தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், சமீபத்தில் அரசியலில் இருந்து விலகியவருமான வி.கே.சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசியல் களம் சட்டசபை தேர்தலுக்காக முழுவீச்சில் தயாராகி வரும் நிலையில், நேற்றுடன் இந்த தேர்தலுக்கான் பிரச்சாரம் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சிகள் வாக்குப்பதிவு தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்ப்பது எப்படி? வாக்காளர்கள் தங்களது பூத் சிலிப் பெறுவது எப்படி என்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள வாக்குப்பதிவு தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள தேர்தல் ஆணையம், தற்போது வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் முதல்வரின் தோழி சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்ல முகவரியில் இதுவரை வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்த சசிகலா அந்த முகவரியில் இருந்தே தனது வாக்கை செலுத்தி வந்துள்ளார்.
ஆனால் தற்போது போயர்ஸ் கார்டன் இல்லம் அரசுடைமையாக்கப்பட்ட நிலையில், போயர்ஸ் கார்டன் வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலா பெயர் நீக்கப்பட்டது. தொடர்ந்து சசிகலா தற்போது தி.நகர் இல்லத்தில் வசித்து வரும் நிலையில், தற்போதைய முகவரியில் வாக்காளர் பட்டியலில் இணைக்க சசிகலா விண்ணப்பிக்கவில்லை என்பதால் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil