பி.ரஹ்மான் கோவை
கோவை துடியலூர் குப்பைத் தொட்டியில் கிடந்த ஆண் நபரின் இடது கை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அழகு நிலைய ஊழியரின் கை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் இடது கை மட்டும் கண்டறியபட்டது.
அந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. துடியலூர் ஆய்வாளர் மற்றும் 8 உதவி ஆய்வாளர்கள் அடங்கிய 8 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த விசாரணையில் குப்பை தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட கை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரபு (39) என்பரின் கை என்பது தெரியவந்துள்ளது. கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றி வந்த பிரபுவின் செல்போன் கடந்த 15"ஆம் தேதியில் இருந்து ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு போலீசாரும் இங்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து பிரபுவின் உறவினர்களை அழைத்து குப்பை தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட கையை போலீசார் காண்பித்துள்ளனர். அப்போது அந்த பிரபுவின் கைதான் என்பதை உறவினர்கள் உறுதி செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பிரபு என்ன ஆனார், அவர் கொல்லப்பட்டாரா அல்லது அவர் கை மட்டும் வெட்டப்பட்டுள்ளதா என்பது தொடர்பான தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர். இதனிடையே விசாரணையில் இறந்த பிரபுவின் உடல் பாகங்கள் துடியலூர் சந்தை அருகே உள்ள கிணற்றில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், முதலில் கை அடுத்த 2 நாட்களில் கிணற்றில் தனித்தனியாக உடல்பாகங்கள் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் கோவை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் மேற்பார்வையில் கோவை சரக காவல்துறை துணை தலைவர் முத்துசாமி வழிகாட்டுதலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் முன்னிலையில் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையில் எட்டு தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த விசாரணையில் பிரபுவின் வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட 7" கைரேகைகளில் இரண்டு கைரேகைகள் துடியலூரில் கிடைத்த கையின் கைரேகையுடன் ஒத்துப்போனது. தொடர்ந்து பிரபு மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் பிரபு என்பவர் காந்திபுரம் பகுதியில் அழகு நிலையத்தில் வேலை செய்து வருவதாகவும் அவர் குடியிருந்து வந்த பகுதியில் வசிக்கும் 39 வயதுடைய திருமணமான பெண்ணுடன் பழக்கம் இருந்ததும் தெரியவந்தது.
அந்த பெண் சரவணம்பட்டி பகுதியில் அழகு நிலையத்தில் பணி செய்து வருகிறார். இந்த பழக்கம் தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தின் காரணமாக பெண்ணின் நண்பர்கள் அமுல் திவாகர் 34 , கார்த்திக் 28, ஆகியோர் பிரபுவை காந்திமா நகரில் உள்ள வீட்டில் வைத்து கொலை செய்து பிரபுவின் உடலை 12 பாகங்களாக வெட்டி தனித்தனியாக பல்வேறு இடங்களில் வீசி சென்றுள்ளனர்
இதனைத் தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் இறந்த பிரபுவின் வெட்டப்பட்ட 8" துண்டு உடல் பாகங்களை கைப்பற்றியும் இவ்வலக்கில் தொடர்புடைய 3 பேரை கைது செய்தும் இவ்வழக்கினை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து இந்த கொலை வழக்கு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் 8 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் சினிமா பாணியை விட தலையை கண்டுபிடிக்கும் முன்பே கையை வைத்தே கொலையானவரை அடையாளம் கண்டோம். காணாமல் போனவர்களின் தகவல்களை எடுத்து கைரேகைகளை சேகரித்து இறந்தவர் விவரங்களை தேடினோம். காட்டூர் காவல் நிலையத்தில் மிஸ்ஸிங் புகாரில் வந்த பிரபுவின் விவரம் மற்றும் அவரின் கைரேகையை அவரது வீட்டில் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்ததை சேகரித்து மர்மமாக கிடைத்த கையை வைத்து இறந்தவர் பிரபு என்பதை உறுதிப்படுத்தினோம். பிரபு வீட்டிற்கு இரண்டு பேர் வந்து அழைத்துச் சென்றனர். அதன் சிசிடிவி இருந்தது.
அதை வைத்து விசாரணையை தீவிர படுத்தினோம்.அதேபோல பிரபுவின் செல்போன் உரையாடலை வைத்து குற்றவாளிகளை தேடினோம். கவிதா, திவாகர் ஆகியோர் செல்போன் ஒரே நேரத்தில் காந்திமாநகரில் ஸ்விட்ச் ஆப் ஆனது.அதை தொடர்ந்து அவர் மீது எழுந்த சந்தேகத்தில் கைது செய்தோம். இறந்தவரின் 8 உடல் பாகங்களை கண்டெடுத்துள்ளோம்.
காவல்துறை சோதனை பகுதியை பார்த்து குற்றவாளிகள் கையை குப்பைத்தொட்டியில் வீசி சென்றுள்ளனர். ஆகவே சோதனை என்பது காவல்துறைக்கு முக்கியமானதாக உள்ளது. தீய பழக்கமே குற்றத்திற்கு காரணமாக உள்ளது. தனிப்படை குழுவினர் கைரேகைக்கு மிகவும் சிரமப்பட்டனர்.
கவிதாக்கு பிரபுவுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. கவிதாவின் புகைப்படத்தை வைத்து பிரபு மிரட்டியதால் காந்திமாநகரில் உள்ள வீட்டில் வைத்து கொலை நடைபெற்றுள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் கொலை செய்யப்பட்ட பிரபுவின் தலை திருப்பூர் அருகே உள்ள கிணற்றில் இருந்தது. இந்த சம்பவத்தில் மூன்று பேருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், உள்ளிட்ட பல அதிகாரிகள் உடன் இருந்தனர். இதையடுத்து மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் சிறப்பாக பணியாற்றி குற்றவாளிகளை கைது செய்த துணை கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையிலான குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். முதற்கட்டமாக 30 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கவிதா, அமுல் திவாகர் ,கார்த்திக் ஆகிய மூன்று பேரும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்களை விசாரித்த நீதிபதி கோபாலகிருஷ்ணன் மூன்று பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். அக்டோபர் 6"ம் தேதி மீண்டும் மூன்றும் பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.