சமர்ப்பிக்கவில்லை. வார்டு மறு வரையறைஆகஸ்ட் 15-க்குள் முடிவடையும். ஆகஸ்ட் 31-க்குள் அரசுக்கு அறிக்கை அளிப்போம். அதை அரசு ஏற்றுக்கொண்டால் அடுத்த 3 மாதங்களில் தேர்தல் நடத்த தயார் என மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது.
12:15 PM : உள்ளாட்சித் தேர்தல் வழக்கு விசாரணை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10:45 AM: உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட வழக்கு பகல் 11:30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் அட்டவணையை தாக்கல் செய்யுமா? என்பது தெரிய வரும்.
10:30 AM: இந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சோமயாஜி தனது வாதத்தில், ‘1991 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கு வகை செய்யும் சட்டபிரிவுகளை அரசு ரத்து செய்துள்ளதால், தற்போது எந்த வார்டும் இல்லை. அதனால் தேர்தல் நடத்த இயலாது.
சட்டபிரிவுகளை ரத்து செய்து அவசர சட்டம் கொண்டு வந்தது மாநில அரசு தான். இதில் மாநில தேர்தல் ஆணையத்திற்கு எந்த பங்கும் இல்லை. மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்ற அவமதிப்பும் செய்யவில்லை’ என தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களின் அடிப்படையிலேயே இன்று தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
9:30 AM: திமுக தரப்பில் ஆஜராகிய மூத்த வழக்குரைஞர் வில்சன் இந்த வழக்கில் ஏற்கனவே முன்வைத்த வாதத்தில், ‘1.31 லட்சம் உள்ளாட்சி பதவிகளை நிரப்ப தேர்தலை அறிவிக்காமல் வேண்டுமென்றே மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் பிரிதிநிதிகள் இல்லாததால் மழை, டெங்கு போன்ற விவகாரங்களுக்கு தீர்வு காணப்படவில்லை, வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் என வாதிட்டார்.
மேலும் அவர், வார்டு எல்லை மறுவரையறை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் எந்த தடையும் விதிக்கப்படவில்லை. அதனால் உள்ளாட்சி தேர்தல் நடத்த எந்தவித தடையும் இல்லை என தெரிவித்தார்.
9:00 AM: உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்யாவிட்டால், அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட நேரிடும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதல் அமர்வு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
8:30 AM: உள்ளாட்சி தேர்தலை கடந்த ஆண்டு மே14 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் மே 14 ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்த கூடுதல் கால அவகாசம் வேண்டும் எனவும் தேர்தலை ஜூலை மாதத்திற்குள் (2017) நடத்தி முடித்து விடுவதாக மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கபட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவின் படி தேர்தலை நடத்தவில்லை என கூறி திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்குதான் விசாரணையில் உள்ளது.
8:00 AM: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பிரதான வழக்கை எடுத்து விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நவம்பர் 17 ஆம் (கடந்த ஆண்டு 2017) தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் அது தொடர்பான தேர்தல் அட்டவணையை விபரங்களையும் கடந்த ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி அறிவிக்க உத்தரவிட்டனர்.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் படி தேர்தல் நடத்தவில்லை எனவும் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடாமலும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத மாநில தேர்தல் ஆணையம் மீது திமுக தரப்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வு, மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ் கான், செயலாளர் ராஜசேகரன் ஆகியோர் வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக உத்தரவிட்டதன் படி இருவரும் நேரில் ஆஜராகி இருந்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.