Tamilnadu News Update : தேசிய நெடுஞ்சாலையில் சுங்கவரிக்கு தமிழகம் மற்றும் கேரளா முறையே 14 மற்றும் 2 கோடி ரூபாய் செலுத்துவதாக தமிழகம் மற்றும் கேரளா மாநில போக்குவரத்து துறை அமைச்சர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை நேரில் சந்தித்த கேரளா போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ பாரத் சீரியஸ் பதிவு குறித்து ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிய வாகனப் பதிவு முறை “பாரத் சீரியஸ்” பதிவு குறித்து தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களும் இணைந்து முடிவெடுக்கும் என கூறியுள்ளார்.
மேலும் மத்திய போக்குவரத்து அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட பாரத் தொடர் பதிவு மூலம் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு வாகனங்களை தடையின்றி எளிதாக மாற்ற முடியும். இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக போக்குவரத்து மற்றும் நிதி அமைச்சர்களுடன் விவாதித்தோம். இதுகுறித்து தமிழக முதல்வரிடம் எடுத்துரைப்போம். கேரளாவும், தமிழகமும் மட்டும் பாரத் தொடரை அமல்படுத்தவில்லை. இது தொடர்பாக பொதுவான முடிவை எடுக்க வேண்டும்,என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும், கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட எட்டு மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்திய போக்குவரத்து கவுன்சில் கூட்டத்தில் தென் மாநிலங்கள் போக்குவரத்து துறையில் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பொதுப் போக்குவரத்திற்கு இரு மாநிலங்களும் கூட்டாக மத்திய உதவியை நாட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேரளாவுக்கான பொது போக்குவரத்து பேருந்து சேவையை மீண்டும் தொடங்கிய தமிழக அரசுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார். இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன், போக்குவரத்து துறை தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசித்ததாகவும், அனைத்து பிரச்னைகளுக்கும் முதல்வர் இறுதி முடிவு எடுப்பார் என்றும் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil