Tamilnadu News Update : விவசாய இணைப்புகளில் மின் மீட்டம் பொருத்தும் பணி விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், அதிமுக செய்தால் அது ரத்தம் அதுவே திமுக செய்தால் தக்காளி சட்னியா என்று கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழநாடு மின்சார வாரம் சார்பில் விவசாயிகளுக்கும், குடிசை வீடுகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அது தவிர்த்து மற்ற வீடுகள் கடைகள் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்திற்கும் மின் மீட்டர்கள் பொறுத்தப்பட்டு மின்சாரக்கட்டணம் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு இணைப்பிலும் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்ற அளவை தெரிந்துகொள்ளும் வகையில் மின் மீட்டர் பொருத்தாமல் புதிய இணைப்பு வழங்க கூடாது என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் மின் மீட்டர் இல்லாத இணைப்புகளில் விரைவில் மின் மீட்டர் பொருத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதை தொடர்ந்து புதிய இணைப்புகளுக்கு மின்மீட்டர் பொறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மின் மீட்டர் பொறுத்தப்பட்டாலும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் விநியோகம் செய்வது நிறுத்தப்படமாட்டாது என்று அரசு தரப்பில் கூறி வந்தாலும், மின் மீட்டர் பொருத்தும் பணி விவசாயிகளிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் தரப்பில் கடுமையாக கண்டனங்கள் எழுந்து வருகின்றன,
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாட்டில் முதன்முதலாக சிறு குறு விவசாயிகளுககு இலவச மின்சாரம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டு பின்னர் அத்திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் நீடிக்கப்பட்டது. அன்மை காலமாக விவசாயத்திற்கான மின்சார இணைப்புகளில் மின் மீட்டர் பொருத்தும் பணிகள் மும்பரமாக நடைபெற்று வருவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
2002-2003- ஆண்டு நடைபெற்ற வரவு –செலவு திட்டத்தின் மீதான விவாதம் 02-04-2002- அன்று தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற போது திமுக உறுப்பினர் எ.வ.வேலு அவர்கள் நிதிநிலை அறிக்கை பக்கம் 13-ல் தமிழ்நாடு மின்சார வாரியம் மாநிலத்தில் வழங்கியுள்ள மின் இணைப்புகள் அனைத்திற்கும் மின்னளவை கருவிகள் பொருத்து முழுத்திட்டம் ஒன்றை செயல்படுத்தும் என்று குறிப்பிட்டு இருப்பாக குறிப்பிட்டு விவசாயிகள் எல்லாம் இலவச மின்சாரத்தை அனுபவித்து கொண்டிருக்கிற நேரத்திலே ஒரு மீட்டர் வைக்க வேண்டும் என்று சொன்னால் அது என்ன பொருள் என்று புரியவில்லை என்று கூறினார். அதாவது மீட்டர் பொருத்துவதற்கு திமுக சார்பில் கருத்து கூறப்பட்டது.
2020-ம் ஆண்டு மின்சார சட்டமுன்வடிவு மத்திய அரசால் வெளியிடப்பட்ட போது, இந்த சட்டமுன்வடிவு விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தையும், வீட்டு பயனீட்டாளர்களுக்கான 100 யூனிட் இலவச மின்சாரத்தையும் நிறுத்தும் ஒரு முயற்சி என்று கூறி, அ.தி.மு.க. அரசை கண்டித்து விமர்சித்தவர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர்.
அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் இன்று தமிழ்நாட்டின் முதல்- அமைச்சராக இருக்கின்ற நிலையில், தி.மு.க. எதை எதிர்த்ததோ அது செயல்பாட்டிற்கு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகளை வழங்கி பேசிய முதல்-அமைச்சர், சில புள்ளி விவரங்கள், ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கிய மிகப்பெரிய சாதனை போல சித்தரித்து, இது போன்ற அரசு இந்தியாவிலேயே இல்லை என்று பேசினார். ஆனால் இந்த புதிய மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்தப்படுவதைப் பற்றி வாய் திறக்கவில்லை.
இன்றைக்கு அந்த இணைப்புகளில் எல்லாம் மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாகவும், இது மட்டுமல்லாமல், இதுவரை மீட்டர் இணைப்புகளிலும் மீட்டர் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. இது குறித்து மின்சார வாரிய அதிகாரி தெரிவிக்கையில், விவசாயத்திற்கு இலவசமாக தொடர்ந்து மின்சாரம் வழங்க வேண்டும் என்றும், கட்டணம் வசூலிக்க மீட்டர் பொருத்தப்படவில்லை என்றும், எவ்வளவு மின் பயன்பாடு உள்ளது என்பதை அறியத்தான் என்றும் கூறியுள்ளார்.
இதைத்தானே அம்மாவும் சொன்னார்கள். அ.தி.மு.க. சொன்ன போது அதை விமர்சித்தவர்கள், இப்போது அதை செய்து கொண்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க. செய்தால் அது ‘ரத்தம்’, தி.மு.க. மேற்கொண்டால் ‘தக்காளி சட்னி’ என்ற நகைச்சுவை தான் நினைவிற்கு வருகிறது.
அதிமுக செய்தால் அது "ரத்தம்" திமுக மேற்கொண்டால் "தக்காளி சட்னியா"?விவசாய இணைப்புகளில் மின்மீட்டர் பொருத்தும் பணி விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மின்மீட்டர் பொருத்தும் பணியை உடனடியாக நிறுத்திவிட்டு, மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்வதற்கு தேவையான நடவடிக்கையை எடுத்திடுக! pic.twitter.com/aCwkBxE0N5— O Panneerselvam (@OfficeOfOPS) December 28, 2021
மீட்டர் பொருத்தாமல் எந்த ஒரு புதிய மின் இணைப்பும் வழங்கக்கூடாது. இதுவரை மீட்டர் இல்லாத இணைப்புகளிலும் மீட்டர் பொருத்த வேண்டும் என்று மத்திய அரசின் உத்தரவிற்கு இணங்க எல்லா மின்களிலும் மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம், எதிர் காலத்தில் கட்டணம் வசூலிப்பதற்காகத்தான் மீட்டர் பொருத்தப்படுகிறது என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.
ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு, ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு என்று இல்லாமல், விவசாயிகளின் அச்சத்தை நீக்கும் வகையில் மீட்டர் பொருத்தும் பணியை உடனடியாக நிறுத்திவிட்டு, மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்வதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு முதல்- அமைச்சரை அ.தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.