காமன்வெல்த் போட்டிகள்
பர்மிங்காம் காமன்வெல்த் :குத்துச்சண்டை போட்டியின் 92 கிலோ எடைப்பிரிவில் இந்தியா வெற்றி . காலிறுதியில் இந்திய குத்துச்சண்டை வீரர் சாகர், செஷல்ஸின் எவன்ஸ் ஆக்னஸை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி பதக்கத்தை உறுதி செய்தார். ஆடவருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளி பதக்கத்தை வென்று சாதனை. பாரா பளுதூக்குதல் பிரிவில் தங்கம் வென்றார் இந்திய வீரர் சுதிர்.
அணை நிலவரம்
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2.45 லட்சம் கனஅடி இருந்து 2 லட்சம் கனஅடியாக குறைந்தது. ஒகேனக்கலில் நிலவும் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. மேட்டூர் அணையில் இருந்து 2.10 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் - 120.07 அடி, நீர் இருப்பு - 93,582 டிஎம்சி, நீர்வரத்து - 2,00,000 கன அடி, நீர் வெளியேற்றம் - 2,10,000 கன அடி உள்ளது.
மழை நிலவரம்
தொடர் கனமழை காரணமாக கேரளாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை. தமிழகத்தில் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 21:21 (IST) 05 Aug 2022மகளிர் இலவசமாக பயணிக்கும் வகையில் பிங்க் நிற பேருந்து நாளை அறிமுகம்
சென்னையில் மகளிர் இலவசமாக பயணிக்கும் வகையில் பிங்க் நிற பேருந்து நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் முதற்கட்டமாக 60 பேருந்துகள் ஓட்டத்தை நாளை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ துவக்கி வைக்கிறார்
- 21:20 (IST) 05 Aug 2022செஸ் ஒலிம்பியாட் : இந்திய 'ஏ' அணி வெற்றி
சென்னை மகாபலிபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஓபன் பிரிவு 'சி' அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய 'ஏ' அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
- 20:17 (IST) 05 Aug 2022கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக யாரேனும் புலன் விசாரணை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிபிசிஐடி புலன் விசாரணையை பாதிக்கும் வகையில் காணொலி காட்சிகளை பதிவிட கூடாது மீறினால் சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்படும் எனவும் சிபிசிஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 19:42 (IST) 05 Aug 2022உரிமம் காலாவதியான பள்ளி பேருந்து விபத்து : பள்ளி குழந்தைகள் 10 பேர் காயம்
சிவகங்கை அருகே உரிமம் காலாவதியான பள்ளி பேருந்து, சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளாதில், பள்ளி குழந்தைகள் 10 பேர் காயமடைந்தனர். பள்ளி வாகனத்தின் இன்சூரன்ஸ் காலாவதியாகி 2 வருடங்கள் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 19:41 (IST) 05 Aug 2022கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமையில் ஆலோசனை
கனியாமூர் மாணவி மரணமடைந்தை தொடர்ந்து விடுதி முறைப்படுத்தல் குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது
- 18:38 (IST) 05 Aug 2022சென்னையில் 5 இடங்களில் சோதனை
சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (ஆக.5) 5 இடங்களில் சோதனை நடத்தினார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக இன்று காலை டெல்லி உள்பட நாடு முழுக்க 47 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இந்தச் சோதனைக் குறித்த காரணங்கள் ஏதுவும் வெளியாகவில்லை.
- 18:35 (IST) 05 Aug 2022ஈரோடு புத்தக திருவிழா- மு.க. ஸ்டாலின் தொடங்கிவைப்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஈரோடு புத்தக திருவிழாவை காணொலி மூலமாக தொடங்கிவைத்தார்.
- 17:47 (IST) 05 Aug 2022பிரதமர் மோடியுடன் கௌதம் கம்பீர் சந்திப்பு
முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாரதிய ஜனதா கட்சியின் மக்களவை உறுப்பினருமான கௌதம் கம்பீர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
- 17:17 (IST) 05 Aug 2022அதிமுக பொதுக்குழு வழக்கு: நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகல்
அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரித்துவந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அந்த வழக்கில் இருந்து விலகியுள்ளார். முன்னதாக நீதிபதியை மாற்றக் கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியது.
இந்தக் கோரிக்கையை ஏற்க தலைமை நீதிபதி மறுத்துவிட்ட நிலையில், கடிதத்தை திரும்ப பெற்றார் ஓ.பன்னீர் செல்வம். இருப்பினும் வழக்கில் இருந்து தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகியுள்ளார். வழக்கை விசாரிக்கும் புதிய நீதிபதி குறித்து தலைமை நீதிபதி முடிவெடுப்பார்.
- 17:08 (IST) 05 Aug 2022ரூ.50 லட்சத்தை தாண்டிய டிக்கெட் விற்பனை
சென்னை மாமல்லபுரத்தில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில் டிக்கெட் விற்பனை ரூ.50 லட்சத்தை தாண்டியது.
6500 டிக்கெட்டுகள் விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 4714 டிக்கெட்டுக்கள் இதுவரை விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 16:31 (IST) 05 Aug 2022தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை - சென்னை மாநகராட்சி
சென்னை மெரினா, பெசண்ட் நகர், திருவான்மியூர் கடற்கரையில் இன்று முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி 14 வகையான் ப்ளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும் உற்பத்தி செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 15:59 (IST) 05 Aug 2022போதைப்பொருள் நடமாட்டம், பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு உறுதி - ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: போதைப்பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலும் ஒழிக்க தமிழ்நாடு அரசு உறுதி எடுத்துள்ளது. அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- 15:13 (IST) 05 Aug 2022நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் மன்னிப்பு கோரிய ஓ.பன்னீர்செல்வம் தரப்பு
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்குகளை வேறு நீதிபதி விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததற்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மன்னிப்பு கோரியது. “தங்கள் முன்பே வாதிட விரும்புகிறோம். நடந்தது நடந்ததாக இருக்கட்டும். திறந்த மனதோடு வழக்கை நடத்துங்கள்” என்று ஓ.பி.எஸ் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
- 14:30 (IST) 05 Aug 20226 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஜவகர், கார்த்திக், மணிவாசன், மங்கத்ராம் சர்மா, ஆனந்த், மதுமதி ஆகிய 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
- 14:15 (IST) 05 Aug 2022பில்லூர் அணையிலிருந்து நீர் திறப்பு
கோவை மாவட்டம் பில்லூர் அணை நீர்மட்டம் 97 அடியை எட்டிய நிலையில், அணையின் 4 மதகுகளில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
- 13:35 (IST) 05 Aug 2022கேரளாவுக்கு உபரிநீர் திறப்பு
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.50 அடியை எட்டிய நிலையில், கேரளாவிற்கு வினாடிக்கு 534 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
- 13:33 (IST) 05 Aug 2022ராகுல், பிரியங்கா காந்தி கைது
பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி ஆகிய பிரச்சனைகளில் மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், ராகுல், பிரியங்கா காந்தி, சசி தரூர் உள்ளிட்ட பல காங்கிரஸ் எம்பிக்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். பல இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் ஜந்தர் மந்தர் தவிர தேசிய தலைநகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- 12:55 (IST) 05 Aug 2022காங்கிரஸ் பேரணி
விலைவாசி உயர்வை கண்டித்து டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
- 12:54 (IST) 05 Aug 2022நீலகிரி, கோவையில் கனமழை
தமிழகத்தில் இன்று நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 12:17 (IST) 05 Aug 2022கச்சநத்தம் கொலை வழக்கு
கடந்த 2018ல் நடந்த கச்சநத்தம் 3 பேர் கொலை வழக்கில் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமாரன் தீர்ப்பு வழங்கினார்.
- 11:51 (IST) 05 Aug 2022கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ஸ்டாலின் கடிதம்
முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்தை விட நீர் வெளியேற்றம் அதிகமாக இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம்
- 11:50 (IST) 05 Aug 2022மீன்வளத்துறை சார்பில் ரூ. 43.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகம்
மீன்வளத்துறை சார்பில் ரூ. 43.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலக கட்டடங்கள் திறப்பு . சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டடங்களை திறந்து வைத்தார்.
- 10:36 (IST) 05 Aug 2022ரெப்போ வட்டி விகிதம் உயர்வு
ரெப்போ வட்டி விகிதம் 0.5% உயர்ந்து 5.4% ஆக அதிகரிப்பு. குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 4.9%ல் இருந்து 5.4%ஆக உயர்த்தியது ரிசர்வ் வங்கி. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி நடவடிக்கை - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்
- 10:35 (IST) 05 Aug 2022இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது- ராகுல் காந்தி
இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்கள் சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள். இந்தியாவில் ஜனநாயகம் என்பதே இல்லாத சூழல் உருவாகிவிட்டது - ராகுல் காந்தி விமர்சனம்
- 10:34 (IST) 05 Aug 2022ஓபிஎஸ் வலியுறுத்தல்
போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் - தமிழ்நாடு அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
- 10:33 (IST) 05 Aug 2022தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை
தமிழகத்தில் சென்னை உட்பட 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை. ரியல் எஸ்டேட், கட்டுமான உரிமையாளர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
- 08:56 (IST) 05 Aug 20227ம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக்கடலில் வரும் 7ம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- 08:52 (IST) 05 Aug 2022கேரளாவில் 6 அணைகளுக்கு ரெட் அலர்ட்
கனமழை காரணமாக கேரளாவில் 6 அணைகளுக்கு ரெட் அலர்ட் நீட்டிப்பு. பொன்முடி, கல்லார்குட்டி, கீழ் பெரியாறு, தன்னாயர், மூழியார், குண்டலா அணைகளுக்கு ரெட் அலர்ட் அறிவிப்பு
- 08:50 (IST) 05 Aug 2022கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி
கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி . சவுதி அரேபியாவில் இருந்து கொச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணிக்கு அறிகுறி.
- 08:49 (IST) 05 Aug 20225வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தென்காசி; குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அனைத்து அருவிகளிலும் 5வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை .
- 08:49 (IST) 05 Aug 2022கனமழை விடுமுறை
நாமக்கல், கொல்லிமலை தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை . தொடர்மழை காரணமாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் அறிவிப்பு.
- 08:48 (IST) 05 Aug 2022விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம்
விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம். டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகை நோக்கி காங்கிரஸ் கட்சியினர் பேரணி. சென்னையில் ஆளுநர் மாளிகை அருகே போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.