Advertisment

Tamil News: ஓமந்தூரார் தோட்டத்தில் இன்று கருணாநிதி சிலை திறப்பு

Tamil Nadu News, Tamil News LIVE, Petrol price Today, IPL 2022, PM Modi Chennai visit Highlights- 2022- 27 May 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News: ஓமந்தூரார் தோட்டத்தில் இன்று கருணாநிதி சிலை திறப்பு

Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 5வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

IPL 2022: 2வது குவாலிஃபயர் போட்டியில் வெல்ல போவது யார்?

ஐ.பி.எல் போட்டியின் 2-வது குவாலிஃபயர் போட்டியில் பெங்களூர், ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த சீசனில் 14 லீக் போட்டிகளில் விளையாடி 9 வெற்றி மற்றும் 5 தோல்விகளை ராஜஸ்தான் அணி சந்தித்துள்ளது. இதேபோல் பெங்களூரு அணி இந்த சீசனில் 14 லீக் போட்டிகளில் 8 வெற்றி மற்றும் 6 தோல்விகளை சந்தித்துள்ளது. கடந்த 24-ம் தேதி நடைபெற்ற முதல் குவாலிஃபயர் போட்டியில், முன்னாள் சாம்பியான ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தேர்வானது.

இன்று நடைபெறும் போட்டியில், வெற்றி பெறும் அணி, குஜராத்துடன் இறுதி போட்டியில் மோத உள்ளது.

&feature=youtu.be

ரூ.31,400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்!

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக அரசு முறை பயணமாக வியாழன் அன்று சென்னை வந்தார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில் மத்திய, மாநில அரசுத் துறைகளின் சார்பில் ரூ.31,400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

யாழ்பாணத்திற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் நான்தான்.. மோடி!

சென்னையில் வியாழன் மாலை நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு வீடுகள் கிடைத்துள்ளன. தமிழ் மொழியை மேலும் வளர்க்க மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், தமிழ் மொழி படிப்பதற்காக இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. யாழ்பாணத்திற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் நான்தான். பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு தேவையான உதவிகளை இந்தியா செய்து வருகிறது. இலங்கை மக்களுக்கு ஆதரவாக, இந்தியா எப்போதும் துணை நிற்கும் என பேசினார்.

Tamil News Latest Updates

கச்சதீவை மீட்க இதுதான் உரிய தருணம்.. மு.க.ஸ்டாலின்!

கல்வி, பொருளாதாரம், மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு சிறப்பாக விளங்குகிறது. கச்சதீவை மீட்க இதுதான் உரிய தருணம், ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும். இழப்பீடு காலத்தை அடுத்த 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். இந்திக்கு நிகராக அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும், நீட் விலக்கு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:05 (IST) 27 May 2022
    உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

    லடாக் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதில் நமது துணிச்சலான ராணுவ வீரர்களை இழந்து தவிக்கிறோம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.



  • 21:04 (IST) 27 May 2022
    குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு

    குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியடப்பட்டுள்ளளது. உத்தேச விடைக்குறிப்பில் ஆட்சேபனைகள் இருப்பின் ஒரு வாரத்திற்குள் பதிவு செய்யலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.



  • 21:04 (IST) 27 May 2022
    உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ராகுல்காந்தி இரங்கல்

    லடாக் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள காங். எம்.பி. ராகுல் காந்தி ராணுவ வீரர்கள் உயிரிழந்த செய்தி வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.



  • 19:13 (IST) 27 May 2022
    காவல்துறை குற்றங்கள் இல்லாத நிலையை உருவாக்கும் துறையாக மாற வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

    பதக்கங்கள் வழங்கும் விழாவில் உரையாற்றிய முதல்வர் இந்த பதக்கங்கள் காவல்துறையினருக்கு கிடைத்துள்ள பெரும் அங்கீகாரம் காவல்துறை என்றாலே தண்டனை வழங்கும் துறையாக பார்க்கிறார்கள் காவல்துறை, குற்றங்கள் இல்லாத நிலையை உருவாக்கும் துறையாக மாற வேண்டும். காவல்துறைக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் நிலையை எந்த காவலரும் உருவாக்கி விடக்கூடாது அரசியல், சாதி, மதம் காரணமாக வன்முறைகள் உருவாகாமல் தடுக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.



  • 17:49 (IST) 27 May 2022
    காவல்துறையினருக்கு பதக்கங்கள் வழங்கும் விழா

    சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் 2019 முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான 322 பதக்கங்களை 319 காவல்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார்

    காவல்துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை உள்ளிட்ட காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படுகிறது



  • 17:48 (IST) 27 May 2022
    குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு

    டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீரை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் மலர் தூவி திறந்து வைத்தனர். கடந்த 24ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்



  • 17:07 (IST) 27 May 2022
    லடாக் வாகன விபத்தில் 7 ராணுவ வீரர்கள் பலியானதாக தகவல்

    லடாக்கின் துர்துக் பகுதியில் நடந்த வாகன விபத்தில் 7 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகியுள்ள நிலையில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 16:39 (IST) 27 May 2022
    பழனியில் நடைபெறவிருந்த பொதுப்பணித்துறை ஏலம் ரத்து

    சேலத்தில் இருந்து வந்த ஒப்பந்ததாரர்களின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட நிலையில் பழனியில் நடைபெறவிருந்த பொதுப்பணித்துறை ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.



  • 15:58 (IST) 27 May 2022
    'தமிழ்நெட்’ புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!

    கிராமங்களிலும் தடையில்லா இணைய சேவையை வழங்க, பாரத் இணைய திட்டத்திற்கான இறுதி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றும், 'தமிழ்நெட்’ என இத்திட்டத்திற்கு பெயர் மாற்றப்படும் எனவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தமிழக தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ் அமைச்சர் தெரிவித்துள்ளார்.



  • 15:28 (IST) 27 May 2022
    அரபி' பட போஸ்டர் வைரல்!

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள 'அரபி' பட போஸ்டர் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.



  • 15:14 (IST) 27 May 2022
    தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட்!

    பிரதமர் மோடி நேற்று சென்னை வந்த நிலையில், இன்று தனது ட்விட்டரில் பதிவில், நேற்றைய தமிழ்நாடு பயணம் மறக்க முடியாத பயணமாக அமைந்தது" என்று பதிவிட்டுள்ளார்.



  • 15:11 (IST) 27 May 2022
    மெகா தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

    தமிழ்நாட்டில் ஜூன் 12ம் தேதி ஒரு லட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.



  • 14:39 (IST) 27 May 2022
    "மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும்" - அமைச்சர் பொன்முடி!

    இன்று தலைமைச் செயலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழ்நாட்டில் மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த தேவை இல்லை என்றும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வந்தால் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படாது என்றும் கூறியுள்ளார்.

    முன்னதாக, இன்று காலை திருவாரூரில் நடைபெற்ற தேசிய கல்விக் கொள்கை கருத்தரங்கில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “தேசிய கல்விக் கொள்கை திட்டம் சுமூகமாக நடைமுறைக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. கல்வியில் மிகப்பெரிய மறுமலர்ச்சி மற்றும் புரட்சியை பிரதமர் மோடி ஏற்படுத்தி உள்ளார்” என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.



  • 14:36 (IST) 27 May 2022
    'ஜூலை 1ஆம் தேதி முதல் பாலிடெக்னிக் முதலாம் ஆண்டில் சேர விண்ணப்பிக்கலாம்'- அமைச்சர் பொன்முடி

    இன்று செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஜூலை 1ஆம் தேதி முதல் பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு வகுப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.13 பாலிடெக்னிக் கல்லூரிகளில் 10 புதிய பாட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள நிலையில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது எனவும், பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் உயர்த்தப்படாது என்றும் கூறியுள்ளார்.



  • 14:13 (IST) 27 May 2022
    தேசிய கல்விக் கொள்கை கல்வியை மேம்படுத்தும் - இணை அமைச்சர் சுபாஷ்சர்கார் பேச்சு!

    திருவாரூரில் நடந்த தேசிய கல்விக் கொள்கை கருத்தரங்கில் காணொலி வாயிலாக பேசிய மத்திய இணை அமைச்சர் சுபாஷ்சர்கார், தேசிய கல்விக் கொள்கை, கல்வியை மேம்படுத்தும் வகையில் ஆய்வுகள் நிறைந்த கல்வியாக இருக்கும் என்றும், தேசியக் கல்விக் கொள்கை திட்டத்தில் தேவையான மொழிகளை தேர்ந்தெடுக்கும் வசதி உள்ளது என்றும் கூறியுள்ளார்.



  • 14:10 (IST) 27 May 2022
    தேசிய கல்விக் கொள்கை - ஆளுநர் நம்பிக்கை!

    திருவாரூரில் நடைபெற்ற தேசிய கல்விக் கொள்கை கருத்தரங்கில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, "தேசிய கல்விக் கொள்கை திட்டம் சுமூகமாக நடைமுறைக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. கல்வியில் மிகப்பெரிய மறுமலர்ச்சி மற்றும் புரட்சியை பிரதமர் மோடி ஏற்படுத்தி உள்ளார்" என்று தெரிவித்துள்ளர்.



  • 13:36 (IST) 27 May 2022
    தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல

    வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 13:31 (IST) 27 May 2022
    தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் சாலை மறியல் - அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை!

    செங்கல்பட்டு அருகேயுள்ள மறைமலை நகரில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.



  • 13:29 (IST) 27 May 2022
    கழிவுநீர் கலந்த நீரை குடித்த 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

    காரைக்கால் அருகே கழிவுநீர் கலந்த நீரை குடித்த 3 குழந்தைகள் உட்பட 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • 13:07 (IST) 27 May 2022
    மாநிலங்களவை தேர்தல்; திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

    மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்களான கிரிராஜன், ராஜேஷ்குமார், கல்யாணசுந்தரம் ஆகியோர் சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்



  • 12:45 (IST) 27 May 2022
    'கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு' -மாவட்ட ஆட்சியர்களுக்கு செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்!

    தமிழகத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதேபோல் சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை, அண்ணாநகர், பெருங்குடி, கோடம்பாக்கம் பகுதிகளிலும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.



  • 11:48 (IST) 27 May 2022
    12ஆம் வகுப்பு தேர்வு.. 32,625 பேர் பங்கேற்கவில்லை!

    தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தமாக 32,625 பேர் பங்கேற்கவில்லை. 6 பாட தேர்வுகளையும் 30,719 மாணவர்கள் எழுதவில்லை – தேர்வுத்துறை அறிவித்துள்ளது.



  • 11:22 (IST) 27 May 2022
    பள்ளிக்கல்வி திட்டங்களுக்கு தமிழில் பெயர்!

    கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. தாய்மொழி வழிக் கல்விக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். பள்ளிக்கல்வி திட்டங்களுக்கு அழகிய தமிழில் பெயர் சூட்ட வேண்டும் - சென்னை, பள்ளிக்கரணையில் புதிய தனியார் பள்ளி திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!



  • 11:01 (IST) 27 May 2022
    திராவிட அரசனாக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்!

    திராவிட அரசனாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். மதிப்பெண் அடிப்படையில் எடை போடாமல் மாணவர்களின் தனி திறமையை கவனிக்க வேண்டும்- சென்னை, பள்ளிக்கரணையில் புதிய தனியார் பள்ளி திறப்பு விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு



  • 10:37 (IST) 27 May 2022
    மேலும் ஓராண்டு தடை!

    குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் தயாரித்தல், விநியோகித்தலுக்கு மேலும் ஓராண்டு தடை விதித்து, தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.



  • 10:37 (IST) 27 May 2022
    ஓம் பிர்லாவுக்கு, கார்த்தி சிதம்பரம் கடிதம்!

    கடந்த சில ஆண்டுகளாகவே தன்னையும், தனது குடும்பத்தையும் விசாரணை அமைப்புகள் குறிவைக்கின்றன. நாடாளுமன்ற சிறப்புரிமையை சிபிஐ கடுமையாக மீறியதாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார்.



  • 09:20 (IST) 27 May 2022
    மதுரை-தேனி இடையே 12 வருடங்களுக்கு பின் ரயில் சேவை !

    மதுரை - தேனி ரயில் சேவை திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார் நிலையில் மதுரை-தேனி இடையே 12 வருடங்களுக்கு பின் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மதுரை - தேனி இடையிலான ரயில் கட்டணத்தொகை ரூ. 45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



  • 09:19 (IST) 27 May 2022
    திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

    இந்தியாவுக்கே வழிகாட்டும் முன்னோடியான திட்டங்களை வகுத்த மாபெரும் தலைவருக்கு சிலை திறப்பதை எண்ணி மகிழ்கிறேன், நெகிழ்கிறேன்! சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை நாளை திறக்கப்படுவதை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.



  • 09:18 (IST) 27 May 2022
    நேரு நினைவு தினம் அனுசரிப்பு!

    இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.



  • 09:17 (IST) 27 May 2022
    பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை!

    இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பணிக்கால அடிப்படையில் தனது 18வது வயதில் பிரக்ஞானந்தா பணியில் சேர்வார் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.



  • 08:29 (IST) 27 May 2022
    பிரக்ஞானந்தா 2வது இடம்!

    செசபிள் மாஸ்டர் ஆன்லைன் ரேபிட் செஸ் தொடரில், இறுதிப்போட்டியில் சீன வீரர் டிங் லிரனுடன் தோல்வியை தழுவி, இந்திய வீரர் பிரக்ஞானந்தா 2வது இடம் பிடித்தார்.



  • 08:29 (IST) 27 May 2022
    3 திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

    மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும், திமுக வேட்பாளர்கள் கிரிராஜன், ராஜேஷ்குமார், கல்யாணசுந்தரம் ஆகியோர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.



  • 08:29 (IST) 27 May 2022
    நளினிக்கு பரோல்!

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினிக்கு 5வது முறையாக பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 4 முறை பரோல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.



  • 08:29 (IST) 27 May 2022
    தேர்வுகள் ஒத்தி வைப்பு!

    சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 2ஆம் தேதி முதல் தொடங்க வேண்டிய தேர்வுகள், ஜூன் 15ஆம் தேதி முதல் நடைபெறும். சென்னைப் பல்கலை.யின் கீழ் இயங்கும் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்.



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment