Advertisment

மே உழைப்பாளர் தினம் : தமிழக முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து!!!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
may day

தொழிலாளர்களின் தினமாக இன்று மே தினம் இன்று நாடு முழுவதும் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. உழைக்கும் மக்கள் அனைவரும் தங்களின் மே தின வாழ்த்துக்களைத் தமிழக அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தனது வாழ்த்துகள் மட்டுமின்றி தொழிலாளர்களின் உரிமை மட்டும் மேம்பாடுகள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisment

எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர்:

cm edappadi k.palaniswami

உழைக்கும் மக்களின் சிறப்பினை உலகிற்குப் பறைசாற்றும் தினமாக மே தின நன்னாளில், உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த “மே தின” நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் வளர்ச்சிக்காவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் தங்கள் உதிரத்தை வியர்வையாக சிந்தி உழைந்திடும் தொழிலாளர் பெருமக்கள் அனைவரும், எல்லா நலன்களையும் வளங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, எனது அருமை தொழிலாளார் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த “மே தின” நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ:-

arignar anna, mdmk, vaiko, mdmk conference, arignar anna birth anniversary

ஒப்பந்தத் தொழிலாளர்கள் முறையை அறவே ஒழிக்க வேண்டும் என்று சட்டப்பூர்வமாக தொழிற்சங்கங்கள் போராடி வரும் நிலையில், ஒப்பந்த முறையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன.

ஒப்பந்தத் தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சிவிட்டுத் தூக்கி எறியும் வகையில் ‘வேலை வரம்பு ஒப்பந்தம்’ என்ற பெயரில் மோடி அரசு சட்டத்திருத்தம் மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது. தியாகம் செய்து பெற்ற உரிமையைப் பேணிப் பாதுகாக்கவும், தொழிலாளர் வர்க்கம் ஓரணியில் நின்று போராடவும் இந்த மே நாளில் உறுதியை மேற்கொள்வோம். உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர் அனைவருக்கும் இதயமார்ந்த மே நாள் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்:-

ttv dhinakaran..,,

உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள் என்றும் உழைக்கும் இதயங்கள் ஒன்றிணைந்து தங்கள் உரிமைகளை வென்றெடுத்ததை குறிக்கும் நன்நாளாம் மே தினத்தை கொண்டாடும் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எனது இதயம் நிறைந்த மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

dr. ramadoss

உழைப்பாளர்களின் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்திய பாட்டாளிகளின் நாளை மே நாளாகக் கொண்டாடும் உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் பாட்டாளிகளுக்கு தமிழகத்திலும், இந்தியாவிலும் எந்த அங்கீகாரமும், பணிப் பாதுகாப்பும் இல்லை. அதனால் அவர்கள் உரிமைகளை கோர முடியாமல் அடிமைகளாக வாழும் சூழலுக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தநிலையை மாற்றுவதற்காகப் பாட்டாளிகளும், பொதுமக்களும் இணைந்து மீண்டும் ஒரு உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-

gk-vasan

உழைக்கும் வர்க்கத்தினருக்கும், அவர்களின் குடும்பத்திற்கும், பொதுமக்களும், தனியார் மற்றும் அரசும் எப்போதும் ஆதரவாக இருக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன். தொழிலாளர்கள் தங்களுடைய உரிமைகளைப் போராடி பெற்ற மே தினத்தில் உழைக்கும் தோழர்களுக்கு த.மா.கா. சார்பில் மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்:-

publive-image

தொழிலாளர்கள் அனைவரும் நரேந்திரமோடி அரசுக்கு எதிராக ஓரணியில் திரண்டு போராடுவது அவசியமாகும். இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் உழைத்ததில் தொழிலாளர்களின் பங்கு மகத்தானது. அத்தகைய உழைப்பை வழங்கி தங்களை அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர் வர்க்கத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-

k.balakrishnan.,1

அ.தி.மு.க. அரசு தொழிலாளர் உரிமைகளைப் பறிப்பது, ஜனநாயக போராட்டங்களை முடமாக்குவதிலேயே குறியாக உள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதுடன், ஒப்பந்த தொழில்முறையால் தொழிலாளர்கள் ஈவு இரக்கமின்றி சுரண்டப்படுகின்றனர்.

நவீன தாராளமயமாக்கல் கொள்கையை முறியடித்து, மாற்றுக்கொள்கையின் அடிப்படையில் முன்னேற, மதவெறி சக்திகளை பின்னுக்குத்தள்ளி, மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மை போன்ற விழுமியங்களைப் பாதுகாக்க, உழைக்கும் மக்களை ஒன்று திரட்டி போராட்டக்களத்தை விரிவாக்கிட இந்த மே நன்னாளில் உறுதியேற்போம்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்:-

Mutharasan cpi

இந்தியாவில் என்றுமில்லாத வகையில் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. வேலை உத்தரவாதம், ஊதிய உயர்வு, வைப்புநிதி உள்ளிட்ட தொழிலாளர் பாதுகாப்பு திட்டங்கள் யாவும் மத்திய பா.ஜ.க. அரசால் பறிக்கப்பட்டு வருகிறது.

மாநில ஆட்சி, மத்திய ஆட்சியின் தவறான கொள்கைக்கு துணைபோகிறது. இத்தகைய சூழலில், சுரண்டலற்ற, சாதி, மத, பேதமற்ற, புதியதோர் உலகம் செய்ய அனைவரும் உறுதி ஏற்போம் என கூறி மேதின நல்வாழ்த்துகளை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தெரிவித்துக் கொள்கிறோம்.

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-

thirumavalavan

ஒடுக்கப்பட்ட மக்களும், பாட்டாளி வர்க்கமும் ஒன்றிணைவதோடு மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைந்தால்தான் வகுப்புவாத பேராபத்தை முறியடிக்க முடியும் என்பதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது. அதற்காகப் பாடாற்ற இந்த மே தினத்தில் உறுதி ஏற்கிறோம்.

 

மேலும் இந்த மே தின வாழ்த்துகளை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஏ.நாராயணன், புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் தி.தேவநாதன் யாதவ், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் எச்.வசந்தகுமார், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா உள்ளிட்டோரும் மே தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment