இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை புகழ்ந்து பாடிய சிங்கள பாடகி யோஹானி டி சில்வாவை தமிழ் சினிமாவில் பாட வைப்பதா என்று கேள்வி எழுப்பி இலங்கை தமிழர்களும் தமிழ்த்தேசிய ஆதரவாலர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
உலக அளவில் பிரபலமான ‘மணிகே மகே ஹிதே’ என்ற சிங்கள மொழி பாடலின் மூலம் பிரபலமானவர் பாடகி யோஹானி டி சில்வா, இவர் தமிழ் சினிமாவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், மதன் கார்க்கி வரியில் பாடிய பாடலுக்கு இலங்கைத் தமிழர்கள் மற்றும் தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. யோஹானி டி சில்வா தமிழ் சினிமாவில் பாடுவதற்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்?
யார் இந்த யோஹாணி டி சில்வா
பிரபலமான ‘மணிகே மகே ஹிதே’ என்ற சிங்கள மொழிப் பாடலைப் பாடியதன் மூலம் உலக அளவில் அறியப்பட்டவர் பாடகி யோஹாணி டி சில்வா. ஆனால், இவர் அதற்கு முன்னதாகவே இலங்கையில் சிங்களர்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கும் நன்கு தெரிந்தவர்.
பாப் இசை பாடகியான யோஹானி, இலங்கை அரசின் சிங்கள ராணுவ தளபதிகளில் ஒருவரான பிரசன்ன டி சில்வாவின் மகள் ஆவார். 2009ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவம் தமிழர்களை படுகொலை செய்தது. இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவ தளபதியாக இருந்த பிரசன்ன டி சில்வாவிற்கு முக்கிய பங்கு இருக்கிறது என்று இலங்கை தமிழர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். சிங்கள இனவெறி மிக்க அதிகாரிகளில் சில்வாவும் ஒருவர் என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட இறுதி யுத்தத்தின் போது இலங்கை ராணுவ தளபதிகளில் ஒருவான பிரசன்ன டி சில்வாவின் மகளான பாடகி யோஹானா, “என் அப்பாதான் விடுதலைப்புலிகளையும், தமிழர்களையும் கொன்ற, சிங்கள சிங்கம்”
என்று பெருமையுடன் கூறியதாக இலங்கை தமிழர்களும் தமிழ்த் தேசிய ஆதரவாளர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த சூழலில்தான், பாடகி யோஹானி, சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் தி லெஜெண்ட் சரவணன் நடித்துள்ள படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மதன் கார்க்கி வரிகளில் பாடியுள்ளார். இந்த படத்தில் ஒரு பாடலை யோஹானியை அழைத்து வந்து பாட வைத்திருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் கீர்த்தி திவாரி ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் பிரபு, நாசர் உள்ளிட்ட பிரபலங்களும் நடிக்கின்றனர்.
இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் நடந்த தமிழர்கள் படுகொலையில் முக்கிய பங்கு வகித்த சிங்கள ராணுவ தளபதி பிரசன்ன டி சில்வா மகள் யோஹானி டி சில்வா தமிழ் சினிமாவில் பாட வைக்கலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பக இயக்குனர் மு. களஞ்சியம் தனது ட்விட்டர் பக்கத்தில்குறிப்பிடுகையில், “என் அப்பாதான் விடுதலைப்புலிகளையும், தமிழர்களையும் கொன்ற, “சிங்கள சிங்கம்”
என்று பெருமைப்படும் இனப்படுகொலையாளி ராணுவ தளபதி பிரசன்ன டீ சில்வாவின் மகள் பாடிய பாட்டை ஹாரிஸ் ஜெயராஜும் , மதன் கார்க்கியும் நீக்க வேண்டும்.
இன எதிரியின் குரல் நமக்கெதற்கு?” என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில் “என் அப்பாதான் விடுதலைப்புலிகளையும் எங்களை எதிர்த்த தமிழர்களையும் கொன்று எங்கள் நாட்டை விடுதலை செய்தவர்"
என்று பெருமைப்படும் இனப்படுகொலையாளி ராணுவ தளபதி பிரசன்ன டீ சில்வாவின் மகளை பாட்டு பாட வைத்திருக்கிறார்கள் ஹாரிஸ் ஜெயராஜும் , மதன் கார்க்கியும்
தமிழர்களா நீங்கள்?” என்று இயக்குனர் மு களஞ்சியம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிகை விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, அந்த படம் கைவிடுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் நடந்த தமிழர்கள் இனப் படுகொலையில் முக்கிய பங்கு வகித்த சிங்கள ராணுவ தளபதி பிரசன்ன டி சில்வா மகள் யோஹானி டி சில்வா தமிழ் சினிமாவில் பாடுவதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.