கொரோனா வைரஸ் தொற்று பவரல் காரணமாக, தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, ஜூன் 3வது வாரத்தில் இருந்து பிளஸ் 1 வகுப்புகளைத் தொலைத் தொடர்பு வழியாக தொடங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் கொரோனா பரவல் தொடங்கியது 2020ம் ஆண்டு மார்ச் இறுதியில் பள்ளிகள் மூடப்பட்டன. அதன் பிறகு, 2021 ஜனவரி 19 தேதியில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், ஏப்ரல் இறுதிக்குள்ளாகவே கொரோனா 2வது அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. அதனால், கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-21 கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு, 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜூன் 3வது வாரத்தில் இருந்து பிளஸ் 1 வகுப்புகளைத் தொலைத் தொடர்பு வழியாக தொடங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாடப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களைக்காட்டிலும் 10 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரை கூடுதலாக சேர்க்கை நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்கு அதிக விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்தலாம். அதிக விண்ணப்பங்களைப் பெறும் பாடப்பிரிவிற்கு தொடர்புடைய பாடங்களில் இருந்து 50 வினாக்களில் தேர்வுகளை நடத்தலாம். அதன்மூலம் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளலாம் என்று வழிகாட்டுதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதோடு, பிளஸ் 1 வகுப்புகளுக்கு ஜூன் 3ஆம் வாரத்தில் தொலைதொடர்பு முறையில் வகுப்புகளைத் தொடங்க வேண்டும். 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சிகள் மூலமாகவும், தொலைதொடர்பு முறையிலும் வகுப்புகளை நடத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.