Advertisment

Tamil News Highlights : தமிழ்நாட்டில் இன்று 2,458 பேருக்கு கொரோனா; 55 பேர் உயிரிழப்பு

Latest Tamil News : தீவிர ஆய்விற்குப் பிறகு நீட் தேர்வின் தாக்கம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு இன்று அறிக்கை அளிக்கிறது.

author-image
WebDesk
New Update
Tamil News Highlights :  தமிழ்நாட்டில் இன்று 2,458 பேருக்கு கொரோனா; 55 பேர் உயிரிழப்பு

Tamil News Highlights : தட்டுப்பாடு காரணமாக கோவாக்சின் தடுப்பூசி போடப்படாத நிலையில், மையத்தில் ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் 100 பேருக்கும், நேரடியாக வந்து தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் 100 பேருக்கும் இன்று தடுப்பூசி போடப்படும் என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. இது 2-ம் தவணை செலுத்துபவர்களுக்கு மட்டுமே போடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

நீட் தேர்வு தொடர்பாக முதல்வரிடம் இன்று அறிக்கை சமர்ப்பிக்கும் ஏ.கே.ராஜன் குழு

தமிழ்நாட்டில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் மாநில அரசு குழு ஒன்றை அமைத்தது. மேலும், நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால், மாற்று வழி குறித்தும், இதை அமல்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் எனக் கடந்த மாதம் 10-ஆம் வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தீவிர ஆய்விற்குப் பிறகு நீட் தேர்வின் தாக்கம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு இன்று அறிக்கை அளிக்கிறது.

ரூ. 250 கோடி டெண்டர்கள் ரத்து

தலைநகர் சென்னையை சீரமைக்கும் வகையில், சாலை மேம்பாடு, பூங்காக்கள் மற்றும் மழைநீர் வடிகால் புனரமைப்பு போன்ற பல்வேறு பணிகளை, ஒப்பந்ததாரர்களிடம் வழங்கி இருந்தது சென்னை மாநகராட்சி. டெண்டர் நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை எனத் தொடர் புகார்கள் எழுந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை சென்னை மாநகராட்சி ரத்து செய்திருக்கிறது.

வரதட்சணைக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்

கேரளாவில் சமீபத்தில் வரதட்சணை மரணங்கள் அதிகரித்த நிலையில், சில காந்திய இயக்கங்கள் சார்பில், தலைநகர் திருவனந்தபுரத்தில் வரதட்சணைக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது. இதில், ஆளுநர் ஆரீப்கான் கலந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். மாலை 4.30 மணி முதல், போராட்டம் முடியும் வரை ஆளுநர் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் படுதோல்வியடைந்த பாகிஸ்தான்

பர்மிங்ஹாமில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான், 9 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து, 48 ஓவர்களிலேயே 7 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை, இங்கிலாந்து 3-0 எனக் கைப்பற்றியது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:48 (IST) 14 Jul 2021
    சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

    சென்னையில் எழும்பூர், அண்ணா சாலை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.



  • 21:04 (IST) 14 Jul 2021
    தமிழ்நாட்டில் இன்று 2,458 பேருக்கு கொரோனா; 55 பேர் உயிரிழப்பு

    தமிழ்நாட்டில் இன்று 2,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 55 பேர் உயிரிழந்துள்ளனர்.



  • 20:19 (IST) 14 Jul 2021
    மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

    புதுச்சேரி மற்றும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என பிரதமர் மோடி மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.



  • 19:47 (IST) 14 Jul 2021
    நாளை மறுநாள் திமுக எம்.பி.க்கள் கூட்டம் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

    நாளை மறுநாள் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.



  • 19:19 (IST) 14 Jul 2021
    மாஸ்டர் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது ரிசர்வ் வங்கி

    ஜூலை 22 முதல் மாஸ்டர் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விதிகளை மீறி செயல்பட்டதால் மாஸ்டர் கார்டுகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஏற்கனவே மாஸ்டர் கார்டு பயன்படுத்துவோருக்கு இந்த புதிய விதிகள் பொருந்தாது.



  • 18:40 (IST) 14 Jul 2021
    கும்மிடிப்பூண்டியில் குளத்தில் மூழ்கி இறந்த ஐவரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி

    கும்மிடிப்பூண்டியில் குளத்தில் மூழ்கி இறந்த ஐவரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்த நர்மதா, சுமதி, ஜோதி, அஸ்விதா, ஜீவிதாவின் குடும்பங்களுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.



  • 18:13 (IST) 14 Jul 2021
    நீட் தேர்வை நடத்தவிடமாட்டோம் எனக்கூறிய விடியல் அரசு, இப்போதாவது ஏமாற்றுவதை நிறுத்துமா? - இபிஎஸ்

    நீட் தேர்வை நடத்தவிடமாட்டோம் எனக்கூறிய விடியல் அரசு, இப்போதாவது ஏமாற்றுவதை நிறுத்துமா என கேள்வி எழுப்பியுள்ள இபிஎஸ், நீட் தேர்வை ரத்து செய்ய வழி தெரியும் எனக் கூறிய ஸ்டாலின் தன் இயலாமையை மறைக்க என் மீது பழிபோடுகிறார் என கூறியுள்ளார்.



  • 17:43 (IST) 14 Jul 2021
    தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை

    தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.



  • 17:42 (IST) 14 Jul 2021
    தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை

    தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.



  • 17:28 (IST) 14 Jul 2021
    கேரளாவில் உண்ணாவிரதத்தில் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பங்கேற்பு

    கேரளாவில் வரதட்சணை உள்ளிட்ட விவகாரங்களில் பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து காலை முதல் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரதத்தில் தற்போது ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பங்கேற்றுள்ளார்.



  • 17:07 (IST) 14 Jul 2021
    மேகதாது அணை விவகாரம்; தமிழகத்தின் அனைத்து கட்சி குழு நாளை டெல்லி பயணம்

    மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் அனைத்து கட்சி குழு நாளை டெல்லி செல்கிறது. அனைத்து கட்சி குழு டெல்லியில் நாளை பிரதமரை சந்திக்க உள்ளது. ஏற்கனவே அனைத்து கட்சி கூட்டத்தில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது



  • 17:01 (IST) 14 Jul 2021
    "எங்கள் ஹீரோ எல்.முருகனை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததில் மகிழ்ச்சி" : குஷ்பு

    மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எல்.முருகனை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார் நடிகை குஷ்பு. இது குறித்து அவரது ட்விட்டர் பதிவில், "டெல்லியில் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எங்கள் ஹீரோ முருகன் பதவி ஏற்ற பிறகு, அவர் அலுவலத்தில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. பாஜகவில் அவர் தலைவராக இருந்த பதவிக்காலம்தான் என்னை இந்த கட்சியில் இணைய வைத்தது . நான் எப்பொழுதும் அதற்காக அவருக்கு நன்றியுடன் இருப்பேன். வாழ்த்துக்கள் ஜி” என்று பதிவிட்டுள்ளார்.



  • 16:48 (IST) 14 Jul 2021
    "முந்திரி ஏற்றுமதி கவுன்சிலை மூடக்கூடாது" - மத்திய அரசுக்கு ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தல்

    முந்திரி ஏற்றுமதி கவுன்சிலை மூடாமல் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் முந்திரி ஏற்றுமதியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



  • 16:47 (IST) 14 Jul 2021
    கொங்குநாடு தனி மாநிலமாக உருவாக்க தருமபுரியில் பாஜக கூட்டத்தில் தீர்மானம்!

    மேற்கு மண்டலமான கொங்கு பகுதியை ஒருங்கிணைத்து கொங்குநாடு தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என தருமபுரியில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



  • 16:21 (IST) 14 Jul 2021
    மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மீண்டும் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, அகவிலைப்படி 11 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

    மேலும், 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்ட அகவிலைப்படி இந்த மாதம் முதல் தேதியை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 16:18 (IST) 14 Jul 2021
    குழந்தை மித்ராவின் சிகிச்சைக்கான மருந்துக்கு வரி விலக்கு அளித்தற்கு பாஜகவின் வானதி நன்றி

    'சிறுமி மித்ராவின் மருந்துக்கு இறக்குமதி வரியை ரத்து செய்து குழந்தைக்கு இன்னொரு தாயாக மாறினீர்கள்' என கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.



  • 15:41 (IST) 14 Jul 2021
    தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, திருப்பத்தூர், தி.மலை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.



  • 15:39 (IST) 14 Jul 2021
    ஆசிரியர் தகுதி தேர்வு - ஓபிஎஸ் கோரிக்கை

    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதிச் சான்று குறித்து அரசாணை வெளியிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.



  • 14:24 (IST) 14 Jul 2021
    தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தொற்று பாதிப்புக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து வரும் நிலையில், பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.



  • 14:02 (IST) 14 Jul 2021
    தமிழகத்தில் திரையரங்கு திறப்பது எப்போது? அமைச்சர் பதில்

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தபபட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஆனால் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாத நிலையில், திரையரங்குகளை திறக்க ஆலோசித்து தான் முடிவெடுக்க முடியும் என அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார்.



  • 13:21 (IST) 14 Jul 2021
    அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் திங்கள் கிழமை தொடங்கவுள்ள நிலையில், வரும் 18-ந் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துளளது. கொரோனா 2-வது அலை பாதிப்பு, வேலை வாய்ப்பின்னை பெட்ரோல் டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுபப திட்டமிட்டு்ளள நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் திங்கள்கிழமை (ஜூலை 19) ஆகஸ்ட் 13-ந் தேதி வரை நடைபெறுகிறது.



  • 13:16 (IST) 14 Jul 2021
    நீட் தேர்வு குறித்து கேள்வி எழுப்ப அதிமுகவுக்கு உரிமை இல்லை - கே.பாலகிருஷ்ணன்

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நீட் தேர்வு தடை செய்ய வேண்டும் என்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நீட் தேர்வு விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப அதிமுகவுக்கு உரிமை இல்லை எனறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் மரம் நடும் விழாவை தொடங்கி வைத்த அவர் இவ்வாறு கூறினார்.



  • 12:52 (IST) 14 Jul 2021
    கூட்டு முயற்சியால் பாஜக வளரும் - அண்ணாமலை

    தமிழகத்தில் பாஜக தலைவராக புதிதாக பொறுப்பேற்க உள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, தமிழகத்தில் கூட்டு முயற்சியால் பாஜக வளரும் என்று கூறியுள்ளார்.



  • 12:19 (IST) 14 Jul 2021
    முதல்வருடன் பா.சிவந்தி ஆதித்தன்-சம்யுக்தா தம்பதி சந்திப்பு

    சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட மாலை மலர் நாளிதழின் இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன்-சம்யுக்தா ஆதித்தன் தம்பதி முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பில், தினத்தந்தி குழுமத் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தந்தி டிவி இயக்குநர் ஆதவன் ஆதித்தன் ஆகியோர் சந்தித்துள்ளனர்.



  • 12:17 (IST) 14 Jul 2021
    70 ஆண்டுகளுக்கு மேலாகியும் வறுமை ஒழிக்கப்படவில்லை - சென்னை உயர்நீதிமன்றம்

    சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் வறுமை இன்னும் ஒழிக்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 12:00 (IST) 14 Jul 2021
    நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும்

    தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்றும் பள்ளிகள் திறப்பு பற்றி புதுச்சேரி பின்பற்றும் வழிமுறைகளை கவனித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.



  • 11:12 (IST) 14 Jul 2021
    சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற பொதுமுடக்கம்

    கேரளாவில் இந்த வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் அற்ற முழு முடக்கம் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஜிகா வைரஸின் தாக்கமும் உயர்ந்து வருவதாலும் பொதுமுடக்கம் நீட்டிப்பு.



  • 11:09 (IST) 14 Jul 2021
    ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக்காதது வருத்தம்

    இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவை இலங்கை தொடரில் கேப்டனாக்காதது வருத்தமளிப்பதாக சிறுவயது பயிற்சியாளர் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.



  • 11:03 (IST) 14 Jul 2021
    சட்டவிரோதமாக பாஸ்போர்ட் வழங்கல்

    மதுரை புதுத்தாமரைத்தொட்டி பகுதியில் மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட பாஸ்போர்ட் அலுவலகத்தில் மூத்த கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் வீரபுத்திரன் என்பவர் சட்டவிரோதமாக பணம் பெற்றுக்கொண்டு பாஸ்போர்ட் வழங்குவதாக புகார் எழுந்ததை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.



  • 10:50 (IST) 14 Jul 2021
    பாஜக மிகப்பெரிய கட்சியாகும்

    பாஜகவை பொறுத்தவரை அனுபவம் வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும் என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.



  • 10:49 (IST) 14 Jul 2021
    38,792 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,792 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 624 பேர் உயிரிழந்துள்ளனர்.



  • 10:48 (IST) 14 Jul 2021
    ரூ.5 லட்சம் வழங்கினேன் - நடிகர் வடிவேல்

    முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்கி, ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் கொரோனாவை கட்டுப்படுத்திய முதல்வர் என்று முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டியிருக்கிறார் நடிகர் வடிவேலு. மீண்டும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.



  • 09:31 (IST) 14 Jul 2021
    தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு

    தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளி கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வருகிற ஜூலை 16-ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார்.



  • 09:29 (IST) 14 Jul 2021
    அக்டோபர் 10-க்குள் கலந்தாய்வு முடிக்கவேண்டும்

    அக்டோபர் 10-ம் தேதிக்குள் பொறியியல் படிப்பு கலந்தாய்வை நடத்தி முடிக்கவேண்டுமெனவும் முதலாமாண்டு வகுப்புகளை அக்டோபர் 25-ம் தேதிக்குள் தொடங்க வேண்டுமெனவும் ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது.



Neet Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment