10% இடஒதுக்கீடு வழங்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அனைத்து கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று நடைபெற்றது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்ட திருத்தம் செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த உத்தரவு தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற இந்த அனைத்து கட்சி கூட்டத்தில், திமுக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், ரவிக்குமார், காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், கொங்கு மண்டல தேசிய கட்சியின் சின்ராஜ், மனித மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், நாகை மாலி, சின்னத்துரை, பாட்டாளி மக்கள் கட்சியின் பாலு, வெங்கடேஸ்வரன் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுக மற்றும் பாஜக புறக்கணித்துள்ள இந்த கூட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதவு தெரிவித்து அரசியல் கட்சி தலைவர்கள் உரையாற்றினர். இதனைத் தொடர்ந்து இந்த 10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிரான உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“