வட கிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும், வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
மேலும், குமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்றும் நாளையும் கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மீமிசல் (புதுக்கோட்டை), ஆலங்குடி (புதுக்கோட்டை), ஈச்சன்விடுதி (தஞ்சாவூர்), மதுக்கூர் (தஞ்சாவூர்), பாபநாசம் (திருநெல்வேலி) ஆகிய பகுதிகளில் தலா 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை :
குமரிக் கடல் பகுதிகளில் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்தக் காற்று வீசக்கூடும். மாலத்தீவு பகுதிகளில் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்தக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil