சேலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடத்தப்பட்ட தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்தில் கொடி ஏற்றிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் 1956-ம் ஆண்டு நவம்பர்1-ந்தேதி மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அப்போது மெட்ராஸ் பிரஸிடன்சியில் இருந்து சில பகுதிகளை பிரித்து கர்நாடகா ஆந்திர கேரளா என 3 மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. இந்த நாளை தமிழ்நாடு தினமாக கொண்டாட வேண்டாம் என்றும், மெட்ராஸ்க்கு முன்னாள் முதல்வர் அண்ணா தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய ஜூலை 18-ந் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு எதிர்கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடந்த நவம்பர் 1-ந் தேதி சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில், தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.,கூட்டத்துக்கு முன்னதாக மூவேந்தர்களின் சின்னங்கள் பொறித்த கொடியை சீமான் ஏற்றினார்.
இந்த கூட்டம் நடைபெற்ற திருமண மண்டபத்தில் பலர் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்ததாக கூறி கிராம நிர்வாக அலுவலர் ராஜா என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், மொழி பிரிவினை, கொரோனா விதி மீறல், அனுமதியின்றி கூட்டம் நடத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil