Tamil nadu news today updates : சிவசேனா, காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் உத்தவ் தாக்ரே. இன்று மாலை, சிவாஜி பூங்காவில் நடக்க இருக்கும் பதவி ஏற்பு விழாவில் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்கிறார். சிவாஜி பூங்கா , சிவசேனாவின் மதிப்புமிக்க கோட்டையாக கருதப்படுகிறது. 1995 ம் ஆண்டில், சிவசேனா-பாஜக கூட்டணி முதல் முறையாக மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றபோது, சேனா தலைவர் மனோகர் ஜோஷி இந்த சிவாஜி பூங்காவில் தான் முதல்வராக பதவியேற்றார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது பிஎஸ்எல்வி-சி47. கார்டோசாட்-3 மற்றும் அமெரிக்காவின் 13 செயற்கைகோள்களை சுமந்து சென்றது. கார்டோசாட்-3 செயற்கைக்கோள் விண்ணில், 509 கி.மீ. உயர சுற்றுவட்டப் பாதையில் 97.5 டிகிரி சாய்வில் நிலை நிறுத்தப்படுகிறது. புவி ஆராய்ச்சி, ராணுவ பாதுகாப்பு, எதிரிகளின் ராணுவ நிலைகளை கண்காணிக்க இந்த கார்டோசாட்-3 உதவும்.
அரிசி ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் பரிசுடன் 1000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சி மாவட்ட துவக்க விழாவில் அறிவித்தார். இட ஒதுக்கீட்டின் வரலாறு பற்றி அக்கறை இன்றி முதல்வர் பேசுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் எனவும், குமரிக்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும், சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
Live Blog
Tamil nadu news today live updates
அரசியல், விளையாட்டு, சமூகம் உள்ளிட்ட அனைத்து தமிழக செய்திகளையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்
சென்னை ஐஐடியில் தற்கொலை செய்துகொண்ட மாணவி பாத்திமா வழக்கு விசாரணைக்காக சென்னை வந்திருந்த அவரது தந்தை அப்துல் லத்தீஃப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “எனது மகள் இறப்பு விவகாரம் குறித்து டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளேன்” என்று கூறினார்.
குஜராத் உயர் நீதிமன்றத்தில் 4 சிறார்களின் பெற்றோர்கள் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள், நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து 14 முதல் 17 வயது வரை உள்ள 4 சிறார்களை மீட்டுவர காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
மக்களவையில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர். பாலு: கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு குறித்து போராடிய மக்களையும், மீனவர்களையும் விடுவிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி போராட்டக்காரர்களை விடுவிக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தவேண்டும் என்று மக்களவையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் வலியுறுத்தினார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர்கள் வெளிநடப்பு செய்வது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. விவாதம் நடத்த வேண்டுமென்று கூறும் எதிர்க்கட்சிகள் அதற்கு பதில் தரும்போது வெளிநடப்பு செய்வது சரியல்ல என்று கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்: பதவி ஆசை வந்துவிட்டால் பத்தும் பறந்துபோகும் என்பதற்கு சிவசேனா ஒரு உதாரணம். மகாராஷ்டிராவில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிலைக்கு மாறாக சிவசேனா செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
3 கட்சியும் எப்போது பதவியேற்கிறதோ அப்போது முதல் அவர்கள் கவுன்டவுன் ஆரம்பம் என்று கூறினார்.
வெப்பச் சலனம் காரணமாக கடலூர்,நாகப்பட்டினம், காஞ்சிபுரம்,திருவாரூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் லேசான முதல் மிதமான மழைப் பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் 'விவிபேட்' இயந்திரங்கள் பயன்படுத்தப்படாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு வாக்காளர் கல்விக்கு ழுழுவின் மண்டல பயிலரங்க கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ளார். மேலும் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் 100 விழுக்காடு வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தி வருகிறோம் என கூறினார். முதியவர்கள் வாக்களிப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவை தமிழகத்தில் அமல்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
அரசியல் சாசன தினத்தன்று கிடைத்த மிகப்பெரிய வெற்றி - மகாராஷ்டிரா நிகழ்வு குறித்து ப.சிதம்பரம் கருத்து
மகாராஷ்டிராவில் நள்ளிரவில் நடத்தப்பட்ட அரசியல் சாசன குளறுபடிகளுக்கு பிரதமர், குடியரசு தலைவர், ஆளுநர் உட்பட அனைவரும்தான் பொறுப்பு - ப.சிதம்பரம்
சம்பள உயர்வு கோரி கடலூரை சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் செந்தில்குமார் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினார். இதற்கு பதிலளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 177யின்படி பகுதிநேர ஆசிரியர்கள் தற்காலிக பணியாளர்களாக கருதப்படுவார்கள் என விளக்கம் அளித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த விளக்கம் சம்பள உயர்வு கோரி போராடும் பகுதிநேர ஆசிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஏற்கனவே 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 3 கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தது வரலாற்று சாதனை என தெரிவித்துள்ளார். இதற்காக மத்திய அரசு ஆயிரத்து 755 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் தமிழக அரசின் பங்காக ஆயிரத்து 170 கோடி ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் விளையாடுவதை பெற்றோர்கள் விரும்புவது இல்லை என பள்ளிகல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் ஆங்கில வழிகாட்டி புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், மாணவர்கள் முழுநேரமும் படித்து அதிக மதிப்பெண்களை பெற பெற்றோர்கள் விரும்புவதாக கூறினார். மேலும், பள்ளிகளை சுத்தப்படுத்த நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தினார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த பெண்ணை தாக்கிய வழக்கில், முன்ஜாமீன் கோரி தீட்சிதர் தர்ஷன் 2-வது முறையாக மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கோவில் நடை அடைக்கும் நேரத்தில் வந்து பூஜை செய்ய வேண்டுமென தகராறு செய்ததாகவும், தன்னை நோக்கி கையை தூக்கியதால், தற்காப்புக்காக தள்ளி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனக்கெதிராக போலீசார் பொய் வழக்கு பதியப்பட்டிருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளர். எனவே, இது தொடர்பாக பதிலளிக்க காவல்துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் வரும் 29ஆம் தேதி தொடக்கம். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டத்தை தொடங்கி வைக்கிறார். 1,000 ரூபாயுடன், பச்சரிசி, வெல்லம், கரும்பு துண்டு, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. மகாராஷ்டிராவில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-தேசிய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கின்றது. பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களின் எண்ணிக்கை 2014ம் ஆண்டை ஒப்பிடும் போது கடுமையாக குறையத் தொடங்கியுள்ளது. 2014ல் ஜம்மு-காஷ்மீரில் பாஜக கூட்டணியாக ஆட்சி அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தர்போது அங்கு ஜனாதிபதி ஆட்சி நடைபெற்றுவருகிறது.
நேற்று துணைமுதல்வர் பதவியை ராஜினாமா செய்த அஜித் பவார், இன்று மும்பையில் நடந்த தேசிய வாத காங்கிரஸ் எம்எல்ஏ க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஒய் பி சவான் மையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மகாராஷ்டிரா என்சிபி தலைவர் ஜெயந்த் பாட்டீல் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களான சாகன் பூஜ்பால், திலீப் வால்ஸ் பாட்டீல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கார்டோசாட்-3 செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
The advanced Cartosat-3 will augment our high resolution imaging capability. ISRO has once again made the nation proud!
— Narendra Modi (@narendramodi) November 27, 2019
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இதில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறது, தேர்தல் ஆணையம். நாளை காலை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் 11.30 மணிக்கு இந்த ஆலோசனை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்பட நடிகர் பாலாசிங் (67) உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். இந்தியன், புதுப்பேட்டை, என்.ஜி.கே., மகாமுனி உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பாலாசிங்! சமீபத்தில் வெளியான சங்கத்தமிழன் திரைப்படத்தில் கூட அரசியல் கட்சி தலைவராக நடித்திருந்தார்.
கார்டோசாட்-3 செயற்கைகோளை 509 கி.மீ. உயரத்தில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3ம் தலைமுறை தொலை உணர்வு செயற்கைகோள் தான் இந்த கார்டோசாட்-3. புவி ஆராய்ச்சி, ராணுவ பாதுகாப்பு, எதிரிகளின் ராணுவ நிலைகளை கண்காணிக்க இந்த கார்டோசாட்-3 உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சர்க்கரை விருப்ப குடும்ப அட்டை வைத்துள்ளவர்கள் அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்துகொள்வதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு நவம்பர் 29 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. மேலும், குடும்ப அட்டை தாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாயும் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, முந்திரி, திராட்சை, வெல்லம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights