Advertisment

Tamil Nadu news today : டிடிவி தினகரன் - தங்கதமிழ்செல்வன் நேரடி மோதல் - பரபரப்பு பேட்டி

நீதிக்கும், வேலைக்கும், நேர்மைக்கும், சட்டம் ஒழுங்குக்கும் பஞ்சம் இருப்பது போல தண்ணீருக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates: நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதில், ”தேர்தல் முடிவுகளைப் பற்றிய தங்கள் பார்வைகளை பற்றியோ, அதிமுகவின் முடிவுகளைப் பற்றியோ பொது வெளியில் கருத்துகளை கூறாமல் சிறப்புடன் பணியாற்ற வேண்டும். நம்மை அழிக்க நினைப்பவர்களுக்கு நம்முடைய சொல்லும், செயலும் உதவி செய்திடக்கூடாது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

Tamil Nadu news today updates : ‘நம்மை அழிக்க நினைப்பவர்களுக்கு உதவி செய்திடக் கூடாது’ – இ.பி.எஸ், ஓ.பி.எஸ். கூட்டறிக்கை

இதற்கிடையே தண்ணீர் தட்டுப்பாட்டை சரி செய்யாத தமிழக அரசை எதிர்த்து எதிர்க்கட்சியான திமுக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. நேற்று, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ஜெ.அன்பழகன் சார்பில், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “

குடம் இங்கே, குடிநீர் எங்கே” என்ற நிலை தமிழகம் முழுவதும் தலைத்தூக்கியுள்ளது. குடிநீர் பிரச்னையை போக்காத எடுபிடி அரசைக் கண்டித்து இங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் தண்ணீர் எங்கே என்ற நிலையே தற்போது காணுமிடமெல்லாம் உருவாகியிருக்கிறது. தமிழகத்தில் உள்ள தற்போதைய அரசிடம் நிதிக்கும், நீதிக்கும், வேலைக்கும், நேர்மைக்கும், சட்டம் ஒழுங்குக்கும் பஞ்சம் இருப்பது போல தண்ணீருக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை!

ஆனால், இது தொடர்பாக எந்த ஒரு அக்கறையும் இல்லாமல், நடவடிக்கை எடுக்கக் கூடிய முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வமும், குடிநீர் பிரச்னைக்கு அடித்தளமாக உள்ள உள்ளாட்சித் துறையை தன்வசம் வைத்துள்ள வேலுமணியும் எவ்வித கவலையும் இல்லாமல் இருக்கின்றனர்” என்றார்.

இதைத் தொடர்ந்து இன்றைய முக்கியச் செய்திகளை இங்கு தெரிந்துக் கொள்வோம்.

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, politics, cinema, bigg boss, sports train services and airlines

தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகளை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

 



























Highlights

    20:20 (IST)25 Jun 2019

    காதல் ஜோடிக்கு சரமாரி அரிவாள் வெட்டு

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடிக்கு சரமாரி அரிவாள் வெட்டு காதலன் கனகராஜ்(21) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்., காதலி வர்ஷினி(18) உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக, மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    19:58 (IST)25 Jun 2019

    கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் : முதல்வர் 27ம் தேதி துவக்கிவைப்பு

    நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், நாள்தோறும் 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்க வடிவமைக்கப்பட்டுள்ளது; நாளை மறுதினம் ( ஜூன் 27ம் தேதி)  முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

    19:41 (IST)25 Jun 2019

    ஆட்சி மாற்றத்திற்கு தமிழகமே காத்திருக்கிறது : உதயநிதி ஸ்டாலின்

    விரைவில் ஆட்சி மாற்றம் வரும். அதற்காக தமிழகமே காத்திருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

    சென்னை வேப்பேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, தேர்தல்களில் திமுகவின் வெற்றிக்கு மோடி எதிர்ப்பு மட்டுமல்ல, ஸ்டாலின் ஆதரவும் காரணம் என கூறினார்.

    19:09 (IST)25 Jun 2019

    மாணவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது காட்டுமிராண்டித்தனம் : ஸ்டாலின்

    ஜனநாயக ரீதியில் போராடிய மாணவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது காட்டுமிராண்டித்தனம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை உடனடியாக ஆய்வு செய்து களைய வேண்டும்; அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தாமதமின்றி மடிக்கணினி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அவர் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    18:47 (IST)25 Jun 2019

    இந்தி மொழியை தமிழகம் ஏற்காது : திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா

    இந்தி மொழியை, தமிழகம் ஒருபோதும் ஏற்காது என்று திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் கூறியுள்ளதாவது, இருமொழிக்கொள்கையை பின்பற்றும் தமிழ்நாட்டில், நிச்சயம் இந்தியை, கட்டாய பாடமாக்க மாட்டோம்.  வங்கிகளின் நடவடிக்கைகளால், மாணவர்களால் எந்த வங்கியிலும் கடன் பெற முடியவில்லை.  நீட் தேர்வால், ஏழை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வை கொண்டு வந்ததன் மூலம் கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க கோரி தமிழக சட்டசபை நிறைவேற்றிய இரண்டு மசோதாக்களும் மத்திய அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

    18:20 (IST)25 Jun 2019

    அனைத்து துறைகளிலும் கருணை வேலைவாய்ப்புத்திட்டம் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

    தமிழகத்தில் கருணை வேலை வாய்ப்பு திட்டத்தை அனைத்து துறைகளிலும் அமல்படுத்தும் வகையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தலைமை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    17:57 (IST)25 Jun 2019

    காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவிற்கு மறைமுகமாக துணைபோகிறது - திருமாவளவன்

    காவிரி மேலாண்மை ஆணையம் ஒரு புறம் உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டே மற்றொரு புறம் கர்நாடக அரசுக்கு மறைமுகமாக துணை போகிறது.  தமிழகத்துக்குரிய நீரை உடனடியாக கர்நாடக அரசு திறந்து விட வேண்டும்; தவறினால் தமிழகத்தில் மிகப்பெரும் கிளர்ச்சி ஏற்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    17:34 (IST)25 Jun 2019

    Latest Tamil News : இந்திய மக்கள் நிலையான அரசை தேர்ந்தெடுத்துள்ளனர் : பிரதமர் மோடி

    இந்திய மக்கள் தங்களை விட தேசத்தையே அதிகம் விரும்புவதால், அவர்கள் நிலையான அரசை தேர்ந்தெடுத்துள்ளதாக பிரதமர் மோடி மக்களவையில் தெரிவித்துள்ளார்.

    மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பல்வேறு உறுப்பினர்கள் பேசினர். அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் பேசியதாவது, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விவாதங்களை வரவேற்கிறேன்.  மக்களவையின் புதிய சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.  மக்களுக்கு எந்தெந்த திட்டங்கள் தேவையோ, அதையே விவாதித்து நிறைவேற்றுவோம். அடுத்து நடைபெற உள்ள அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று வலுவாக செயல்படுவோம்.  தேர்தலில் யார் வென்றார்கள், யார் தோல்வியடைந்தார்கள் என்பதை நான் பார்ப்பதில்லை. நாட்டு மக்களுக்காக பணியாற்றி அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதே, என்னைப்பொறுத்தவரை மனதுக்கு திருப்தி தருவதாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.

    16:57 (IST)25 Jun 2019

    தமிழகத்தில் ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை எம்.பி. தேர்தல்

    தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி.களுக்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறும் . அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு ஜூலை 1 முதல் 8ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக 3 பேரையும், திமுக  3 பேரையும் தேர்வு செய்ய முடியும்.அதிமுகவின் மைத்ரேயன், லட்சுமணன், ரத்தினவேல் உள்ளிட்ட நால்வரின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜாவின் பதவிக்காலமும் ஜூலை 24ம் தேதி முடிவடைய உள்ளது.

    தமிழ்நாட்டின் புதிய 6 எம்.பி.க்கள் யார், யார்? ஜூலை 18-ல் ராஜ்யசபா தேர்தல்

    16:46 (IST)25 Jun 2019

    ராஜராஜசோழன் குறித்த சர்ச்சை பேச்சு : இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு முன்ஜாமின்

    ராஜராஜ சோழன் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது தொடர்பான வழக்கில், இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமின் வழங்கியுள்ளது.  இனி சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது என்பதனடிப்படையில் இந்த முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

    16:36 (IST)25 Jun 2019

    ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை : நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்திவருகிறது.  அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அதன் பதவிக்காலத்தை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ஆணையத்தின் பதவிக்காலம் 5வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    16:05 (IST)25 Jun 2019

    சட்டவிரோத பேனர் வழக்கு : அரசின் செயல்பாடுகளால் நீதிபதிகள் வேதனை

    சட்ட விரோத பேனர் வழக்கில் தமிழக அரசின் தொடர் செயல்பாடுகள் நீதிமன்றத்தையே சோர்வடைய செய்து விட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.  சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசு மீண்டும்  ஒரு வாரம் கால அவகாசம் கோரியது.  இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தமிழக அரசு தொடர்ந்து கால அவகாசம் கோருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இது போன்ற கால அவகாசம் கேட்டால் உள்துறை செயலாளரை நேரில் ஆஜராக நேரிடும் என எச்சரித்தனர்..

    சட்ட விரோத பேனர் வழக்கு.. அரசின் செயல்பாடுகளால் நீதிபதிகள் வேதனை!

    15:41 (IST)25 Jun 2019

    திமுக எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியத்திற்கு நிபந்தனை முன்ஜாமின்

    அரசு நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் மற்றும்  அவரது மனைவிக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.  சென்னை கிண்டியில் சிட்கோ நிலத்தை மா.சுப்பிரமணியன், மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றியதாக பார்த்திபன் என்பவர் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    அரசுநிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கு - மா.சுப்பிரமணியத்திற்கு நிபந்தனை முன்ஜாமின்

    15:19 (IST)25 Jun 2019

    கோவை மத்திய சிறையில் டிரைவர்களுக்கான பணியிடங்கள் : விண்ணப்பிக்க அழைப்பு

    கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள சமையலர், முடி திருத்துபவர் , டிரைவர் உள்ளிட்ட பணிகள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள், ஜூலை 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கோவை மத்திய சிறை மற்றும் சிங்காநல்லூர் திறந்தவெளி சிறையில் டிரைவர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பதவிகளுக்கு தகுதியுள்ளவர்கள், தகுந்த கல்விச்சான்றிதழ்களுடன் ஜூலை 6ம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களை கோவை மத்திய சிறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு நேர்காணல் குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    15:13 (IST)25 Jun 2019

    'சிங்கார' சென்னையை 'சிங்கப்பூர்' ஆக்குவேன் என்று ஸ்டாலின் கூறியது என்னானது?- தமிழிசை கேள்வி

    சிங்கார சென்னையை சிங்கப்பூர் ஆக்குவேன் என்று சென்னை மேயராக இருந்தபோது சொன்ன மு.க. ஸ்டாலின் தற்போது தான் மட்டும் சிங்கப்பூர் சென்று வந்து இங்கே தண்ணீர் எங்கே என்று போராடுகிறார்.

    ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றதற்கு பதிலாக, பெங்களூரு சென்று தண்ணீர் திறந்துவிடுங்கள் ; மேகதாதுவில் அணை கட்டவேண்டாம் என்று சொல்லிவிட்டு இங்கே வந்து போராடி இருந்தால், அவரை பாராட்டி இருக்கலாம் என்று தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    15:08 (IST)25 Jun 2019

    தமிழகத்தின் 17 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு

    தமிழகத்தில் 17 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது . 49,144 கிராமங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக  குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் மகேஸ்வரன்,  திருச்சியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூறினார். 

    15:06 (IST)25 Jun 2019

    தண்ணீர் பிரச்னையை வலியுறுத்தி உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரி வழக்கு : நாளை தீர்ப்பு :

    தண்ணீர் பிரச்னையை வலியுறுத்தி அறப்போர் இயக்கம் அமைப்பினர், வரும் 30ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் "கேளு சென்னை கேளு" என்ற தலைப்பில் உண்ணாவிரதம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.  இந்த வழக்கின் தீர்ப்பு நாளை ( ஜூன் 26ம் தேதி)  வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம் 

    15:01 (IST)25 Jun 2019

    மதுரை : எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் ஒப்படைப்பு

    மதுரை மாவட்டம் தோப்பூ ரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தேர்வு செய்யப்பட்ட 224 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தின் ஆவணங்கள் மதுரை கலெக்டரிடம் வழங்கப்பட்டன. 

    ரூ. 1,264 கோடி மதிப்பீட்டில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட உள்ளது.  தேர்வு செய்யப்பட்ட இடம் மத்திய அரசிடம் வழங்கவில்லை என்ற தகவல், தகவல்அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து, திருப்பரங்குன்றம் தாசில்தார் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. 224 ஏக்கர் பரப்பளவிலான நிலம் அளவிடப்பட்டு அதன் ஆவணங்கள், மதுரை கலெக்டரிடம் வழங்கப்பட்டன. இந்த ஆவணங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். பின் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    14:23 (IST)25 Jun 2019

    விஷாலின் தந்தையிடம் பணமோசடி : கல்குவாரி அதிபர் கைது

    நடிகர் விஷாலின் தந்தையும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜி.கே. ரெட்டியிடம், 86 லட்சம் ரூபாய் ஏமாற்றிய கல்குவாரி உரிமையாளர் கைது  செய்யப்பட்டார்.  சென்னை அண்ணாநகரில் வசித்துவரும் விஷாலின் தந்தை, போலீஸ் கமிஷனர் ஏ. கே. விஸ்வநாதனை சந்தித்து தாம் ஏமாற்றப்பட்டது குறித்து புகாரளித்தார். அதில், மதுரையைச் சேர்ந்த கல்குவாரி அதிபர் வடிவேலுவிடம், ஜல்லி கேட்டு பணம் கொடுத்ததாகவும், அவர், ஜல்லியும் கொடுக்காமல், பணமும் கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும் புகாரளித்தார். இதன் பேரில், கைது செய்யப்பட்ட கல்குவாரி அதிபர் வடிவேலுவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    14:22 (IST)25 Jun 2019

    தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்குரிய தண்ணீரை திறக்க, கர்நாடகாவுக்கு உத்தரவு

    தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்குரிய தண்ணீரை திறக்க, கர்நாடகாவுக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. கடந்த 24ம் தேதி வரை, கர்நாடகா 1.77 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட்டுள்ளதாக   காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் தெரிவித்துள்ளார். 

    தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

    14:09 (IST)25 Jun 2019

    கீழடியில் 5ம் கட்ட அகழாய்வு : நீண்ட சுவர் கண்டுபிடிப்பு

    சிவகங்கை மாவட்டம் கீழடியில், தற்போது 5ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் மிக நீண்ட சுவர் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அது எந்த காலத்தை சேர்ந்தது என்பது குறித்த ஆய்வு விரைவில் துவங்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    13:43 (IST)25 Jun 2019

    Latest Tamil News : தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

    காவிரியில் நீர்வரத்து உள்ளதை பொறுத்து, கர்நாடகா, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது. 

    13:19 (IST)25 Jun 2019

    மாநிலங்களவை தேர்தல் : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வேட்புமனுதாக்கல்

    மாநிலங்களை உறுப்பினர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், குஜராத் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கும் பொருட்டு, வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வெளியுறவுத்துறை செயலராக இருந்தே ஜெய்சங்கர், மோடி 2வது முறையாக பிரதமர் பதவியேற்றபோது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.  ஜெய்சங்கர், பா.ஜ. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

    12:57 (IST)25 Jun 2019

    மக்களவையில் அதிமுக-வுக்கு பாஜக ஆதரவு

    மத்திய சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் தயாநிதி மாறன் மக்களவையில் உரையாற்றினார். அப்போது தமிழகத்தின் தண்ணீர் பஞ்சத்தைப் பற்றி பேசிய அவர், ஆளும் அதிமுக அரசை ’ஊழல் அதிமுக’ என்றார். இதற்கு பா.ஜ.க எம்.பி-க்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். அப்போதும் விடாமல் பேசினார் தயாநிதி மாறன், இதனால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. 

    12:52 (IST)25 Jun 2019

    tamil news today: மக்களவையில் எம்.பி. தயாநிதி மாறன் வாதம்

    மக்களவையில் உரையாற்றிய தயாநிதி மாறன், ”தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது. அத்திட்டங்களை ஊழல் அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது.8 ஆண்டுகளாக அதிமுக அரசு, திமுக துவங்கிய அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தாமல் முடக்கியுள்ளது. அதனாலேயே தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது” என்றார். 

    தமிழகத்தில் அடிமை அரசு தான் நடைபெறுகிறது : மக்களவையில் எம்.பி. தயாநிதி மாறனின் பேச்சால் சலசலப்பு

    12:06 (IST)25 Jun 2019

    டிடிவி பேட்டி தொடர்ச்சி

    தங்க தமிழ்ச்செல்வன் ரேடியோ ஒன்றிற்கு அளித்த பேட்டியை சுட்டிக் காட்டி முன்பே அவரை எச்சரித்தேன். ஊடகங்களிடம் ஒழுங்காக பேசவில்லை என்றால் செயலாளர், கொள்கை பரப்பு செயலாளர் பதவிலிருந்து நீக்குவேன் என்றேன், பின்னர் விளக்கம் கொடுத்தார். அவரால் விஸ்வரூபமெல்லாம் எடுக்க முடியாது. என்னைப் பார்த்தால் பெட்டி பாம்பாய் அடங்கி விடுவார். யாரையும் கட்சியை விட்டு நீக்குவதில் எந்தத் தயக்கமும் இல்லை” என்றார். இந்த சூசகமான பதில் மூலம் விரைவில் தங்க தமிழ்ச்செல்வன் அமமுக-விலிருந்து நீக்கப்படலாம் என்கிறார்கள் நெருங்கிய வட்டாரத்தினர். 

    12:06 (IST)25 Jun 2019

    தங்க தமிழ்ச்செல்வன் விவகாரம்: டிடிவி.தினகரன் பேட்டி

    தேனி மாவட்ட அமமுக செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் பற்றி பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் முக்கிய நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார் டிடிவி. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “என்னிடம் முன்பே கட்சிக்காரர்கள் அந்த ஆடியோவைப் பற்றி சொன்னார்கள். ஆனால் நான் பெங்களூருக்கு சென்று விட்டேன். பிறகு தான் அதனைக் கேட்டேன். இது திடீர் ஆலோசனை எல்லாம் கிடையாது, தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் முன்பே திட்டமிடப்பட்டிருந்த ஆலோசனைக் கூட்டம் தான். 

    11:32 (IST)25 Jun 2019

    Latest News tamil: தமிழகம் வலியுறுத்தல்

    டெல்லியில் காவிரி மேலாண்மை வாரிய கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், ”ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும். கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை” என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. 

    11:07 (IST)25 Jun 2019

    Tamil News updates: தொடங்கியது காவிரி மேலாண்மைக் கூட்டம்

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4-வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள சேவா பவனில் தலைவர் மசூத் உசேன் தலைமையில் தொடங்கியது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநில பிரதிநிதிகள் கலந்துக் கொண்டுள்ளனர். 

    10:50 (IST)25 Jun 2019

    ட்ராஃபிக் போலிஸ் இல்லாட்டியும் இனி போக்குவரத்து விதிகளை மீற முடியாது

    போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் அதிநவீன கேமராக்களின் இயக்கங்களை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார். சென்னை அண்ணாநகரின் முக்கிய சந்திப்பில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் படம் பிடிக்கப்பட்டு, அவற்றிற்கான அபராதத் தொகை ரசீது, அவரவரின் வீடுகளுக்கு அனுப்பப்படுமாம். 

    10:42 (IST)25 Jun 2019

    tamil news today: ஆலோசனையைத் தொடங்கினார் டிடிவி

    தங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ விவகாரம் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் தனது இல்லத்தில் ஆலோசனையைத் தொடங்கியுள்ளார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன். இதில் தேனி மாவட்ட முன்னாள் எம்.எல்.ஏ கதிர்காமு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டுள்ளனர். 

    10:36 (IST)25 Jun 2019

    சிறப்புப் பிரிவினருக்கான கவுன்சிலிங் தொடக்கம்.

    12-ம் வகுப்பு முடித்து பொறியல் பயில நினைக்கும் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு தொடங்கியுள்ளது. சென்னையில் நடைபெறும் இந்த கவுன்சிலிங் தொடர்ந்து 3 நாட்களுக்கு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    09:50 (IST)25 Jun 2019

    மாணவர்கள் போராட்டம்

    புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை சரபோஜி கல்லூரியின் 2000-ற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறார்கள். கல்வியை மத்திய பட்டியலில் இருந்து மாற்றி மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. 

    09:22 (IST)25 Jun 2019

    தங்க தமிழ்ச்செல்வன் வருத்தம் தெரிவிக்காதது வருத்தமாக உள்ளது - புகழேந்தி

    ”ஆடியோவில் பேசியதற்கு தங்கதமிழ்ச்செல்வன் வருத்தம் தெரிவிக்கவில்லை. தான் செய்ததற்கு வருத்தம் தெரிவிக்காமல் கட்சியை விட்டு நீக்குங்கள் என அவர் சொல்வதைபார்த்தால் திட்டமிட்டு பேசுவதுபோல் தெரிகிறது” என அமமுக-வின் புகழேந்தி தெரிவித்துள்ளார். 

    09:06 (IST)25 Jun 2019

    tamil news: தினகரனைப் பற்றி நான் தான் பேசினேன் - தங்கத் தமிழ்ச்செல்வன்

    ”கட்சியைப் பற்றி நான் பேசியது உண்மை தான். கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து நான் கருத்து கூறினேன். அது பிடிக்காவிட்டால், என்னை பிடிக்காவிட்டால் அமமுகவில் இருந்து நீக்க வேண்டியது தானே?” என ஆடியோ விவகாரம் தொடர்பாக பதிலளித்துள்ளார் அமமுக-வின் தங்கத் தமிழ்ச்செல்வன். மேலும் தெரிந்துக் கொள்ள "அந்த ஆடியோவில் பேசியது நான் தான்; கட்சியை விட்டு என்னை நீக்க வேண்டியது தானே?" - தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி

    08:46 (IST)25 Jun 2019

    Tamil News today: காவிரி மேலாண்மைக் கூட்டம்!

    காவிரி மேலாண்மை வாரியத்தின் 4-வது கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது. உத்தரவிடப்பட்டுள்ள நீரை கர்நாடகா திறந்து விட வேண்டுமென, தமிழகம் சார்பில் இதில் வலியுறுத்தப்படும் எனத் தெரிகிறது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துக் கொள்ளவிருக்கிறார்கள். 

    Tamil Nadu news today live updates: தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள் அனைத்தையும் ஐ.இ தமிழில் தெரிந்துக்  கொள்ளுங்கள்.

    இதற்கிடையே, வெளியுறவு செயலராக இருந்த ஜெய்சங்கரை, பிரதமர் நரேந்திர மோடி வெளியுறவுத்துறை அமைச்சராக நியமித்தார். கடந்த 30-ஆம் தேதி நடந்த பதவியேற்பு விழாவில், மற்ற கேபினட் அமைச்சர்களுடன் ஜெய்சங்கரும் பதவியேற்றுக் கொண்டார். அமைச்சரவையில் பொறுப்பேற்ற 6 மாதத்தில் நாடாளுமன்றத்தின் ஏதாவது ஒரு அவைக்கு உறுப்பினராக வேண்டும். இதைத்தொடர்ந்து, குஜராத் மாநிலங்களவை உறுப்பினராக ஜெய்சங்கரை தேர்வு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    தவிர, தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், பிரதமர் மோடியை விவேகானந்தருடன் ஒப்பிட்டுள்ளார். மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பேசிய ரவீந்திரநாத், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளித்து, அவர்களின் திறமையை வெளிக் கொண்டு வந்து, மாற்றத்தை ஏற்படுத்தி வரும் பிரதமர் மோடியை, விவேகானந்தரின் மறுஉருவமாக பார்ப்பதாக தெரிவித்தார்.

    Mk Stalin Dmk Aiadmk
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment