இணையதள வசதிகள் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், இதனை பயன்படுத்தி மோசடி சம்பவங்கள் அரங்கேறுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த மோசடி சம்பவங்களில் முக்கியமான ஒன்று சமூகவலைதளங்களில் போலி கணக்கு. பிரபமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பெயரில் மர்மநபர்கள் சிலர் போலி கணக்கு தொடங்கி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் சம்பவங்கள்ஏராளமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக இதில் திரைத்துறை பிரபலங்களே அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். திரைத்துறையில் முன்னணி நடிகர்கள் பெயரில் போலி கணக்கு தொடங்கி பட வாய்ப்பு தருவதாக கூறி பலபேரிடம் மோசடி செய்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. அவ்வப்போது அரசியல் பிரபமுகர்களும் இந்த பிரச்சினையில் சிக்குவதும் உண்டு. அந்த வகயில் தற்போது அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஒ.பன்னீர்செல்வம் மகன் பெயரில் போலி கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
தேனி மாவட்டத்தை சேர்ந்த ஒ.பன்னீர்செல்வத்தின் இளையமகன் ஜெயபிரதீப், பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் கோவில் அன்பர் பணி செய்யும் பராமறிப்புகுழு தலைவராக உள்ளார். தனது பெயரில் பேஸ்புக் கணக்கு தொடங்கியுள்ள நிலையில், தனது தொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். தற்போது இவரது பெயரில் போலி கணக்கு தொடங்கி அதில் இவரது புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கணக்கு ஜெயபிரதீபின் உண்மையான கணக்கு என்று நினைத்து பலரும் இந்த கணக்கில் நண்பர்களாக இணைந்துள்ளனர். சிறிது நாட்களில் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், இந்த வங்கி கணக்கில் பணம் செலுத்துமாறும் பலரது பேஸ்புக் கணக்கிற்கு தனிப்பட்ட செய்தி வந்துள்ளது. இதனால் பலருக்கும் சந்தேகம் எழுந்த நிலையில், இந்த போலி கணக்கு தொடர்பாக ஜெயபிரதீப்க்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இந்த போலி கணக்கு தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த ஜெயபிரதீப், பேஸ்புக்கில் கொடுக்கப்பட்ட வங்கி கணக்கை முடக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் ஜெயபிரதீப் பெயரில் போலி கணக்கு தொடங்கியது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil