போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டம் : தமிழகத்தில் இருக்கும் போக்குவரத்து சங்கங்கள் இன்று கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் நேற்று சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து துறை செயலாளர் பி.டபுள்யூ.சி.டேவிதாருடன் போக்குவரத்து சங்க நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டம்
இந்த பேச்சு வார்த்தையில் தொ.மு.ச, சி.ஐ. டி. யூ., எ.ஐ.டி.யூ.சி, தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை, பா.ம.க., தே.மு.தி.க., எச்.எம்.எஸ். போன்ற தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகையை வழங்குதல் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதில் எந்த ஒரு உடன்பாடும் எட்டப்படாத நிலையில் இன்று திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என தொ.மு.ச பொதுச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
இதுகுறித்து சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன் கூறும்போது, “சென்னை பல்லவன் சாலையில் இருந்து கோட்டையை நோக்கி முற்றுகையிட செல்ல இருக்கிறோம். போலீஸ் அனுமதி வழங்கவில்லை என்றாலும் போராட்டம் நடைபெறும். அதன்பின்னர் அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிப்போம்” என்றார்.