பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை சீனாவில் இருந்தே உற்பத்தி செய்யப்பட்டு கொண்டுவரப்படுவதாக கூறப்படும் நிலையில், அவற்றை தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக அரசு பலவீனமாக உள்ளது. எனவே நீட் விவகாரத்தில் மத்திய அரசையோ, நீதிமன்றத்தையோ அனுக முடியவில்லை. நீட் தேர்வில் மற்ற மாநில மாணவர்களுடன் நமது மாணவர்களால் போட்டியிட முடியயாத நிலையில், இது தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்களை கடுமையாக பாதிக்கும்.
தமிழகத்தில் பாஜக ஆதிக்கம் செலுத்த முயல்கிறது. ஆனால், பாஜகவிற்கு தமிழகத்தில் அஸ்திவாரமே இல்லை. அதிமுகவை உடைத்து ஒரு அணியை தன் கையில் வைத்திருக்கலாம் என பாஜக நினைத்த நிலையில், தற்போது உடைந்துள்ள அதிமுக-வின் மூன்று அணிகளுமே பாஜக-வின் பிடியில் இருக்கிறது.
அதிமுகவில் தற்போது உள்ள நிலையில் 10 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்தாலும், தமிழகத்தில் தேர்தல் தான் வரும்.பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை சீனாவில் இருந்தே உற்பத்தி செய்யப்பட்டு கொண்டுவரப்படுவதாக கூறப்படுகிறது. அப்படி இருக்கையில் அவற்றை தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று கூறினார்.