அந்தமான் கடற்பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும். குறிப்பாக, கன்னியாகுமரி, நீலகிரி, தேனி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்னியாகுமரியில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி அதிகளவில் நீர் வெளியாகுவதால், நூற்றுக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பலர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
புறநகர் ரயில்களில் கட்டுப்பாடு நீக்கம்
கோவிட்-19 காரணமாக புறநகர் ரயில் சேவைகளில் விதிக்கப்பட்ட அனைத்துப் பயணக் கட்டுப்பாடுகளும் நாளை (15 நவம்பர்) முதல் நீக்கப்படுகின்றன. இதன் மூலம், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மற்றும் சென்னை கடற்கரை - வேளச்சேரி ஆகிய பகுதிகளில் அனைத்துத் தரப்புப் பயணிகள் உட்பட பொதுமக்கள் நேரத் தடையின்றிப் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
சமையல் எரிவாயு விலையேற்றம் - என்ன நினைக்கிறார்கள் தமிழக மக்கள்?
உலகளவில் கொரோனாவால் பாதிப்பு 25.36 கோடியைக் கடந்தது
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.36 கோடியைக் கடந்துள்ளது. இதுவரை 22.93 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 51 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் தொடர்ந்து 11-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 21:37 (IST) 14 Nov 2021டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டி; ஆஸ்திரேலிய அணிக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து
டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு 173 ரன்களை இலக்காக நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது
- 20:48 (IST) 14 Nov 2021மழை பாதிப்பு; கன்னியாகுமரியில் நாளை முதல்வர் ஆய்வு
தொடர் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள, கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார்
- 19:40 (IST) 14 Nov 2021நிவாரண முகாமாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்காலிக அரசு நிவாரண முகாமாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிவித்துள்ளார். மேலும், மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெறுவதால் புழுதிவாக்கம், செம்மஞ்சேரி, கோவிலம்பாக்கம் பகுதிகளைச் சேர்ந்த மகளிர் உயர்நிலைப் பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை என அறிவித்துள்ளார்.
- 19:12 (IST) 14 Nov 2021கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
- 18:46 (IST) 14 Nov 2021ராஜாகண்ணு மனைவி பார்வதி அம்மாளுக்கு நடிகர் சூர்யா ரூ.10 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவிப்பு
இருளர் சமூகத்தை சேர்ந்த ராஜாகண்ணு மனைவி பார்வதி அம்மாளுக்கு நடிகர் சூர்யா ரூ.10 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார். ஜெய்பீம் படம் குறித்த கே.பாலகிருஷ்ணனின் வாழ்த்து கடிதத்துக்கு நன்றி தெரிவித்த கடிதத்தில் சூர்யா இந்த தகவலைக் கூறியுள்ளார்
- 17:58 (IST) 14 Nov 20212021 – 2022 ஆண்டிற்கான சம்பா நெற்பயிர்களுக்கு நாளைக்குள் பயிர்க்காப்பீடு செய்ய வேண்டும் - தமிழக அரசு
2021 – 2022 ஆண்டிற்கான சம்பா நெற்பயிர்களுக்கு நாளைக்குள் பயிர்க்காப்பீடு செய்ய வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் நாளைக்குள் பொதுச்சேவை மையங்கள், வேளாண் கூட்டுறவு சங்களில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- 17:40 (IST) 14 Nov 2021'ஜெய்பீம்' அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் – பாஜக தலைவர் அண்ணாமலை
எந்த ஒரு சமுதாயத்தையும் காயப்படுத்தாமல் 'ஜெய்பீம்' திரைப்படம் உருவாக்கி இருக்கலாம். இருப்பினும் 'ஜெய்பீம்' அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
- 17:07 (IST) 14 Nov 2021கோயில்களில் பிரதமர் உரை; தி.க தலைவர் கி.வீரமணி கண்டனம்
தி.க. தலைவர் கி.வீரமணி அறிக்கை: ஸ்ரீ ரங்கம், மதுரை கோயில்களில் எல்.இ.டி. திரையமைத்து பிரதமரின் உரையை பாஜகவினர் பார்ப்பது, கேட்பது சட்டப்படி சரியா? கோயில்கள் பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கூடாரமா? தமிழ்நாடு அரசும், அறநிலையத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சரே தனது பாதுகாப்பை குறைத்த நிலையில் சங்பரிவார் பிரமுகர்களுக்கு துப்பாக்கி பாதுகாப்பு எதற்கு? துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு என்பது வீண் செலவும், மக்களின் கவன ஈர்ப்பும் தானே மிச்சம் என்று தெரிவித்துள்ளார்.
- 16:10 (IST) 14 Nov 2021சி.பி.ஐ., அமலாக்கத்துறை இயக்குநர் பதவிக்காலம் நீட்டிப்பு
மத்திய குற்றப்பிரிவு (சிபிஐ), அமலாக்கத்துறை இயக்குநர் பதவிக்காலத்தை 3 ஆண்டிலிருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தும் அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். பணி நியமன ஆணையில் குறிப்பிடப்பட்ட 5 ஆண்டு காலத்தை நிறைவு செய்த பின்னர், பதவிக்கால நீட்டிப்பு வழங்கப்படாது என தகவல் வெளியாகி உள்ளது.
- 15:22 (IST) 14 Nov 2021மாணவி தற்கொலை விவகாரம்: தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சனிடம் முதற்கட்ட விசாரணை நிறைவு என தகவல்
கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சனிடம் முதற்கட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளதாக துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
- 15:14 (IST) 14 Nov 2021அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; நவம்பர் 18ல் கரையைக் கடக்கும் - வானிலை ஆய்வு மையம்
அந்தமான் அருகே நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 18ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடக்கும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- 14:30 (IST) 14 Nov 2021கன்னியாகுமரி மழை பாதிப்புகள் குறித்து முதல்வர் ஆலோசனை; அமைச்சர்கள் அதிகாரிகள் பங்கேற்பு
வடகிழக்கு பருவமழை மற்றும் கன்னியாகுமரி மழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், தலைமைச்செயலாளர் இறையன்பு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
- 13:49 (IST) 14 Nov 2021கொலீஜியத்துக்கு மூத்த வழக்கறிஞர்கள் கடிதம்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி இடமாற்ற பரிந்துரையை திரும்பப் பெற வேண்டும் என்று சென்னை பார் அசோசியேஷன் மூத்த வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற கொலிஜியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தலைமை நீதிபதி இடமாற்றத்தை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி, உயர்நீதிமன்ற நுழைவாயிலில் நாளை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
- 13:21 (IST) 14 Nov 202122 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை ஆய்வு மையம்
கடலூர், விழுப்புரம்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, சேலம், தர்மபுரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 13:13 (IST) 14 Nov 2021கன்னியாகுமரியில் அதி கனமழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 12:28 (IST) 14 Nov 2021மருத்துவ முகாம்களை தொடங்கி வைத்த முதலமைச்சர்
கொளத்தூர் பகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின். மேலும், அமைச்சர் பெரியசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் ஆய்வுக்கு பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
- 12:21 (IST) 14 Nov 2021குழந்தைகள் தினம் - முதல்வர் வாழ்த்து
குழந்தைகள் இந்நாட்டின் செல்வங்கள் - ஒளிச்சுடர்கள்: ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வகையில் திறமையானவர்கள், அழகானவர்கள் என்று குழந்தைகள் தினத்தையொட்டி மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- 11:28 (IST) 14 Nov 2021மாணவி தற்கொலைக்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்- அண்ணாமலை
கோவை மாணவி தற்கொலைக்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்; எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பம் இல்லை; நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- 11:04 (IST) 14 Nov 2021'முதல்வரின் முகவரி' புதிய துறை உருவாக்கம்
முதல்வரின் குறைதீர்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு அரசாணை வெளியீடப்பட்டுள்ளது. முதல்வர் முகவரி துறையின் சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 10:29 (IST) 14 Nov 2021அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும்
விடுமுறை நாள்களை ஈடுகட்ட சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் சனிக்கிழமை முதல் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
- 10:05 (IST) 14 Nov 2021கொரோனா கட்டுப்பாடுகள் நவ. 30ம் தேதி வரை நீட்டிப்பு
தமிழ்நாட்டில் மழை வெள்ள காலங்களில் டெங்கு போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதால் கொரோனா கட்டுப்பாடுகள் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள், அதிகம் கூடும் இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- 09:36 (IST) 14 Nov 2021டி20 உலக கோப்பை: ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இன்று மோதல்
டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் இன்று ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. துபாயில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில், முதல் முறையாக இரு அணிகளும் களம் காண்கின்றன.
- 08:42 (IST) 14 Nov 2021கோவை மாணவி தற்கொலை: சின்மயா பள்ளி முதல்வர் கைது
கோவை மாணவி தற்கொலை வழக்கில், சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த அவரை, கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பெங்களுரில் தலைமறைவாக இருந்த மீரா ஜாக்சனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
- 08:21 (IST) 14 Nov 20218ஆவது கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்
தமிழகம் முழுவதும் 8ஆவது கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் 50 ஆயிரம் மையங்களில் தொடங்கியது. சென்னையில் மட்டும 2 ஆயிரம் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.