பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
புதுச்சேரி கால்நடை துறை அலுவலகத்தில் அதிரடியாக இன்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் குறித்த நேரத்தில் பணிக்கு வராத 13 ஊழியர்களுக்கு விடுமுறை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி அவர்களுக்கு ஷோகாஸ் நோட்டீஸ் கொடுத்தது அரசு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது*
புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை என்ற புகார் பரவலாக இருந்து வந்தது. மேலும் சில சமூக ஆர்வலர்கள் காலையிலே அரசு அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள நிலைமைகளை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்திலும் பதிவிட்டு அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தனர்.
இதனை அடுத்து புதுச்சேரி தலைமை செயலர் ராஜு வர்மா உத்தரவின் பேரில் உயர் அதிகாரிகள் ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆட்சியாளர்களும் சில அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலுவலகத்தில் உள்ள குறைகள் மற்றும் ஊழியர்களின் வருகை பதிவேட்டையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள கால்நடைத்துறை தலைமை அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் இன்று காலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது 40 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணிபுரியும் இடத்தில் 2 துணை இயக்குநர்கள் உள்பட 13 பேர் பணிக்கு வராமல் இருப்பது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் 13 பேரையும் விடுப்பு எடுத்ததாக அறிவித்தார். பின்பு பணிக்கு வராததற்கு அவர்களிடம் விளக்கம் கேட்டு ஷோக்காஸ் நோட்டீஸ் அனுப்பியது, ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.
புதுச்சேரியில் பாஜக ,என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வந்தாலும் ஆட்சிக்கு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்ற புகார் ஆட்சியாளர்களால் கூறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil