அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில், அதிமுக- பாஜக கூட்டணித்தொடரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தனர்.
இரண்டு நாள் அரசு முறை பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காலை சென்னை வந்தடைந்தார்.
இதனையடுத்து, சென்னை, கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை 4.30 மணியளவில் தமிழக அரசு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்டம், கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகையில் 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய நீர்த்தேக்கத்தை அமித் ஷா மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இதுதவிர, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள், கோவை அவினாசி சாலையில் ரூ.1,620 கோடி மதிப்பிலான உயர்மட்ட சாலைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
உள்கட்டமைப்பு திட்டப் பணிகளைத் திறந்து வைப்பதற்கு முன்னதாக மறைந்த அதிமுக தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெ ஜெயலலிதா ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மலர் அஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து உரையாற்றிய அமித் ஷா, தமிழக அரசுக்கு, மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக அமல்படுத்தும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. கொரோனா தடுப்பு மட்டுமல்ல, நிர்வாகத் திறனிலும் தமிழகம் இந்த ஆண்டு முதலிடம் வகிக்கிறது. தமிழக மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்துள்ளது "என்றும் தெரிவித்தார்.
குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி: தமிழகத்தில் குடும்ப அரசியல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஊழல், குடும்ப அரசியல், சாதி அரசியல் நடைபெறுகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் வாரிசு தலைமுறை அரசியல் அகற்றப்படும். 2ஜி ஊழலில் தொடர்புடைய திமுக, ஊழலைப் பற்றி பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் குடும்பத்தின் மீதான ஊழல் புகார்களை பார்த்துவிட்டு பிறகு ஊழல் புகார்களை சொல்லுங்கள் என்று கூறினார்.
மேலும், திமுக தலைவர்கள் அடிக்கடி மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு தீங்கு செய்வதாகக் கூறுகின்றனர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணியில் 10 ஆண்டுகளாக அங்கம் வகித்த திமுக, தமிழகத்துக்கு என்ன செய்தார்கள். பட்டியல் தர முடியுமா? மன்மோகன் சிங் ஆட்சியில் தமிழகத்துக்கு ஒதுக்கிய நிதியைவிட இரு மடங்கு நிதி தமிழகத்துக்கு பிரதமர் மோடி ஆட்சியில் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்
அதிமுக - பாஜக தேர்தல் கூட்டணி கிட்டத்தட்ட முடிவாகியிருப்பதால், ரஜினி தேர்தல் கட்சித் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறைந்து வருவதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.