நீட் தேர்விலிருந்து நிச்சயம் தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வை திரும்பப்பெற வேண்டும் என்று பேசிய மாணவி அனிதாவின் மரணம், தமிழக அரசியல் சூழலையே மாற்றியது. மேலும் எல்லா வருடமும் நீட் தேர்வு முடிவுகள் வெளிவரும் நாளில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் செய்தி அதிகரிக்கிறது. நீட் தேர்வுக்கென்று தனியாக பயிற்சி பெறும் அளவுக்கு மாணவர்களின் பொருளாதார சூழல் இல்லை என்பதாலும், இதனால் விளிம்பு நிலை மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் முன்னிட்டு, தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் மா. சுப்பிரமணியம் பேசியதாவது” கூடியவிரைவில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைத்துவிடும். அதற்கான சட்டப்போராட்டத்தை முதல்வர் மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டிற்கு தேவையான வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு நிதி ஆதாரங்களை பெற்றிருக்கின்றோம். எய்ம்ஸ் நிதி ஆதாரத்தை கேட்டிருக்கின்றோம். ஏப்ரல் மாதத்தில் டெண்டர் முடிந்தவுடன் கட்டுமானத்திற்கான ஒப்பந்தகள் பெறப்படும். அவை இறுதி செய்யப்பட்டு 2024-ம் ஆண்டு இறுதியில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கும். 2024-ம் ஆண்டு பணிகள் தொடங்கினால் 2028-ம் ஆண்டு இறுதியில் கட்டுமான பணிகள் முடியும்” என்று அவர் கூறினார்