சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிக்காகோ மாகாணத்தில் பேசிய ”எனது அருமை சகோதர சகோதிரிகளே” என்ற உரை இன்று வரை அனைவரின் மனதிலும் இருக்கும்.
அந்த உரை பேசி கிட்டத்தட்ட 125 ஆண்டுகள் ஆகின்றது. அந்த உரை இந்து மதத்தின் மறுமலர்ச்சிக்காக பேசப்பட்ட மிக முக்கிய உரைகளில் ஒன்றாகும்.
அதனை நினைவு கூறும் வகையில் நேற்று கோவையில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார்கள். இதற்கு தலைமை வகித்தார் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.
விழாவில் காணொளி காட்சி மூலம் பங்கேற்ற நரேந்திர மோடி தமிழக இளைஞர்களுக்கு தமிழில் வணக்கம் செலுத்தி அழைப்பு ஒன்றினை விடுத்தார்.
சுவாமி விவேகானந்தர் பற்றி மோடி
காணொளியில் நரேந்திர மோடி பேசும் போது ”விவேகானந்தரைப் பெற்ற இடம் வங்கமாக இருந்தாலும் அவரை வளர்த்தெடுத்தது என்னவோ தமிழகம் தான்” என்றார். மேலும் இந்தியாவின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்க விவேகானந்தர் பாணியை பின்பற்றி நிறைய தமிழ் இளைஞர்கள் நாட்டினை வளர்ச்சியின் பாதையில் விட்டுச் செல்ல வேண்டும் என்று கூறினார்.
விழா முடிந்த பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார் மாஃபா.பாண்டியராஜன், “மத்திய அரசின் திட்டங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவில் அதிக பதக்கம் வென்ற மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பதையும்” பிரதமர் நினைவு கூறியதைப் பற்றி குறிப்பிட்டார்.