Ministers Meet Governor : தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட துறை ரீதியான அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், வருகிற பிப்ரவரி 2ம் தேதி தமிழக ஆளுநர் தலைமையில் நடைபெற உள்ள இந்த ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடரில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் வருகிற பிப்ரவரி மாதம் துவங்கப்பட உள்ள காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, ரூ.52,257 கோடிக்கு புதிய முதலீட்டுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், தமிழ்நாடு தொழில் கொள்கை 2021" வெளியிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், 34 முக்கிய முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீட்டு திட்டங்கள் மூலம் 93,935 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில், இடைக்கால பட்ஜெட் மற்றும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழகர்கள் விடுதலை தொடர்பாக சந்தித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களின் விடுதலை குறித்து ஆளுநரை சந்தித்தோம். 7 பேர் விடுதலை தொடர்கா ஆளுநர் நல்ல முடிவை எடுத்து தக்க நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"