கத்தோலிக்க கிறிஸ்துவர்கள்தான் திராவிட மாடல் ஆட்சி நடைபெற முக்கிய காரணம் என்று சபாநாயகர் அப்பாவு பேசியது தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி, சபாநாய்கர் அப்பாவு மற்றும் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோர், திருச்சியில் நடந்த கிருஸ்துவ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
அப்போது சபாநாயகர் அப்பாவு பேசியபோது, “ தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்துவ பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் இல்லையென்றால் தமிழ்நாடு பிகார் போல மாறியிருக்கும். நீங்கள்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். இது உங்கள் அரசு. உங்கள் பிரார்த்தனைகள்தான் தமிழகத்தின் அரசை உருவாக்கி உள்ளது. நீங்கள் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய தேவையில்லை. உங்களது பிரச்சனைகளை பட்டியலிட்டு தமிழக முதலமைச்சரிடம் சமர்பிக்கவும். இது உங்கள் அரசு. முதல்வரும் உங்கள் முதல்வர்தான். தமிழகத்திலிருந்து கிறிஸ்துவர்கள் நீக்கப்பட்டால், தமிழகத்தில் வளர்ச்சி இருக்காது. இன்றைய தமிழ்நாடு உங்களால்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது” என்று அவர் பேசியுள்ளார்.
இந்நிலையில் அவர் பேசிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளித்த அப்பாவு,” எனது பேச்சை அவர்கள் பரப்புகிறார்கள் என்றால் அதை நல்ல விஷயமாக பார்க்கிறேன். ஆனால் நான் பேசியதில் ஒரு பாகத்தை மட்டும் எடுத்துக்கொண்டு பரப்பப்படுகிறது. இதனால் நான் அதை பேசவில்லை என்று கூறமாட்டேன். நான் பேசியது வரலாறுதான். இதில் அரசியலுக்கு இடம் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.