Tamilnadu Assembly Election 2021 : நெல்லை மாவட்டத்தில் காவல்துறை துணை ஆணையர் வெள்ளத்துரையின் மனைவி தேர்தலில் போட்டியிடுவதால், அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய சந்தன கடத்தல் வீரப்பனை எண்கவுண்டர் செய்ததில் முக்கிய பங்காற்றியவர் வெள்ளத்துரை. நெல்லையில் மாநகர காவல்துறை கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த இவர், காவல்துறையில் 'என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்' என்று அழைக்கப்படுகிறார். மேலும் காவல் துறையில் நன்மதிப்பை பெற்றுள்ள இவர், தனது மனைவி ராணி ரஞ்சிதம் பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கிய இந்த தொண்டுநிறுவனத்தின் மூலம், மக்களுக்கு இவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.
இந்நிலையில், தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக தேமுதிவுடன் கூட்டணி அமைத்து அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதில் கடந்த வாரம் வெளியான அமமுக வேட்பாளர்கள் பட்டியலில், காவல்துறை துணை ஆணையர் வெள்ளதுரை மனைவி ராணி ரஞ்சிதம் அம்பாசமுத்திரம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் மனைவி போட்டியிடும் தொகுதியில் வெள்ளதுரை பணியாற்றுவதால், இவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியுள்ளதாக நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது பணி மற்றும் மக்களுக்கு தொண்ட செய்து மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்ற காவல்துறை துணை ஆணையர் வெள்ளத்துரை தற்போது காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"