ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் அளித்துள்ள பேட்டியில், "அரசியலில் குதிக்கிறேன் என்று துணிச்சலாக ரஜினிகாந்த் அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன். ரஜினிக்கும், ரஜினியின் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்த அவரது லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது வாழ்த்துகள். இன்றைய சூழ்நிலையில், ஒரு ஊழலற்ற நிர்வாகத்தை தருவதற்காகத் தான் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறியிருப்பதையும் வரவேற்கிறோம். தமிழகத்தில் ஊழலை எதிர்த்து போராடுவதற்கு மேலும் பலம் தேவைப்படுகிறது. இந்த காலக் கட்டத்திலும் நான் அரசியலுக்கு வரவில்லை என்றால் எனக்கு மன்னிப்பே கிடையாது என சொல்லியிருக்கிறார்.
வருங்கால திட்டங்களை அவர் எப்படி தீட்டுகிறார் என்பதும், நிர்வாக ரீதியாக அவர் எப்படி பரிமளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால், அதுவரை அவர் அரசியல் பேசப் போவதில்லை என்று கூறியிருக்கிறார். களங்கம் இல்லாத களத்தை உருவாக்கத் தான் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று அவர் சொல்லி இருப்பதையும் நான் பாராட்டுகிறேன். மாநில அரசு பலம் பொருந்திய அரசாக இருந்தால் தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும். ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது" என்றார்.