நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு 33 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அமைச்சரவையில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழலில் இன்று அமைச்சரவை கூடியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு நிலப்பதிவுக்கான வழிகாட்டு மதிப்பு அதிகரிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் இந்த வழிகாட்டு மதிப்பு அதிகரிக்கப்பட்டது. இதன்காரணமாக பத்திரப்பதிவு அதிகமாக நடைபெறமால் குறைந்தது. மேலும், விளைநிலத்திற்கு பட்டா வழங்க நீதிமன்றம் தடைவிதித்தது. இதனால், கடந்த ஓராண்டில் மட்டும் பத்திரப்பதிவில் அரசுக்கு ரூ.1500 கோடி இழப்பு ஏற்பட்டது. மேலும், ரியல் எஸ்டேட் துறையிலும் சிரிவு ஏற்பட்டது. இதன்காரணமாக தற்போது நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு 33 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அமைச்சரவையில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது நாளை (9.6.17) முதல் அமலுக்கு வருகிறது.
இந்த சந்தை மதிப்பு வழிகாட்டியினை குறைப்பதனால் அரசுக்கு ஏற்படக் கூடிய வருவாய் இழப்பினை ஈடு செய்ய விற்பனை, பரிமாற்றம், தானம், மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அல்லாத நபர்களுக்கு எழுதிக் கொடுக்கப்படும் ஏற்பாடு போன்ற ஆவணங்களுக்கான பதிவு கட்டணத்தினை 4% ஆக நிர்ணயம் செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதுவும் நாளை முதல் அமலுக்கு வருகிறது.