ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ளது. திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நடக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கும்படி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ஒன்று, இரண்டு அல்லது 3 ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கிய ஒவ்வொரு தொகுப்பிற்கும் ஒரு பறக்கும் படை அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பறக்கும் படையில் ஒரு நீதிபதி, இரண்டு அல்லது மூன்று காவலர்கள் இடம்பெற வேண்டும் எனவும், 24 மணி நேரமும் இயங்கும் வகையில் தேவைக்கேற்ப பறக்கும் படை அமைக்க வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
உள்ளாட்சி தேர்தல்கள் நேர்மையாக நடைபெற மாதிரி நடத்தை விதி கண்டிப்பாக அமலில் உள்ளதை பறக்கும் படைகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் விதிமீறல்கள், அச்சுறுத்தல், மிரட்டுதல், சமூக விரோத செயல்கள், வாக்காளர்களுக்கு மது மற்றும் பணம் வழங்குதல் தொடர்பான புகார்கள் மீது பறக்கும் படைகள் முழுக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள விளம்பர தட்டிகள், தேர்தல் பொருட்கள், போதை பொருட்கள், மது, ஆயுதங்கள், அன்பளிப்பு ஆகியவற்றையும் வேட்பாளர், அவரது முகவர், கட்சி தொண்டர் உள்ளிட்டோர் தகுதியான ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்படும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள ரொக்கத்தையும் பறக்கும் படை பறிமுதல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil