Tamil News Today Updates: நில தகராறில் துப்பாக்கி சூடு நடத்திய திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் இரண்டாவது நாளாக சிபிஐ விசாரணை மேற்கொள்கிறது. இதில் உதவி ஆய்வாளர் உட்பட மேலும் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மீண்டும் 4000-க்கு மேல் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்தது. சென்னையை தவிர, மற்ற மாவட்டங்களில் 3000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும் 1168 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. கொரோனா காரணமாக 68 பேர் உயிரிழந்த நிலையில், ஒரே நாளில் 3617 பேர் குணமடைந்தனர்.
ராஜஸ்தான் காங்கிரஸ் அரசின் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி சென்றிருந்த சச்சின் பைலட் காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தியை சந்திக்க முடியவில்லை என்பதால் நேற்று ராஜஸ்தான் திரும்பினார். உடனேயே தனக்கு 30 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக வாட்ஸ்அப் குழுவில் அறிவித்தார். இன்று அவர் பாஜக-வில் இணையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் செய்தி சேனல்கள் நேபாளத்தில் ஒளிபரப்பு செய்ய அந்தநாட்டு அரசு தடை விதித்துள்ளது. தூர்தர்ஷன் மட்டும் ஒளிபரப்பு செய்ய அனுமதி வழங்கியுள்ளது.
நேபாள நாட்டின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் தனியார் செய்தி சேனல்கள் செய்தி வெளியிடுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் நேபாள அரசு சார்பில் எந்தவிதமான அதிகாரபூர்வமான உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை. நேபாளத்தில் உள்ளது. கடவுள் ராமர் நேபாளி. இந்தியர் இல்லை என நேபாள ஊடகங்களை மேற்கோள் காட்டி அந்நாட்டு பிரதமர் கே.பி. சர்மா ஒலி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வானத்தை நோக்கி சுட்டதற்கு பொய் வழக்கு பதிவு செய்து எம்.எல்.ஏவை கைது செய்துள்ளது திட்டமிட்ட சதிச்செயல்
திமுகவை வன்முறைக் கட்சி எனக்கூறிய அமைச்சர் ஜெயக்குமாருக்கு கண்டனம்
திமுக எம்.எல்.ஏ சட்டத்தின் முன் நின்று நியாயத்தை நிலைநாட்டுவார்
- ஆர்.எஸ்.பாரதி
தேர்தல் நடத்தும் விதிமுறை 2019-20 சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்
- தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் @mkstalin வலியுறுத்தல்
* அரசியல் கட்சிகளைக் கேட்காமல் சட்டத்திற்கு புறம்பாக திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தை கொலை வழக்காக மாற்றியது சிபிஐ. முதல் குற்றவாளியாக உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் 4வது குற்றவாளியாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் என சிபிஐ வட்டாரங்கள் தகவல்.
ஏற்கனவே சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கொலை வழக்காக மாற்றம்
விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 191 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரே நாளில் 10 கர்ப்பிணிகளுக்கும் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 351 ஆக உயர்ந்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 15ம் தேதி முதல் பாட புத்தகங்கள் விநியோகம் செய்யபடும். வீடியோ பாடங்களும் வழங்கப்படுவதால் 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது லேப்டாப் கட்டாயம் எடுத்து வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் துறையினரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
சென்னை பெருநகர காவல் குழுவினரின் சோதனையில், நேற்று அமலில் இருந்த 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக 825 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 141 இருசக்கர வாகனங்கள், 6 ஆட்டோக்கள் மற்றும் 7 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 154 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உதவிடும் வகையில் கூகுள் இந்தியா சார்பில் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ( சுமார் ரூ.75 ஆயிரம் கோடி) வழங்கப்படும்.இந்தியாவில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.75,000 கோடி முதலீடு செய்யப்படும் என்று கூகுள் நிறுவனத்தின் சிஇஒ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 10 கர்ப்பிணிகளுக்கும் கொரோனா தொற்று ஏர்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2351-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 16 பேர் உயிரிழந்தனர். விருதுநகரில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 1432 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 919 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், சசிகலா என்ற இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த தேவேந்திரன் என்ற நபர் சென்னை வியாசர்பாடியில் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் ஏற்கனவே புருசோத்தமன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சையுடனான கலந்துரையாடல் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்தது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள சவால்கள்,தகவல் பாதுகாப்பு குறித்தும் விவாதித்தோம். கல்வி, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் கூகுளின் செயல்பாடு குறித்தும் கேட்டறிந்தேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பள்ளி கட்டணத்தில் 50 சதவீதத்தை வரும் வியாழக்கிழமைக்குள் செலுத்த சென்னை தனியார் பள்ளி நிர்வாகம் உத்தரவு. "55 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம்" செய்யப்பட்டுள்ளது. நீச்சல் குளத்திற்கு கட்டணம், நூலக கட்டணம் என பலவகைகளில் கட்டணம். கட்டணத்தை குறைக்க கோரி பெற்றோர் 50-க்கும் மேற்பட்டோர் பள்ளியில் முற்றுகை. கட்டணங்களை குறைக்க முடியாது என பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் திட்டவட்டம்
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் கணினிமயமாகின்றன. டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது டாஸ்மாக் நிர்வாகம். மதுபானங்களின் இருப்பு, விற்பனை விவரங்களை அறிக்கையாக தயாரித்து கணினிமயமாக்க டெண்டர் அறிவிப்பு. அனைத்து கடைகளையும், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தையும் தொழில்நுட்பம் மூலம் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி- சிபிஐ அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாமில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான குழு சிபிஐ அதிகாரிகளுடன் ஆலோசனை. தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு ஆவணங்களில் உள்ள சந்தேகங்கள் குறித்து ஆலோசனை நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் நிர்வகிக்கலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் லலித், இந்து மல்கோத்ரா அமர்வு அதிரடி தீர்ப்பளித்துள்ளனர். இடைக்கால ஏற்பாடாக திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைக்கவும் ஒப்புதல். புதிதாக நிர்வாக குழு அமைக்கும் வரை, நீதிபதி தலைமையிலான குழு கோயிலை நிர்வகிக்கும். கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் தீர்ப்பு
தமிழகத்தில் இதுவரை ரூ.17.90 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 8,47,574 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6,33,555 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 7,72,585 வழக்குகள் பதிவாகியுள்ளதாக, தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
அரசு அலுவலகங்களில் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள கோப்புகளுக்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டியுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து அலுவலகங்களுக்கும் முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா உத்தரவு. இன்று முதல் காலை 10.30 மணிக்குள் அரசு பணியாளர்கள் அலுவலகங்களுக்குள் வந்திருக்க வேண்டும். அரசு பணியாளர்கள் வருவதை அறிக்கை தயார் செய்து தினமும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறைக்கு அனுப்பவும் உத்தரவு.
மேலும் சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கும் ஒவ்வொரு சிறப்பு மருத்துவர், செவிலியர்கள் நியமிக்கப்பட்டு சென்னையில் ஒவ்வொரு நாளும் 500-550 வரையிலான மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை 10 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர். சென்னையில் உள்ள 1500க்கும் மேற்பட்ட வங்கிகளில் அத்தியாவசியம் இல்லாத சிறிய அளவிலான பணத்தை எடுத்தல், வங்கி அட்டைகளை புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகளை நிறுத்தச் சொல்லி வலியுறுத்தியுள்ளோம். இதன் மூலம் 80% கூட்டத்தை வங்கிகளில் தடுக்க முடியும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights