தமிழகத்தில் நாளை முதல் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களும் பயன்பெறும் வகையில், குடும்பத்துக்கு ரூ.2,500 ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு நீள கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வா் பழனிசாமி கடந்த மாதம் தனது தேர்தல் பரப்புரையின் போது அறிவித்தார்.
இதனையடுத்து, பொங்கல் பரிசுத் தொகை மற்றும் சிறப்பு தொகுப்பை வழங்குவதற்கான டோக்கன்கள் அவரவர் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கப்பட்டது. திங்கட்கிழமை முதல் இம்மாதம் 13ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, ஒருநாளை முற்பகல் 100 பேர், பிற்பகல் 100 பேர் என பிரித்து பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. எனவே, குடும்ப அட்டைத் தாரர்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களில் பரிசுத் தொகையை பெற வேண்டிய நாள், நேரம் ஆகியவையும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, 4-ந் தேதிக்குரிய டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே நாளை பொருட்களை வாங்க முடியும். முற்பகலில் பொருட்களை வாங்க முடியாத நபர்கள் பிற்பகலில் தங்கள் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும், டோக்கனில் குறிப்பட்ட நாள் படி பொருட்கள் வாங்க முடியாவிட்டால், கடைசி நாளான 13-ந்தேதி சென்று வாங்கி கொள்ளும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களை வரிசையில் நிற்கவைக்காமல் முன்னுரிமை வழங்கப்படவேண்டும். ஆண்களுக்கு தனி வரிசை, பெண்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தி நெரிசலை தவிர்க்க வேண்டும்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் ரூ.2,500ஐ ஒரே நேரத்தில் வழங்க வேண்டும். ரொக்கப் பணத்தை ரூ.2,000 மற்றும் ரூ.500 தாளாக வழங்க வேண்டும். இல்லாதபட்சத்தில் ஐந்து 500 ரூபாய்களாக வழங்க வேண்டும். ஏக்காரணம் கொண்டும் ரொக்க பணத்தை உறையில் வைத்து வழங்கக்கூடாது. ரொக்கப் பணம் அனுப்பப்பட்டதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இது தொடர்பாக புகார்களுக்காக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும். புகார்கள் இருப்பின் நடமாடும் கண்காணிப்பு குழுவுக்கு தெரிவித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.
முன்னதாக, தமிழக அரசு பொங்கல் பரிசாக வழங்கும் இரண்டாயிரத்து 500 ரூபாயை கட்சி பாகுபாடின்றி நியாயவிலைக் கடைகள் மூலமே வழங்க வேண்டுமென்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மாநில அரசை வலியுறுத்தினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.