தமிழகத்தின் பழம்பெரும் அரசியல்வாதிகளில் ஒருவரான குமரி ஆனந்தனுக்கு தமிழக அரசு சார்பில் வீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான ஆணையை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் குமரி மங்கலம் பகுதியை சேர்ந்த தியாகி அரிகிருஷ்ணன், என்பரின் மகனான குமரி ஆனந்தன் கடந்த 1933-ம் ஆண்டு பிறந்தார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், பெருந்தலைவர் காமராஜரின் சீடர், மக்கள் நலனுக்காக தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டவர் என பல்வேறு அடையாளங்கள் கொண்டவர் குமரி ஆனந்தன்.
4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை பாராளுமன்ற உருப்பினராகவும் இருந்துள்ள இவர், தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நல வாரியத்தலைவராகவும் பணியாற்றியவர். இவர், தமிழக அரசு சார்பில் வீடு வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், நடவடிக்கை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் அவருக்கு அண்ணா நகர் கோட்டத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்பில் வீடு வழங்கியுள்ளார்.
இந்த வீடு வழங்குவதற்காக அரசு ஆணையை முதல்வர் ஸ்டாலின் குமரி ஆனந்தனை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார். இந்நிகழ்ச்சியில் வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“