Advertisment

Tamil Nadu news today updates : சுங்கச் சாவடிகளில் கட்டாய பாஸ்ட்டேக் கால அவகாசம் நீட்டிப்பு

Petrol diesel price today : இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 77.77க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.69.53

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today updates : சுங்கச் சாவடிகளில் கட்டாய பாஸ்ட்டேக் கால அவகாசம் நீட்டிப்பு

Tamil Nadu news today updates chennai rains : சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காஞ்சி, நாகை, அரியலூர், திருச்சி, தஞ்சை, சிதம்பரம், திருவிடைமருதூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரியலூர், திருச்சி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அறிவித்துள்ளனர் அம்மாவட்ட ஆட்சியர்கள்.  இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

Advertisment

இன்று உதயமாகிறது செங்கல்பட்டு மாவட்டம்

தமிழகத்தின் 37வது புதிய மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் இன்று உதயமாகிறது. செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், மதுராந்தகம், திருப்போரூர், செய்யூர், திருக்கழுக்குன்றம், வண்டலூர் தாலுக்காகள் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் இடம் பெறுகிறது. இன்றைய துவக்க விழா வேண்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இன்று மதியம் 12:15 மணிக்கு நடைபெறுகிறது.

விண்ணை தொட்ட வெங்காய விலை...  வருத்தத்தில் மக்கள்

Live Blog

Tamil Nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    21:09 (IST)29 Nov 2019

    சுங்கச் சாவடிகளில் கட்டாய பாஸ்ட் டேக் கால அவகாசம் நீட்டிப்பு

    சுங்கச்சாவடிகளில் கட்டாய பாஸ்ட் டேக் வசதியை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் டிசம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பாஸ்ட் டேக் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த இருந்த நிலையில், தற்போது டிசம்பர் 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    20:35 (IST)29 Nov 2019

    மத்திய அரசு தனது பொருளாதார செயல் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது - மு.க.ஸ்டாலின்

    நாட்டின் பொருளாதார நிலை பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5%. ஆறு ஆண்டுகளில் மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சி விகிதமாக உள்ளது. இது ஒரு பொருளாதார மந்தநிலை மட்டுமல்ல, இது முன்மாதிரி இல்லாத விகித அளவிலான பொருளாதார நெருக்கடி. அரசாங்கம் திசை திருப்பப்படுவதை நிறுத்தி அதன் பொருளாதார யுக்தியை பிரதிபலிக்கத் தொடங்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

    19:27 (IST)29 Nov 2019

    பொருளாதாரம் 8% வளர சமூதாய சூழ்நிலை பயத்திலிருந்து நம்பிக்கையாக மாற வேண்டும்: மன்மோகன் சிங்

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்: நமது பொருளாதாரம் ஆண்டுக்கு 8% வளரத் தொடங்குவதற்கு நமது சமுதாயத்தின் தற்போதைய சூழ்நிலையை பயத்திலிருந்து நம்பிக்கையாக மாற்ற வேண்டும். பொருளாதார நிலை என்பது அதன் சமூக நிலையின் பிரதிபலிப்பாகும். நம்முடைய சமூகத்தின் நம்பிக்கையின் பாதாகையும் நம்பிக்கையும் இப்போது கிழிந்து பிரச்னையாகியுள்ளது. நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலையளிக்கிறது; ஆனால், பொருளாதாரத்தை விட நமது சமூகத்தின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.

    19:11 (IST)29 Nov 2019

    வெப்பத்தின் அளவு வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும்

    “டிசம்பர் முதல் மார்ச் வரையிலான இந்த குளிர்காலத்தில், வெப்பத்தின் அளவு வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும்” - இந்திய வானிலை ஆய்வு மையம்

    18:59 (IST)29 Nov 2019

    நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலையளிக்கிறது

    நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலையளிக்கிறது; ஆனால் பொருளாதாரத்தை விட நமது சமூகத்தின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 

    18:43 (IST)29 Nov 2019

    ஐசிஃஎப் இணைப்பு பெட்டி தொழிற்சாலையை மூடும் பேச்சுக்கே இடமில்லை

    "சென்னை ஐசிஃஎப் இணைப்பு பெட்டி தொழிற்சாலையானது கிரீடத்தில் உள்ள நகை போன்றது, அதனை மூடும் பேச்சுக்கே இடமில்லை!"

    - மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்

    18:23 (IST)29 Nov 2019

    பாபநாசம் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது - வெள்ள அபாய எச்சரிக்கை

    நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் அணைக்கு வரக்கூடிய நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 142 புள்ளி 05 அடியாக உயர்ந்துள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி இரண்டாயிரத்து 750 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தாமிரபரணி நதியில் உபரிநீர் திறந்து விடப்படுவதால் அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அங்கு இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தாமிரபரணி நதியில் அதிகளவில் நீர் வந்துகொண்டிருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    18:22 (IST)29 Nov 2019

    அழைத்தால் இணைப்பு - முதலமைச்சர் பழனிசாமி

    சென்னையில் மக்களுக்கு குடிநீர் இணைப்பு மற்றும் கழிவுநீர் வெளியேற்றும் வசதி உடனடியாக கிடைக்கும் வகையில் ''அழைத்தால் இணைப்பு'' திட்டத்தை அறிமுகப்படுத்தினார் முதலமைச்சர் பழனிசாமி.

    18:21 (IST)29 Nov 2019

    4 அல்லது 5 காலாண்டுகளில் பொருளாதார நிலைமை சீராகலாம்

    ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மத்திய நிதி அமைச்சர் தொழில்துறைக்கான புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். புதிய அறிவிப்புகள் பொருளாதார வளர்ச்சிக்கு கைக்கொடுக்கும். மத்திய அரசின் தொடர் முயற்சியால் 4 அல்லது 5 காலாண்டுகளில் பொருளாதார நிலைமை சீராகலாம் - நாகப்பன், பொருளாதார நிபுணர்

    18:19 (IST)29 Nov 2019

    நாட்டின் ஜி.டி.பி 4.5 சதவீதமாக குறைவு

    இரண்டாவது காலாண்டில் நாட்டின் ஜி.டி.பி 4.5 சதவீதமாக குறைந்தது. தொழிற்சாலைகளில் உற்பத்தி 5.8 சதவீதமாக குறைவு. 8 ஆண்டுகளில் இல்லாத கடும் வீழ்ச்சி

    18:18 (IST)29 Nov 2019

    கழிவுநீரை சுத்திகரிக்கும் மாநிலமாக தமிழகம் திகழும்

    அதிக அளவில் கழிவுநீரை சுத்திகரிக்கும் மாநிலமாக தமிழகம் திகழும். 3ம் நிலை சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து ஆலைகளுக்கு நீர் வழங்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி

    18:18 (IST)29 Nov 2019

    5.8 சதவிகிதம் அளவிற்கு குறைந்துள்ளது

    இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் 8 முக்கிய தொழில் நிறுவனங்களின் உற்பத்தி 5.8 சதவிகிதம் அளவிற்கு குறைந்துள்ளது - மத்திய அரசு தகவல்

    18:18 (IST)29 Nov 2019

    தமிழ்நாடு எங்களுக்கு முக்கியமான சவாலான மாநிலம்

    தமிழ்நாடு எங்களுக்கு முக்கியமான சவாலான மாநிலம். இங்கு கட்சியின் எதிர்காலம் குறித்து விரிவாக விவாதிக்க உள்ளோம் - பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ்

    17:40 (IST)29 Nov 2019

    பாக்கியராஜ்க்கு பெண்கள் ஆணையம் சம்மன்

    நடிகர் பாக்கியராஜ்க்கு பெண்கள் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. பெண்களைப் பற்றி அநாகரீகமான முறையில் பேசியதாக புகார். வருகின்ற திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு தமிழ்நாடு மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு

    17:39 (IST)29 Nov 2019

    20 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - நாளை ஒப்பந்தம் கையெழுத்து

    5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தமிழகத்தில் துவங்கப்படும் புதிய தொழில்கள் தொடர்பாக 9 தொழில் நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் கையெழுத்தாக இருக்கின்றன.இதன் மூலம் 20 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதுதவிர தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் புதிய பெயரை வெளியிடுவதோடு தொழில் நிறுவனங்களுக்கான குறை தீர்க்க உதவும் தொழில் நண்பன் என்ற புதிய இணைய தளத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

    17:23 (IST)29 Nov 2019

    45 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்

    சென்னை  கோயம்பேட்டில் ரூ.486 கோடி செலவில், 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    17:00 (IST)29 Nov 2019

    3 இயக்குனர்கள் பணியிட மாற்றம்

    கல்வித்துறையில் 3 இயக்குனர்கள் பணியிட மாற்றம்

    தொடக்க கல்வி இயக்குனராக இருந்த சேதுராமன் வர்மா, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மாற்றம்.

    ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக இருந்த உமா, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனராக நியமனம்.

    ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனராக இருந்த பழனிசாமி தொடக்க கல்வி இயக்குனராக நியமனம்.

    16:57 (IST)29 Nov 2019

    இலங்கை அரசுக்கு நிதியுதவி அளிக்க முடிவு - பிரதமர் மோடி திட்டவட்டம்

    இலங்கையில் மீண்டும் குடியேற நினைக்கும் தமிழர்களுக்காக, கூடுதலாக 14 ஆயிரம் வீடுகள் கட்ட நிதி உதவி அளிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ உடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு திட்டங்களுக்காக இலங்கைக்கு 400 மில்லியன் டாலர்கள் கடனாக வழங்கப்படும் என தெரிவித்தார். இது தவிர சூரிய மின்னுற்பத்தி திட்டங்களுக்காக 100 மில்லியன் டாலர்கள் கடனாக வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    16:56 (IST)29 Nov 2019

    அ.ம.மு.க-வை பதிவு செய்ய தடை விதிக்க வேண்டும்

    அ.ம.மு.க-வை பதிவு செய்ய தடை விதிக்க வேண்டும் என கட்சியின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு. மக்கள் பிரதிநிதித்துவ சட்டவிதிகளை மீறி செயல்படுவதாக மனுவில் குற்றச்சாட்டு. புகழேந்தி மனு மீது, சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை.

    16:25 (IST)29 Nov 2019

    2022க்குள் மதுரையில் எய்ம்ஸ்

    2022ஆம் ஆண்டுக்குள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    16:17 (IST)29 Nov 2019

    சிலை கடத்தல் வழக்கு விவகாரம் - டிராபிக் ராமசாமி சார்பாக புதிய மனு தாக்கல்

    சிலை கடத்தல் வழக்கு விவகாரத்தில் பொன்மானிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பாக புதிய மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி கூடுதல் ஆவணங்களோடு புதிய மனு தாக்கல் செய்தார். சிலை கடத்தல் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய மனு டிசம்பர் 2 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

    15:51 (IST)29 Nov 2019

    சிபிஐ-க்கு மாற்ற கோரி மனு

    சென்னை ஐஐடி-யில் 2006ம் ஆண்டு முதல் நடந்த 14 தற்கொலை வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு - விரைவில் விசாரணை

    15:51 (IST)29 Nov 2019

    கண்ணாமூச்சி விளையாட்டு நடத்தும் அரசு - மக்கள் நீதி மய்யம்

    3 ஆண்டுகளாக அரசு தேர்தல் நடத்தப்போவதாக அறிவிப்பதும், அதில் குறை இருப்பதாக எதிர்கட்சி நீதிமன்றத்திற்கு போவதுமாக, கண்ணாமூச்சி விளையாட்டு நடந்துக்கொண்டு இருக்கிறது - மக்கள் நீதி மய்யம்

    15:12 (IST)29 Nov 2019

    நாளை பெரும்பான்மையை நிரூபிக்கும் உத்தவ் தாக்கரே

    நாளை கூடும் மகாராஷ்டிரா சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பெரும்பான்மையை நிரூபிக்கிறார் உத்தவ் தாக்கரே

    15:11 (IST)29 Nov 2019

    தமிழக அரசின் கேலிக்கூத்து - டிடிவி தினகரன்

    ஜனவரியில் வரவுள்ள பொங்கல் பண்டிகைக்கு இப்போதே பொங்கல் பரிசு வழங்குவது கேலிக்கூத்தாக உள்ளது - தினகரன்

    15:11 (IST)29 Nov 2019

    தமிழக அரசு அரசாணை

    உளுந்தூர்பேட்டை சண்முகம் உள்ளிட்ட 7 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

    14:50 (IST)29 Nov 2019

    Gateway of Chennai என்று அழைக்கலாம்

    அதிமுக அரசு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. 2வது உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டத்தை Gateway of Chennai என்று அழைக்கலாம்  - செங்கல்பட்டு மாவட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

    14:49 (IST)29 Nov 2019

    400 மில்லியன் டாலர் நிதி உதவி

    இலங்கையின் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்காக 400 மில்லியன் டாலர் நிதி உதவி - பிரதமர் மோடி

    தீவிரவாதத்தை எதிர்க்க இலங்கைக்கு 50 மில்லியன் டாலர் நிதி உதவி - பிரதமர் மோடி அறிவிப்பு

    14:48 (IST)29 Nov 2019

    வணக்கம் என கூறி உரையை ஆரம்பித்த பிரதமர் மோடி

    டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூட்டாக செய்தியாளர் சந்திப்பு

    'வணக்கம்' என கூறி தனது உரையை ஆரம்பித்தார் பிரதமர் மோடி

    14:48 (IST)29 Nov 2019

    தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் விடுவிக்கப்படும்

    "இலங்கையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் விடுவிக்கப்படும்" - பிரதமர் மோடி உடனான செய்தியாளர் சந்திப்பின்போது இலங்கை அதிபர் கோத்தபயா அறிவிப்பு

    14:47 (IST)29 Nov 2019

    ஐ.டி நிறுவனங்களில் ஆள் குறைப்பு நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் - ஸ்டாலின்

    வேலையில்லாத் திண்டாட்டத்தின் உச்சக்கட்டம்தான் கோவையில் பொறியாளர்கள், பட்டதாரிகள் துப்புரவுப் பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். மேலும், ஏதோ ஒரு செயற்கை காரணங்களால் ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயமும் இருப்பதாக ஸ்டாலின் வேதனை தெரிவித்தார். எதிர்க்கால தலைமுறைகளின் வாழ்வில் விளையாடாமல், வேலையில்லா திண்டாட்டத்தை போக்கவும், ஐ. டி நிறுவனங்களில் ஆள் குறைப்பு நடவடிக்கையை தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுத்தினார்.

    13:49 (IST)29 Nov 2019

    காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா கூட்டணிக்கு எதிராக வழக்கு

    மகாராஷ்ட்ராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணிக்கு எதிராக பதிவு செய்த வழக்கை தள்ளுபடி செய்து அறிவித்தது உச்ச நீதிமன்றம். கூட்டணி அமைப்பது என்பது அரசியல் கட்சிகளின் ஜனநாயக உரிமை அதில் யாரும் தலையிட முடியாது என்று அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    13:47 (IST)29 Nov 2019

    ராணிப்பேட்டையில் 2ம் தேதி முதல் மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம்

    ராணிப்பேட்டையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் மாவட்ட ஆட்சியில் அலுவலகத்தில் 2ம் தேதி முதல் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி அறிவித்துள்ளார்.

    13:36 (IST)29 Nov 2019

    தமிழகத்தின் 37வது மாவட்டமாக செங்கல்பட்டு உதயமானது

    தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய மூன்று வருவாய் கோட்டங்கள் இந்த மாவட்டத்தில் செயல்பட உள்ளது. செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், திருப்போரூர், மதுராந்தகம் மற்றும் செய்யூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகள் செயல்பட உள்ளன. அதே போன்று செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், மதுராந்தகம், திருப்ப்போரூ, செய்யூர், திருக்கழுக்குன்றம், வண்டலூர் ஆகிய தாலுகாக்கள் இந்த மாவட்டத்தில் செயல்பட உள்ளது.

    12:45 (IST)29 Nov 2019

    மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்

    சூறாவளி காற்று வீச இருப்பதால் 2 நாட்களுக்கு தென்மேற்கு வங்கக் கடல், குமரிக்கடல் பகுதிக்கும், நாளை மாலத்தீவு கடல் பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.

    12:44 (IST)29 Nov 2019

    ப. சிதம்பரத்தின் கீழ் பணியாற்றிய 6 அதிகாரிகளுக்கு இடைக்கால ஜாமீன்

    ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக செயல்பட்ட போது அவருக்கு கீழ் பணியாற்றிய 6 அரசு அதிகாரிகளுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.

    12:42 (IST)29 Nov 2019

    மன்னிப்பு கோரினார் பிரக்யா சிங் தாக்கூர்

    கோட்சேவை தேசபக்தர் என்று நாடாளுமன்றத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்ற விவகாரங்களில் பங்கேற்க கூடாது என்றும் காங்கிரஸ் எம்.பிக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கடிதம் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து இன்று தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கோரினார் பிரக்யாசிங் தாக்கூர்.

    12:25 (IST)29 Nov 2019

    12 மணி வானிலை அறிக்கை

    சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக அறிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

    12:15 (IST)29 Nov 2019

    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு குற்றப்பத்திரிக்கை மீதான விசாரணை

    முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட பலரையும் உள்ளடக்கிய ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கின் குற்றப்பத்திரிக்கை மீதான விசாரணை டிசம்பர் மாதம் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம்.

    12:13 (IST)29 Nov 2019

    இஸ்லாமிய அமைப்பினரின் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரிய மனு

    டிசம்பர் 6ம் தேதி இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் மத நல்லிணக்கத்திற்கு குந்தகமான  நிலை உருவாகும் என்றும்,  இதற்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. டிசம்பர் 2ம் தேதிக்கு அந்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு.

    11:50 (IST)29 Nov 2019

    கோத்தபய ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

    கோத்தபய ராஜபக்சேவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் குடியரசு தலைவர் மாளிகையில் வரவேற்று பேசினர். இருநாட்டு உறவுகளும் வலுப்பட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்றும், பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றும் இலங்கை அதிபர் அறிவித்தார்.

    11:45 (IST)29 Nov 2019

    ராதாபுரம் தொகுதி வழக்கு - டிசம்பர் 11ஆம் தேதி இறுதி விசாரணை

    மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அதிமுக எம்.எல்.ஏ இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.

    11:29 (IST)29 Nov 2019

    ஆபரண தங்கத்தின் விலை உயர்வு

    சென்னையில் ஆபரணா தங்கத்தின் விலை ரூ. 64 உயர்ந்துள்ளது. தற்போது ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 28,976.

    11:19 (IST)29 Nov 2019

    அண்ணா அறிவாலயத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

    அண்ணா அறிவாலயத்துக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த போன்காலை யார் செய்தார்கள் என்று காவல்துறை விசாரணை செய்து வந்தது. இன்று கணேசன் என்பவரை கைது செய்துள்ளது காவல்துறை. 

    11:18 (IST)29 Nov 2019

    உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை வெளியிடுங்கள் - ராமதாஸ்

    உள்ளாட்சி தேர்தலை தடுக்க மறைமுகமாக நடைபெறும் முயற்சிகள் எதையும் பொருட்படுத்தாமல் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணையை அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனம் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

    11:16 (IST)29 Nov 2019

    காவிரி படுகையில் உள்ள நீர்பாசனங்களை புதுப்பிக்க திட்டம்

    காவிரி படுகையில் உள்ள நீர்ப்பாசனங்களை புதுப்பிக்க ரூ. 700 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ராஜ வாய்க்கால், நொய்யலாறு, கட்டளை வாய்க்கால் ஆகிய நீர்ப்பாசனங்களை புதுப்பிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    11:15 (IST)29 Nov 2019

    நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் போராட்டம்

    தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி கைது செய்யப்பட்ட ஃபரூக் அப்துல்லாவை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    10:59 (IST)29 Nov 2019

    உள்ளாட்சி தேர்தல் : மறுவரையறை பணிகளை நிறைவு செய்ய உத்தரவிட கோரிக்கை மனு

    உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட புதிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் திமுக முறையீடு. தலைமை நீதிபதி அமர்வில் முறையிட திமுக தரப்புக்கு அறிவுறுத்தப்பட்டிந்தது. அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல் அளித்திருந்தது உச்ச நீதிமன்றம், மேலும் வழக்கை பட்டியலிடுமாறு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    10:59 (IST)29 Nov 2019

    உள்ளாட்சி தேர்தலை முறைப்படி நடத்துங்கள்

    உள்ளாட்சித் தேர்தலை தடுக்க வேண்டும் என நினைக்கவில்லை. ஆனால் முறைப்படி நடத்துங்கள் என்று தான் நாங்கள் சொல்கிறோம் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    10:34 (IST)29 Nov 2019

    பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர்

    137 வன சரகர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

    10:17 (IST)29 Nov 2019

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    இன்று விலையில்லா வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூ. 1.12 கோடி மதிப்பில் சொகுசு பேருந்து சேவையை துவங்கி வைத்தார் முதல்வர்.

    10:10 (IST)29 Nov 2019

    வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்தார் கோத்தபய ராஜபக்ச

    நவம்பர் 30ம் தேதி வரை அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச. கடந்த வாரம் இலங்கைக்கு சென்று நேரடியாக வாழ்த்துகளை பதிவு செய்திருந்தார் எஸ்.ஜெயசங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Delhi: Newly elected President of Sri Lanka Gotabaya Rajapaksa meets External Affairs Minister Dr S Jaishankar. The Sri Lankan President is on a visit to India till November 30. pic.twitter.com/q41NzEqkzK

    10:01 (IST)29 Nov 2019

    மின்சாரத்தில் இயங்கும் இ - ஆட்டோ சேவை அறிமுகம்

    மின்சாரத்தில் இயங்கும் இ-ஆட்டோ சேவையை இன்று அறிமுகம் செய்து வைக்க உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கி.மீ வரை இந்த ஆட்டோவை இயக்க முடியும். அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு 60 கி.மீ வேகத்தில் இயங்கக்கூடியது இது.

    09:59 (IST)29 Nov 2019

    பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை துவங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

    தை ஒன்றாம் தேதி தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை சீரும் சிறப்புடனும் கொண்டாட இருப்பதையொட்டி தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 2.05 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 அடங்கிய பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

    09:44 (IST)29 Nov 2019

    கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

    நேற்று நள்ளிரவு முதல் திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அம்மாவட்ட ஆட்சியர்கள் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    09:40 (IST)29 Nov 2019

    குலசேகரன்பட்டினத்தில் உருவாகிறது ராக்கெட் ஏவு தளம்

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் என்று விண்வெளித்துறை அமைச்சகம் சார்பில் ஜிதேந்திர சிங் பதில் அளித்துள்ளார். ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டவைத் தொடர்ந்து தமிழகத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைய இருக்கிறது குறிப்பிடத்தக்கது,

    09:37 (IST)29 Nov 2019

    வேதநாயகி யானை உயிரிழப்பு

    ஈரோடு பவானி கூடுதுறையில் அமைந்திருக்கிறது சங்கமேஸ்வரர் கோவில். இந்த கோவிலில் திருப்பணி செய்து வந்தது வேதநாயகி என்றொரு யானை. 43 வயதான வேதநாயகிக்கு நீரிழிவு நோய் இருந்துள்ளது. மருத்துவ உதவி வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளது.

    09:35 (IST)29 Nov 2019

    உள்ளாட்சி தேர்தலை திமுக விரும்பவில்லை - ஜெயக்குமார்

    யார் தடுத்தாலும் உள்ளாட்சி தேர்தல் நிச்சயம் நடைபெறும் என்று அமைச்சர் ஜெயக்குமார் உறுதி அளித்துள்ளார்.

    Tamil Nadu news today updates : ஒரு மாதங்களுக்கு பிறகான கடுமையான குழப்பத்திற்கு மத்தியில் நேற்று மகாராஷ்ட்ராவின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே. மும்பை தாதர் சிவாஜி பூங்காவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேவேந்திர ஃபட்னாவிஸ், ராஜ் தாக்கரே, திமுக தலைவர் முக ஸ்டாலின், டி.ஆர். பாலு ஆகியோர் பங்கேற்றனர். உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றுக் கொண்டதிற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வயநாடு எம்.பி ராகுல் காந்தி ஆகியோர் தங்களின் வாழ்த்துகளை பதிவு செய்தனர்.

    மேலும் படிக்க : உத்தவ் தாக்கரே அவர் தந்தையைப் போன்ற போர்க்குணம் கொண்டவர் இல்லை!

    Tamil Nadu Chengalpattu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment