Advertisment

தமிழ்நாடு அல்லது தமிழகம்? கவர்னர் – தி.மு.க மோதலில் மொழிபெயர்ப்பு தோல்வி

தமிழகம் என்பது மாநிலத்திற்கு மிகவும் பொருத்தமான பெயர் என்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி. ஆனால் இந்த முன்மொழிவின் பின்னணியில் தமிழர் வரலாற்றைத் தவறாகப் புரிந்துக் கொள்வதும், “நாடு” என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதில் உள்ள சிக்கலும் உள்ளது

author-image
WebDesk
New Update
தமிழ்நாடு அல்லது தமிழகம்? கவர்னர் – தி.மு.க மோதலில் மொழிபெயர்ப்பு தோல்வி

Arun Janardhanan 

Advertisment

தமிழ்நாடு என்பதை விட, தமிழகம் என்பது மிகவும் பொருத்தமான பெயர் என்ற கவர்னர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு, ஆளும் தி.மு.க., தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது, மேலும் மாநிலத்திற்கு வேறு பெயரை பரிந்துரைக்கும் உரிமை குறித்து கேள்வி எழுப்பிய தி.மு.க, மாநில அரசியலில் கவர்னர் தேவையில்லாமல் தலையிடுவதாக குற்றம்சாட்டியுள்ளது. தி.மு.க. எதிர்ப்பு தெரிவிப்பதால் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு பா.ஜ.க பக்கபலமாக உள்ள நிலையில், அவரின் கருத்தை எதிர்க்கட்சியான அ.தி.மு.க ஏற்கவில்லை.

விவாதத்தின் மையத்தில் "நாடு" என்ற வார்த்தை உள்ளது, அதாவது "புவியியல் எல்லை" அல்லது "நிலம்". ஆனால் தமிழ் வரலாற்றின் தவறான புரிதல் மற்றும் மொழிபெயர்ப்பின் சிக்கலான தன்மையால் "நாடு" என்பது "Country" அல்லது "தேசம்" என்று பொருள்படுகிறது. இவ்வாறு, பல தசாப்தங்களாக தேசியவாதம் மற்றும் துணை-தேசியவாத விவாதங்களின் மையத்தில் பிரதான அரசியல்வாதிகள் இருக்கும் மாநிலத்தில், அடிப்படையில் மொழியியல் விஷயம் ஒரு அரசியல் விஷயமாக மாறியுள்ளது, மற்றும் "நாடு" என்பது தமிழ் தேசியத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: பால் புதுமையர் இலக்கியங்களை கொண்டு சேர்க்கும் முயற்சி: சென்னை புத்தக கண்காட்சி ரவுண்ட் அப்

தமிழ்நாட்டின் அர்த்தத்தைப் பற்றிய இந்தக் கருத்தைக் குறிப்பிட்டு, ஜனவரி 4 ஆம் தேதி ராஜ்பவனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, “இங்கு தமிழ்நாட்டில், ஒரு வித்தியாசமான கதை உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுமைக்கும் பொருந்தக்கூடியவற்றுக்கு எல்லாம் தமிழ்நாடு இல்லை என்று சொல்லும். இது ஒரு பழக்கமாகிவிட்டது. பல ஆய்வறிக்கைகள் எழுதப்பட்டுள்ளன, அனைத்தும் தவறான மற்றும் மோசமான புனைகதை. இதை உடைக்க வேண்டும். உண்மை வெல்ல வேண்டும். அழைப்பதற்கு தமிழகம் என்பது மிகவும் பொருத்தமான வார்த்தை. நாட்டின் பிற பகுதிகள் நீண்ட காலமாக வெளிநாட்டினரின் கைகளில் சிக்கி பல அழிவுகளைச் சந்தித்தன,” என்று கூறினார்.

ஆளுநரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க எம்.பி கனிமொழி, “தமிழ்நாடு என்ற பெயர் நமது மொழி, பாரம்பரியம், அரசியல் மற்றும் வாழ்க்கையையே குறிக்கிறது. அந்த பெயரை மாநில சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தவர் சி.என் அண்ணாதுரை. இந்த நிலம் என்றென்றும் தமிழ்நாடாகவே இருக்கும்,” என்று கூறினார்.

“தமிழ்நாடு” என்ற கருத்து தனிச்சிறப்புமிக்கது என குறிப்பிட்ட, தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், “நீண்ட போராட்டத்துக்குப் பிறகு இந்தப் பெயரை வைத்தவர் தி.மு.க.,வின் நிறுவனர் அண்ணா (அண்ணாதுரை). அண்ணாதுரை, மு.கருணாநிதியின் வழியைப் பின்பற்றும் முதல்வர் ஸ்டாலின் அதை பாதுகாப்பார்,” என்று கூறினார்

தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான முரசொலி கவர்னர் ஆர்.என்.ரவியை விமர்சித்து எழுதியது, “தமிழ்நாடு என்ற பெயர் இறையாண்மை கொண்ட தேசத்தைக் குறிக்கிறது என்கிறார் கவர்னர். ராஜஸ்தான் என்ற பெயர் உங்களுக்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் அல்லது துர்க்மெனிஸ்தான் போன்று உள்ளதா? மகாராஷ்டிரா ஒரு பிரிவினைவாதப் பெயர் அதன் பெயர் மராட்டியர்களின் நிலத்தைக் குறிக்கிறது அல்லவா? கேரளாவின் சுற்றுலா முழக்கம், ‘கடவுளின் சொந்த நாடு’, தேசிய மாநில அந்தஸ்துக்கான கோரிக்கையாகவும் இருக்கலாம். தெலுங்கு தேசம் கட்சியில் உங்களுக்கு ‘தேசம் (நிலம்)’ இருப்பது சிக்கலாக இல்லையா?” என்று கேள்வி எழுப்பியது.

“இந்தியா ஒரு பிரிட்டிஷ் உருவாக்கிய நாடு” என்பதை ஆளுநருக்கு நினைவூட்டிய முரசொலி, கற்பனையான “அகண்ட பாரதம்” பற்றி பெருமிதம் கொள்ளாமல், இந்தியாவை உருவாக்கிய ஆங்கிலேயர்களுக்கு நன்றி சொல்லுமாறு கேட்டுக் கொண்டது.

தி.மு.க.,வின் முக்கிய போட்டியாளரும், பா.ஜ.க கூட்டணி கட்சியுமான அ.தி.மு.க.,வும் கவர்னர் ஆர்.என்.ரவியின் முன்மொழிவுடன் உடன்படவில்லை. அண்ணாதுரையின் அரசியல் போக்கையே அ.தி.மு.க கட்சியும் பின்பற்றுகிறது என்று கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "எங்களுக்கு என்றும் தமிழ்நாடாகவே இருக்கும்" என்று கூறினார்.

ஆனால், ஆளுங்கட்சியை கடுமையாக சாடிய பா.ஜ.க மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, “தி.மு.க.,வின் கருத்தியல் தாய்க்கட்சியின் (சமூக சீர்திருத்தவாதி பெரியார் நிறுவிய திராவிடர் கழகம்) தனி திராவிட நாடு, பின்னர் தனி தமிழ்நாடு விருப்பத்தை, தங்கள் கடந்த கால பிரிவினைவாத கொள்கையை குழிதோண்டிப் புதைக்க தி.மு.க நீண்டகாலமாக முயற்சித்து வருகிறது,” என்று கூறினார்.

1967 தீர்மானமும் திராவிட நாடும்

1967ல், சென்னை மாநிலத்தின் பெயரை, தமிழகம் என மாற்ற, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தில், அப்போதைய முதல்வராக இருந்த அண்ணாதுரை, புதிய பெயர் மற்றும் அதன் அர்த்தம் குறித்து எந்த தெளிவையும் விட்டுவிடாமல், “இது இந்தியாவில் உள்ள ஒரு மாநிலம். தனி நாடு அல்ல,” என்று கூறினார்.

பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த தமிழ் வரலாற்றாசிரியர் ஒருவர், உள்ளூர் சூழலில் “நாடு” என்பது தேசிய-அரசு என்று பொருள்படவில்லை என்றாலும், தமிழ் துணைத் தேசியம் காரணமாக அது அரசியல் அர்த்தத்தை பெற்றுள்ளது என்று கூறினார். மேலும், “தமிழ் துணைத் தேசியம் அதன் நீண்ட வரலாறு, இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தின் காரணமாக நவீன யுகத்தில் தேசியவாதமாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு வம்சங்கள் இருந்தபோதிலும், மக்கள் வாழ்ந்த நிலம் மற்றும் அதன் எல்லைகள் பற்றிய பண்டைய இலக்கியக் குறிப்புகள், ‘தமிழ் நிலம்’ என்பதற்கு ‘தமிழ்நாடு’ என்பதே பொருத்தமான சொல் என்பதைக் காட்டுகிறது. நிலத்தின் கலாச்சார மற்றும் அரசியல் வரலாறு அதை நியாயப்படுத்துகிறது. ஆனால், ‘தமிழகம்’ என்ற வார்த்தை அங்கு இல்லை, பொருத்தமான பயன்பாட்டாகக் கூறுவதற்கு போதுமான வரலாறும் இல்லை,” என்றும் அவர் கூறினார்.

"நாடு" என்ற கருத்து பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் காவியமான சிலப்பதிகாரம், புவியியல் ரீதியாக தமிழ்நாட்டை "வடவேங்கடமும் தென்குமரியும்" அல்லது "வடக்கு திருப்பதி முதல் தெற்கு கன்னியாகுமரி" என்று வரையறுத்து, திருப்பதியை தமிழ்நாட்டின் வடக்கு எல்லையாகக் குறிக்கிறது. கவிஞர் இளங்கோ அடிகளினால் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் ஒன்றுபட்ட தமிழ்நாடு என்ற கருத்தை முன்வைத்த முதல் நூல்களில் ஒன்றாகும்.

“கண்ணகிக்கும் கோவலனுக்கும் இடையிலான சோகமான காதல் கதை இளங்கோ அடிகளின் இலக்கை வெளிப்படுத்துகிறது” என்று தமிழறிஞர் ஒருவர் கூறினார். மேலும், “கண்ணகியும் கோவலனும் சோழர்களின் தலைநகரான காவேரிபூம்பட்டணத்திலிருந்து வந்தவர்கள். கோவலன் பாண்டியரின் மதுரைக்கண்டம், அதாவது இப்போதுள்ள மதுரைக்குச் செல்கிறான். கோவலன் அரசியின் காற்சிலம்பை திருடியதற்காக கொல்லப்படுகிறான், ஆனால் உண்மையில் அவன் திருடவில்லை. கண்ணகி பழிவாங்கும் விதமாக மதுரையை எரித்துவிட்டு, தற்போது முற்கால கேரளா என்று அழைக்கப்படும் சேர நாட்டில் உள்ள வஞ்சிக்கு குடிபெயர்ந்தாள், அங்கு அவள் இறந்தாள். இளங்கோ அடிகளார் சிலப்பதிகாரம் இம்மூன்று நாடுகளிலும் நடந்ததாக எழுதியுள்ளார், ​​புகழ்பெற்ற சேர மன்னனான சேரன் செங்குட்டுவன், கண்ணகி இறந்த இடத்திற்குச் சென்று அவளைப் போற்றும் வகையில் கோயில் எழுப்பியதையும் நாம் காணலாம்,” என்று அந்த தமிழறிஞர் கூறினார்.

மேலும், சேர, சோழ மற்றும் பாண்டிய வம்சங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்பதற்காக இளங்கோ அடிகள் இந்தக் காவியத்தை எழுதியதாக பல ஆய்வுகள் நம்புகின்றன என்று அறிஞர் கூறினார்.

தமிழ் "நிலம்" என்ற கருத்தைச் சுற்றியுள்ள இந்த நீண்டகால வரலாற்று மற்றும் கலாச்சார உரையாடலில், தமிழர்களுக்கான நாடு அல்லது திராவிட நாடு என்ற கோரிக்கை கடந்த நூற்றாண்டில் திராவிட அரசியலில் இருந்து வெளிப்பட்டது. அண்ணாதுரை தனது செய்தியை மக்களிடம் கொண்டு செல்வதற்கான முக்கிய வழியாக பயன்படுத்தியது திராவிட நாடு என்ற பத்திரிகை. இது அக்கால இளைஞர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது, அவர்களது பெற்றோர்களில் பலர் காங்கிரஸ் கட்சி மற்றும் மகாத்மா காந்தியின் வலுவான ஆதரவாளர்களாக இருந்தனர்.

1920களில் இருந்து அப்போதைய மெட்ராஸ் பிரசிடென்சியில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தொடங்கின. இந்த கிளர்ச்சிகள் ஒவ்வொரு தசாப்தத்திற்குப் பிறகும் நடந்தன மற்றும் 1950 களில் ஒரு தலைமையின் கீழ் வந்தன. இந்திய சுதந்திரத்தின் போது, ​​பிராந்தியத்தை மொழிவாரியாக மறுசீரமைக்க வேண்டும் என்ற எண்ணம் வேகமெடுத்தது. சில தென்னிந்திய மாநிலங்கள் "வழக்கொழிந்த" அல்லது "கற்பனை" மொழி அடிப்படையிலான பிரதேசங்களைக் கோரின. பொட்டி ஸ்ரீராமுலு ஆந்திராவை சென்னையிலிருந்து பிரிக்க போராடினார். உண்ணாவிரதப் போராட்டத்தில் அவரது மரணம் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கையை கட்டாயப்படுத்தியது மற்றும் மத்திய அரசு மொழி மூலம் நிலத்தை மறுசீரமைக்க ஒப்புக்கொண்டது. ஆந்திரப் பிரதேசம் உருவாக்கப்பட்டதால், அது கேரளா-மெட்ராஸ் பிரிவினைக்கு வித்திட்டது. ஒரு உணர்ச்சிப்பூர்வமான விஷயம் என்னவெனில், தமிழ் காங்கிரஸ் பிரமுகரும், முன்னாள் முதல்வருமான கே.காமராஜ், கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு அதன் நியாயமான பங்கைப் பெறுவதற்கு போதுமான அளவு போராடவில்லை என்று இன்னும் குற்றம் சாட்டப்படுகிறார்.

"திராவிட இயக்கம், குறிப்பாக தி.மு.க.,வும் அதன் தாய்க் கட்சியான திராவிடர் கழகமும் கடந்த நூற்றாண்டில் தேசியவாதத்தை மறுவடிவமைத்தது" என்று தமிழறிஞர் ஒருவர் கூறினார். மேலும், “திராவிடக் கட்சிகள் திராவிட நாடு வேண்டும் என்று விரும்பினர், இந்தக் கருத்துக்களைக் கொண்ட அண்ணாதுரையின் நாளிதழ் ஒரு கட்டத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பழமைவாதிகளும் காங்கிரஸ் ஆதரவாளர்களும் இந்தப் புதிய இயக்கம் ஒரு தலைமுறையைச் சிதைத்துவிடும் என்று அஞ்சினார்கள். ஆனால், திராவிட நாடு நடக்கவில்லை, ஏனெனில் அண்ணாதுரையின் மரணத்திற்கு முன், அந்த எண்ணத்தை தி.மு.க., கைவிட வேண்டியதாக இருந்தது, "தமிழகத்தை" விட "நாடு" வரலாற்று நம்பகத்தன்மையைக் கொண்டுள்ளது” என்றும் அந்த அறிஞர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Dmk Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment