Tamil News Updates: ஓபிசி மருத்துவ மாணவர்களுக்கு, 50% இடஒதுக்கீடு இந்த ஆண்டே வழங்கக்கோரிய மேல் முறையீட்டு வழக்கில், நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் இந்த ஆண்டே 50% இடஒதுக்கீடு வழங்கக்கோரி உத்தரவிட முடியாது, எனத் தெரிவித்தது. இது குறித்து அதிமுக தரப்பில் சரியாக வாதாடவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உயிர் காக்கும் சிகிச்சைகள் மூலம், மருத்துவக்குழு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் 2-வது நாளாக 3000-க்கும் கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு. குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 31-ஆக குறைந்துள்ளது. வருகிற 29-ம் தேதி புதிய காற்றழுத்த பகுதி உருவாவதால், 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்கும் வரை திமுக-வின் போராட்டம் தொடரும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
இந்தியா - ஆஸ்ட்ரேலியா ஒரு நாள் போட்டிக்கான அணி விவரம்:
விராட் கோலி, ஷிகர் தவான், சுப்மான் கில், கே.எல்.ராகுல், சிரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹார்டிக் பாண்ட்யா, மாயங் அகர்வால், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்கூர்
ஆஸி. சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது.
காயம் காரணமாக டெஸ்ட், t/20, ஒருநாள் போட்டி என அனைத்து தொடரிலும் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டார்.
டி. நடராஜன் கூடுதல் பவுலராக இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.
டெஸ்ட் போட்டி: விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், பிருத்வி ஷா, கே.எல்.ராகுல், புஜாரா, ரகானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, சுப்மான் கில், சஹா , ரிஷாப் பந்த் , பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது.சிராஜ்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை கண்டித்து நாளை சிதம்பரத்தில் பாஜக மகளிரணி சார்பில் நடக்க திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை தடை விதித்துள்ளது. இந்த போராட்டத்தில், குஷ்பு, சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
" சுஜித்,மீண்டு வருவாய் என கோடானுகோடி பிரார்த்தனைகளை புறந்தள்ளி புதைந்துபோன கருப்பு நாள் இது ஊண் உறக்கமின்றி உனக்காக உறுதியோடு காத்திருந்த எங்களை கண்ணீரில் மூழ்க வைத்து நீ மறைந்து போனது மாளாத சோகமாய் மனதில் இருக்கிறது! மறுமுறை பிறந்து வா நாங்கள் காத்திருக்கிறோம்" என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதில் தமிழக ஆளுநர் காலம் தாழ்த்தி வருவது வருத்தம் அளிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கூறியுள்ளார்
உச்சநீதிமன்ற தீர்ப்பு வருத்தம் தருகிறது, ஏமாற்றம் தருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மத்திய அரசிடம் வழங்கிய தமிழக மருத்துவ கல்லூரி இடங்களில் 50% OBC இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டும் அமலாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப வசதிகள் வளர்ச்சிகண்டுள்ள இந்தக் காலத்தில், இட ஒதுக்கீட்டை உடனே அமலாக்க வேண்டும் என்பது சாத்தியமில்லாத கோரிக்கை அல்ல. மக்கள் விரோத முடிவுகள் என்றால் 'அதிரடியாக' அமலாக்கும் பாஜக, இட ஒதுக்கீட்டு உரிமையை காலம் தாழ்த்துவது உள்நோக்கத்துடன் கூடியதே. உச்ச நீதிமன்ற தீர்ப்பும் பாஜக நிலையை ஒட்டியே வந்துள்ளது, வருத்தம் தருகிறது ஏமாற்றம் தருகிறது" என்று தெரிவித்தார்.
ராணுவ உயரதிகாரிகள் பங்கேற்கும் நான்கு நாள் மாநாடு புதுதில்லியில் இன்று தொடங்கியது .
ராணுவ தலைமை தளபதி திரு எம் எம் நரவானே தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் ராணுவத்தின் செயல்திறனை மேலும் அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது
வந்தே பாரத் திட்டத்தின் 7 வது கட்டம் வரும் 29 ஆம் தேதி முதல் தொடங்கப்படுவதாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார். இந்த திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை மொத்தம் 27 லட்சம் பேர் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பியிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
தமிழக கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரையிலான கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்டத்தின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் தமிழக வேளாண்துறை அமைச்சர் அன்பு சகோதரர் துரைக்கண்ணு அவர்கள் நல்ல உடல் நலம் பெற்று குணம் அடைந்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
அகில இந்திய அளவில், மருத்துவக் கல்விக்கான இடங்களில், 50% இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “50%இடஒதுக்கீடு வழக்கில் அதிமுக அரசு துணிச்சலுடன் வாதாடவில்லை. இதனால் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மாணவர்களின் மருத்துவக் கனவை அதிமுக கலைத்துள்ளது. இரட்டை வேடம் போட்டு, கண் துடைப்பு நாடகம் நடத்தாமல், இந்த ஆண்டே இடஒதுக்கீட்டைப் பெற பிரதமருக்கு முதலமைச்சர் அழுத்தம் தர வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் இடஒதுக்கீட்டில் காட்டிய அவசரத்தைப், பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூகத்திற்காகவும் பிரதமர் காட்ட வேண்டும் என்று நாடு எதிர்பார்க்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், “
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் ரத்தம் படிந்த துணிகளை தூய்மைப்படுத்தி தடயங்களை மறைக்க போலீசார் முயற்சி செய்துள்ளனர் என்றும் இருவரின் ரத்தக் கறைகளும் காவல் நிலைய சுவர்கள், மேஜைகள், லத்திக் கம்புகள், கழிவறைகளில் படிந்துள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசிக தலைவர் திருமாவளவன்: “மருத்துவப் படிப்பில் 50% இட ஒதுக்கீடு நடப்பாண்டில் மறுக்கப்பட்டதற்கு பாஜக அரசே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையில் தமிழகத்தின் ஒருமித்த நிலைபாட்டை மத்திய அரசுக்கு உணர்த்த உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன்: “மருத்துவப் படிப்பில் நடப்பாண்டில் 50% இடஒதுக்கீடு வழங்குவதற்கு மறுத்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டு உரிமையைக் காப்பாற்றுவதற்கு அரசு இனியாவது அக்கறையோடு செயல்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை விவகாரத்தில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குட்டையை குழப்பி மீன் பிடிக்க விரும்புகிறார் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர் பி உதயகுமார் தேர்தல் நேரம் என்பதால் ஆளும் கட்சியை குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே காணொளியில் அறிக்கை வெளியிடுகிறார். கமல்ஹாசன் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் நாம் இருக்கிற கட்டமைப்பை வைத்துதான் இந்த பேரிடரை எதிர்கொள்ள வேண்டும் என்பதை கவனிக்க வேண்டும. அறிக்கைகளை வெளியிடுவது ஒன்றும் பெரிய காரியமல்ல களத்திலே நின்று காப்பாற்றுகிற பணியில் முதல்வர் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். எதில் எல்லாம் குட்டையை குழப்பி மீன் பிடிக்கலாம் என்று காத்திருப்பவர்கள் பெய்கிற இந்த வடகிழக்கு பருவ மழையிலும் குட்டையை குழப்பி மீன் பிடிக்கலாம் என்று நினைக்கிறார்கள்.” என்று கூறினார்.
சென்னை கொளத்தூரில் திருமண விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், திமுக எதிர்க்கட்சி என்பதால் அரசியல்தான் செய்யும். காலம் கடத்தி 7.5% இடஒதுக்கீடு மசோதாவை நீர்த்துப்போக செய்யும் வகையில் ஆளுநர் செயல்படுகிறார் என்று கூறினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “கன்னியாகுமரி மக்களவை தொகுதி எங்கள் தொகுதி; இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடும். 50% இடஒதுக்கீடு நடப்பாண்டில் மறுக்கப்பட்டதற்கு அதிமுக அரசின் அலட்சியம்தான் காரணம்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, “மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கான 50% இடஒதுக்கீடு நடப்பாண்டில் மறுக்கப்பட்டதற்கு அதிமுக அரசின் அலட்சியம்தான் காரணம்” என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக் 800 படம் சர்சையின்போது, அந்தப் படத்தில் நடிக்கவிருந்த விஜய் சேதுபதிக்கு இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆபாச மிரட்டல் விடுத்திருந்தார். அவர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்ய இண்டர்போல் மூலம் முயற்சி செய்து வந்தனர். இந்த நிலையில், விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த இலங்கை இளைஞர், விஜய் சேதுபதியிடமும், தமிழ் மக்களிடமும் மன்னிப்புக் கோரியுள்ளார்!
இது குறித்து அந்த இளைஞர், “என் வாழ்நாளில் இனி இதுபோன்ற தவறை நான் செய்ய மாட்டேன்; தங்கை குறித்த எனது தவறன ட்வீட்டிற்கு மன்னித்துவிடுங்கள் விஜய் சேதுபதி அண்ணா” என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க நடப்பாண்டில் உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி இந்த ஆண்டே 50% இடஒதுக்கீடு பெற பிரதமருக்கு உரிய அழுத்தம் தர வேண்டும். இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் பாஜகவுடன் கூட்டணி பேச்சுக்கே இடமில்லை என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி-க்கு 50% இடஒதுக்கீடு நடப்பாண்டில் வழங்க முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வருத்தமளிக்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் “கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவது அறிந்து அதிர்ச்சி அடைகிறேன்; அவர் முழு நலம் பெற்று அவர் மீண்டும் மக்கள் பணியாற்ற வர வேண்டும் என விரும்புகிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்பில் 50% இடஒதுக்கீடு நடப்பாண்டில் வழங்க முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு சமூக நீதிக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் எதிரானது என்று தெரிவித்துள்ள வைகோ மத்திய அரசுக்கு மதிமுக சார்பில் வன்மையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், நடிகர் ரஜினிகாந்த்தை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் ரஜினிகாந்த்தும் ஏ.சி.சண்முகமும் சந்தித்து ஆலோசனை செய்துள்ளனர்.
இந்தியாவிலேயே மருத்துவத் துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. அதிமுக அரசு பல முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 11 புதிய மருத்துவ கல்லூரிகள் மூலம் கூடுதலாக 1,650 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மற்ற அமச்சர்கள் மருத்துவமனைக்கு விரைகிறார்கள்.
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு (ஓ.பி.சி.) 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights